விரைவில் ஜெயலலிதாவின் பொருட்கள் ஏலம்.. வழக்கறிஞராக கிரண் எஸ் ஜாவலி நியமனம்.. கர்நாடகா அரசு அதிரடி
பெங்களூர்: சொத்து குவிப்பு வழக்கில் மறைந்த தமிழ்நாடு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் விரைவில் ஏலமிடப்பட உள்ளது. இந்த நிலையில் ஏலம் நடைமுறை தொடர்பாக கிரண் எஸ் ஜாவலியை வழக்கறிஞராக நியமனம் செய்து கர்நாடகா அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழ்நாடு முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 2016ம் ஆண்டு மரணமடைந்தார். முன்னதாக ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் சிக்கினார். ஜெயலலிதாவுடன், அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீதும் குற்றம்சாட்டப்பட்டது. இவர்கள் 4 பேருக்கும் எதிராக சொத்து குவிப்பு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு பெங்களூரில் உள்ள தனி நீதிமன்றம் விசாரித்து தீர்ப்பு வழங்கியது. ஜெயலலிதா உள்பட 4 பேருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பை ஜான் மைக்கேல் குன்கா வழங்கினார்.
இந்த தீர்ப்பை எதிர்த்து அவர்கள் பெங்களூரில் உள்ள கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இதில் தனி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் கர்நாடகா உயர்நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்தது. மாறாக தனி நீதிமன்றம் வழங்கிய 4 ஆண்டு சிறை தண்டனையை உறுதி செய்தது. இந்த தீர்ப்பின்போது ஜெயலலிதா மரணமடைந்து இருந்தார். இதனால் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேர் மட்டும் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் 3 பேரும் சிறை தண்டனையை நிறைவு செய்த நிலையில் விடுதலையாகி உள்ளனர்.
இதற்கிடையே தான் சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக ஜெயலலிதாவிடம் இருந்து ஏராளமான பட்டுப்புடடைவகள், தங்க வைர நகைகள், காலணிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த பொருட்கள் அனைத்தும் பெங்களூரில் உள்ள கருவூலத்தில் உள்ளது. இந்த கருவூலத்தில் 11 ஆயிரத்து 344 விலை உயர்ந்த சேலைகள், 750 ஜோடி காலணிகள், கைக்கெடிகாரங்கள், தங்க, வைர நகைகள் இருக்கின்றன.
கருவூலத்தில் பயன்படுத்தாமல் இருக்கும் இந்த பொருட்களை ஏலம் விட வேண்டும் என தொடர்ந்து கோரிக்கைகள் வைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தான் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பொருட்களை ஏலம்விட கர்நாடக அரசு வழக்கறிஞரை நியமனம் செய்துள்ளது. அதன்படி கிரண் எஸ் ஜாவலியை வழக்கறிஞராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். விரைவில் ஜெயலலிதாவின் பொருட்கள் ஏலம் விடப்பட உள்ளது.
********












Click it and Unblock the Notifications