கோவை காரமடை அருகே ஊக்கப்பட்டி கிராமத்தின் 50 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு
கோவை: கோவை மாவட்டம் காரமடை தோலம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் நீலாம்பதி, ஊக்கையனூர், ஊக்கப்பட்டி உள்பட 18 பழங்குடியின கிராமங்களுக்கு அரசு போக்குவரத்து வசதிகள் முழுமையாக கிடையாது.. தோலம்பாளையத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நீலாம்பதி கிராமத்தில் தான் அரசு பஸ் சேவை உள்ளது. பல ஆண்டுகளாக பேருந்து வசதி இல்லாமல் உள்ள இந்த கிராமங்களுக்கு பேருந்து வசதி கிடைத்துள்ளது. காரமடை அருகே உள்ள ஊக்கப்பட்டி பழங்குடியின கிராமத்துக்கு முதல்முறையாக அரசு பேருந்து வந்தது இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கோவை மாவட்டம் காரமடை தோலம்பாளையம் ஊராட்சியின் பல பகுதிகள் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தை ஒட்டிய பகுதிகளாகும். இங்கு நீலாம்பதி, ஊக்கையனூர், ஊக்கப்பட்டி, காலனி புதூர், ராஜீவ்காந்தி நகர், குழியூர், செங்குட்டை, எம்.ஜி.ஆர். நகர், போத்தன்படுகை, அண்ணா நகர்,
ஜெ.ஜெ. நகர் உள்பட 18 பழங்குடியின கிராமங்கள் உள்ளன. இங்கு சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இருளர் இன மக்கள் வசிக்கின்றனர். அடர்ந்த வனப்பகுதி அருகே இந்த கிராமங்கள் உள்ளதால் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகம் உள்ளது.

18 கிராமங்களுக்கும் அரசு போக்குவரத்து சேவை முழுமையாக இல்லை. தோலம்பாளையத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் நீலாம்பதி கிராமம் இருக்கிறது. தோலம்பாளையத்தில் இருந்து நீலாம்பதி, ஊக்கையனூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு அரசு பஸ் சேவை வசதி உள்ளது. ஆனால் அருகே உள்ள ஊக்கம்பட்டி கிராமத்தில் தார்சாலை வசதிகள் உள்ளது. ஆனால் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக பேருந்து வசதிகள் இல்லை. கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அவசர தேவைகளுக்கு சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் வனப்பகுதிக்கு நடுவே நடந்து நீலாம்பதி வந்து அங்கிருந்து குறிப்பிட்ட நேரத்தில் இயக்கப்படும் அரசு பேருந்துகளில் பயணித்து வசதிகளை பெற வேண்டிய நிலை இருக்கிறது.
எனவே பேருந்து வசதி கோரி நீண்டகாலமாக மக்கள் கோரிக்கை எழுப்பி வந்தார்கள். இதுகுறித்து கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார், மேட்டுப்பாளையம் தொகுதி த.வெ.க. எம்.எல்.ஏ. சுனில் ஆனந்த் மற்றும் போக்குவரத்து கழக அதிகாரிகளின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் கோவை மண்டல அரசு பேருந்து போக்குவரத்து கழக அதிகாரிகள் உத்தரவின் பேரில் ஊக்கப்பட்டியில் நேற்று முதல் அரசு பஸ் போக்குவரத்தை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டத. புதிய பஸ் போக்குவரத்து தொடக்கவிழாவில் மேட்டுப்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ. சுனில் ஆனந்த் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டார்கள். 50 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக தங்களது கிராமத்துக்கு அரசு பஸ் போக்குவரத்து தொடங்கி இருப்பதற்காக பொதுமக்கள் நன்றியும், மகிழ்ச்சியும் தெரிவித்தார்கள்.














Click it and Unblock the Notifications