மம்தாவுக்கு பேரிடி.. மே.வங்க மறுதேர்தலில் 2 நாட்களுக்கு முன் விலகிய திரிணாமுல் வேட்பாளர்!
கொல்கத்தா: மேற்குவங்க மாநிலத்தில் ஃபால்டா சட்டசபை தொகுதிக்கு நாளை மறுநாள் மறுதேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஜஹாங்கீர் கான் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இவரது இந்த முடிவு மம்தா பானர்ஜி மற்றும் அவரது கட்சியினரை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

மேற்கு வங்கத்தில் ஏப்ரல் 23, ஏப்ரல் 29 என 2 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடந்தது. மொத்தம் 294 சட்டசபை தொகுதிகள் உள்ளதால் 147 தொகுதிகளில் வெற்றி பெறும் கட்சி ஆட்சியை பிடிக்கும். இந்த தேர்தலில் முதல் முறையாக பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. மொத்தம் 207 தொகுதிகளில் பாஜக வாகை சூடியது.
முதல்வராக இருந்த மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 80 தொகுதிகளில் மட்டுமே வென்று ஆட்சியை இழந்தது. இதன்மூலம் 2011, 2016, 2021 என தொடர்ந்து நடந்து வந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
மேலம் மம்தா பானர்ஜி பாபனிபூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
இந்த தேர்தலில் காங்கிரஸ் 2 தொகுதிகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு இடத்திலும், மற்றவர்கள் 3 தொகுதிகளிலும் வெற்றி பெற்றனர். இதையடுத்து பாஜகவின் சுவேந்து அதிகாரி முதல்வரானார். இவர் பாபனிபூர் தொகுதியில் மம்தா பானர்ஜியை வீழ்த்தியிருந்தார். முன்னதாக இருப்பினும் ஃபால் டா சட்டசபை தொகுதிக்கு நடத்தப்பட்ட தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இந்த தொகுதியில் சில இடங்களில் இவிஎம் இயந்திரங்களில் வேட்பாளர்களின் சின்னங்கள் மீது ஸ்டிக்கர், டேப் ஒட்டப்பட்டு இருந்தது. இதனால் தேர்தல் ரத்து செய்யப்பட்டு மறுதேர்தல் அறிவிக்கப்பட்டது.
இந்த மறுதேர்தல் நாளை மறுநாள் (மே 21)ம் தேதி நடைபெற உள்ளது. அதன்பிறகு மே 24ல் ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இந்த தொகுதியில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் ஜஹாங்கீர் கான் என்பவர் வேட்பாளராக இருந்தார். மறுவாக்குப்பதிவுக்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில் இன்று ஜஹாங்கீர் கான் தேர்தலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது மம்தா பானர்ஜிக்கு பேரிடி செய்தியாக பார்க்கப்படுகிறது.
தற்போது தேர்தல் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள ஜஹாங்கீர் கான் அதற்கான காரணத்தை இன்னும் விளக்கவில்லை. மேலும் இவர் மம்தா பானர்ஜி கட்சியின் அடுத்த தலைவராக வரும் மருமகன் அபிசேக் பானர்ஜி உடன் நெருக்கமான நட்பு கொண்டிருப்பவர் ஆவார். அபிசேக் பானர்ஜி தற்போது டைமண்ட் ஹார்பர் நாடாளுமன்ற தொகுதியின் எம்பியாக உள்ளார். இந்த தொகுதிக்கு உட்பட்டது தான் தற்போது மறுதேர்தல் நடக்கும் ஃபால்டா. இதனால் அபிசேக் பானர்ஜி தனது நெருங்கிய ஆதரவாளரான ஜஹாங்கீர் கானுக்கு வாய்ப்பு வழங்கிய நிலையில் தற்போது அவர் தேர்தல் போட்டியில் இருந்து விலகி உள்ளார்.
இந்த ஃபால்டா தொகுதி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாகம். கடந்த 2011, 2016, 2021 ஆகிய தேர்தல்களில் இந்த கட்சியின் வேட்பாளர்கள் தான் வெற்றி பெற்றனர். கடந்த 2021 சட்டசபை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சங்கர் குமார் நாஸ்கர் வென்ற நிலையில் இந்த முறை ஜஹாங்கீர் கானுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் தற்போது அவர் தேர்தலில் இருந்து விலகி மம்தா பானர்ஜி மற்றும் அவரது மருமகன் அபிசேக் பானர்ஜிக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications