குரூப்-1 அதிகாரிகளின் பணியிடை நீக்கத்தை ரத்து செய்ய முடியாது.. உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
மதுரை: தமிழ்வழியில் பட்டம் பெற்றதாக போலிச்சான்றிதழ் விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. இந்த வழக்கில் மனுதாரர்களான குரூப்-1 அதிகாரிகள் தங்கள் பணியிடை நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். ஆனால் இந்த மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை குரூப்-1 அதிகாரிகளின் பணியிடை நீக்கத்தை ரத்து செய்ய முடியாது என உத்தரவிட்டுள்ளது.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தமிழ் வழியில் படித்ததாக பலர் சான்றிதழ் பெற்றனர். தமிழ்வழியில் படித்தோருக்கான இடஒதுக்கீட்டின் மூலம் குரூப்-1 உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளில் தேர்ச்சி பெற்றனர். பின்னர் அரசு அதிகாரி பணியிடங்களில் சேர்ந்துவிட்டனர். இந்நிலையில் தமிழ்வழியில் படிக்காதவர்களும் சான்று பெற்று பணியில் சேர்ந்துவிட்டதாக செனனை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் 2020-ம் ஆண்டில் வழக்கு தொடரப்பட்டது.

அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டது. அதன்பேரில் போலீசார் விசாரித்ததில் தமிழ்வழிக் சான்றிதழ்களை மோசடியாக பெற்று அரசுப்பணியில் நிறைய பேர் சேர்ந்ததை கண்டுபிடித்தனர்.
அதன்பேரில் குரூப்-1 பணியில் சேர்ந்து பணியாற்றிய கலைவாணி, சொப்னா, சதீஷ்குமார் உள்ளிட்டோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். அந்த உத்தரவுக்கு எதிராக அவர்கள் மதுரை ஐகோர்ட்டில் தனித்தனியாக வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்குகளை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி புகழேந்தி விசாரித்தார். முடிவில் நீதிபதி புகழேந்தி பிறப்பித்த உத்தரவில் கூறுகையில், "இந்த வழக்கின் அனைத்து மனுதாரர்களும் தொலைதூரக்கல்வி மூலம் வெவ்வேறு படிப்பு மையங்கள் வழியாக பட்டம் பெற்றுள்ளார்கள். ஆனால் மனுதாரர்கள் படித்த மற்றும் சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்த மையங்களுக்கு இடையே முரண்பாடுகள் இருக்கிறது. அதேபோல அனைத்து மனுதாரர்களும் தங்கள் பட்டப்படிப்புக்கான அனைத்து பாடங்களையும் இறுதி ஆண்டு படிப்பின் போது ஒரே தேர்வில் எழுதி தேர்ச்சி பெற்றுள்ளனர். இது சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது.
மனுதாரர்கள் தற்போது வகிக்கும் பதவிகளின் தன்மையை இந்த நீதிமன்றம் கவனத்தில் கொள்ளாமல் இருக்க முடியாது. அவர்கள் குடிமைப் பணிகளில் பொறுப்பான பதவிகளை வகிக்கின்றனர். சந்தேகத்துக்கு உரிய சான்றிதழ்களின் அடிப்படையில் பெறப்பட்ட ஒரு நியமனத்தை பாதுகாப்பதற்கு உயர்நீதிமன்றத்தை பயன்படுத்த முயற்சிப்பதை அனுமதிக்க முடியாது. எனவே பணியிடை நீக்கத்தை ரத்து செய்யக்கோரிய இந்த மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படுகின்றன" இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.














Click it and Unblock the Notifications