TVK Horse Trading: செந்தில் பாலாஜி சகோதரர் அசோக்குமார் தலைமறைவு? கரூரில் வலைவீசி தேடும் போலீஸ்
கரூர்: திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸார், தலைமறைவாக உள்ள அசோக்குமாரை கரூர் உள்ளிட்ட இடங்களில் தேடி வருகிறார்கள்.
தமிழக அரசியலில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு மிகப்பெரிய 'அரசியல் யுத்தம்' வெடித்துள்ளது. முதலமைச்சர் விஜய் தலைமையிலான டிவிகே ஆட்சியை கவிழ்க்க சதி நடப்பதாக எழுந்த புகார், இப்போது ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையிலான நேரடி மோதலாக மாறியுள்ளது.

என்ன நடந்தது?
தவெக கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ இளையராஜாவிடம், சட்டசபை சபாநாயகருக்கு எதிராக வாக்களிக்க 35 கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டதாக புகார் எழுந்தது. ஒரு கன்சல்டன்சி நிறுவனம் மூலம் இந்த ஆஃபர் வந்ததாக அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், சென்னை போலீசார் அதிரடியாக மூன்று பேரைக் கைது செய்துள்ளனர். இதில் அதிர வைக்கும் விஷயம் என்னவென்றால், கைதானவர்களில் ஒருவர் திமுக எம்.எல்.ஏ செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்கிற்கு நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது.
15 எம்.எல்.ஏ-க்களுக்கு வலை?
விஜய் தலைமையிலான அரசை கவிழ்க்க, ஒரே நேரத்தில் 15 தவெக எம்.எல்.ஏ-க்களை ராஜினாமா செய்ய வைக்க ஒரு ரகசியத் திட்டம் தீட்டப்பட்டதாக ஏஜென்சிகள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் மீது போலீசார் வழக்குப்பதிவு (FIR) செய்துள்ளனர்.
கையும் களவுமாக சிக்கிய திமுக! - தவெக ஆவேசம்
இந்த விவகாரம் குறித்து தமிழக அமைச்சரும், டிவி கே மூத்த தலைவருமான சி.டி.ஆர். நிர்மல் குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில்: "எங்கள் எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்க திமுக முயன்று, இப்போது கையும் களவுமாக சிக்கியுள்ளது. கடந்த 40 நாட்களாகவே எங்கள் கட்சி மற்றும் கூட்டணி கட்சி எம்.எல்.ஏ-க்களை திமுக குறிவைத்து வருகிறது.
இதற்குப் பின்னால் முன்னாள் முதல்வர் ஸ்டாலினும், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியும் இருக்கிறார்கள். தங்கள் தவற்றை மறைக்க எங்கள் மீது பழி போடுகிறார்கள்," என்று காட்டமாகத் தெரிவித்தார்.
திமுக மற்றும் அதிமுகவின் பதிலடி!
இந்தக் குற்றச்சாட்டுகளை திமுக திட்டவட்டமாக மறுத்துள்ளது. திமுக தலைவர் டி.கே.எஸ். இளங்கோவன் கூறுகையில், "விஜய் தனது வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டார். அந்தத் தோல்வியை மறைக்கவே இப்படி ஆதாரமற்ற புகார்களைக் கூறுகிறார்கள். இவ்வளவு திறமையற்ற ஒரு முதல்வர் பதவியில் இருக்கும்போது, ஸ்டாலின் ஏன் அரசியலில் இருந்து விலக வேண்டும்?" என்று கேள்வி எழுப்பினார்.
அதேபோல், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் (X) தளத்தில், "மற்ற கட்சிகளில் இருந்து எம்.எல்.ஏ-க்களை இழுப்பதும், முன்பு விமர்சித்த கட்சிகளுடன் கூட்டணி வைப்பதும் தான் டிவிகே-வின் வேலை. இதில் மக்களின் நலன் எங்கே இருக்கிறது?" என்று விமர்சித்துள்ளார்.
இந்த நிலையில் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 1988-ஆம் ஆண்டு ஊழல் தடுப்பு சட்டத்தின் பிரிவு 8, 12-இன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து செந்தில் பாலாஜியின் தம்பியிடம் விசாரணை நடத்த போலீஸார் கரூர் சென்றனர். அங்கு ராமகிருஷ்ணாபுரத்தில் உள்ள அவரது வீட்டில் தேடி பார்த்தனர். அத்துடன் அவரது வீட்டருகே அவர் செல்லும் கடைகளுக்கு சென்று "அசோக் குமார் வந்தாரா, எப்போது வந்தார்" என கேட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் இதுவரை அசோக் குறித்து எந்த தகவல்களும் கிடைக்காததால் அவர் தலைமறைவாகியிருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் தேடி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications