பள்ளிச் சிறார்கள் காண்டம், கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்த தடை இல்லை.. கர்நாடகா அரசு விளக்கம்
பெங்களூர்: கர்நாடகா மாநிலத்தில் பள்ளிச் சிறுவர்கள் காண்டம் பயன்படுத்த தடை விதிக்கவில்லை என கர்நாடகா மாநில அரசு விளக்கம் அளித்துள்ளது.
பெங்களூரில் உள்ள பள்ளிகளில் மாநில கல்வித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது 8, 9, 10 வகுப்புகளில் படிக்கும் மாணவர்களின் பைகளில் மொபைல் போன்களுடன் ஆணுறைகள், கருத்தடை மாத்திரைகள், சிகரெட்டுகள், லைட்டர்கள் போன்றவை இருந்தது தெரியவந்தது.
மாணவர்களிடமிருந்து அந்தப் பொருட்களைக் கைப்பற்றி, விசாரணை நடத்தப்பட்டது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏற்கெனவே பள்ளி மாணவர்கள் மதுபானம் அருந்துவது , கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துகளை பயன்படுத்துவது போன்றவற்றால் சீரழிந்து வருவதாக தகவல்கள் வெளி வருகின்றன.

பள்ளி மாணவர்கள்
இந்த நிலையில் பெங்களூரில் பள்ளி மாணவர்கள் ஆணுறைகளையும் கருத்தடை மாத்திரைகளையும் வைத்திருந்தது சமூக ஆர்வலர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியிருந்தது. இந்த சூழலில் கர்நாடகா மருந்துக் கட்டுப்பாட்டு துறை 18 வயதுக்குக் குறைவானவர்களுக்கு ஆணுறை, கருத்தடை மாத்திரைகள், வலி நிவாரணி போன்றவற்றை விற்க தடை விதித்து சுற்றறிக்கை அனுப்பியதாக தகவல் வெளியானது.

எதிரொலி
இந்தச் செய்தியின் எதிரொலியாக கருத்தடை சாதனங்களுக்குத் தடை விதிப்பது சரியல்ல என்ற விமர்சனங்களும் எழுந்தன. கருத்தடை சாதனங்களுக்குத் தடை விதிப்பதால் சிறுவர்கள் வேறு தவறான பாதையை நோக்கிப் போகக் கூடும் என சமூகஆர்வலர்கள் கவலை தெரிவித்து வந்தனர். கருத்தடை சாதனங்களுக்கு தடை விதித்தால் பாலியல் சார்ந்த நோய் பரவலுக்கும் எதிர்பாராத கருத்தரிப்புக்கும் வழிவகுக்கலாம் என அவர்கள் எச்சரித்தனர். ஆணுறைகளுக்கு தடை விதித்தால் திருமணத்திற்கு முன்பே கருத்தரிக்கும் பெண்கள் அவ்வப்போது கருக்கலைப்பு செய்து அவர்களது உடல்நிலை கடுமையாக பாதிக்கக் கூடும் என்றும் சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

கர்நாடகா அரசு
இந்த நிலையில் கர்நாடக அரசு இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் தெரிவித்துள்ளது. கருத்தடை சாதனங்களுக்குத் தடை விதிப்பது தொடர்பாக சுற்றறிக்கை எதுவும் அளிக்கவில்லை. ஆனால் மருந்து விற்பனையாளர்கள் கருத்தடை சாதனங்களைக் கேட்கும் சிறார்களுக்கு அறிவுரையை வழங்க வேண்டும்.

சிறார்களுக்கு ஆணுறை
எனவே சிறார்கள் ஆணுறையை வாங்க எந்த தடையும் இல்லை என அரசு தரப்பில் சொல்லப்பட்டுள்ளது. மதுபானங்கள், சிகரெட்டுகள் 18 வயதுக்குக் கீழ் இருப்போருக்கு விற்பனை செய்ய வேண்டாம் என்ற விதிகள் சில இடங்களில் பின்பற்றப்படுகின்றன. அது போல் ஆபாச படங்களை 18 வயதுக்குக் கீழ் இருப்போர் பார்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications