ரூ.14,115 கோடி பட்ஜெட்... டெல்லி மார்க்கில் அமையப்போகும் அந்த 6 வழி சுரங்கப்பாதை எங்கே தொடங்குகிறது?
டெல்லி: டெல்லி மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களின் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், சுமார் 14,115 கோடி ரூபாய் மதிப்பில் இரண்டு புதிய சாலைத் திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த சாலைகள் எங்கெங்கே அமைய உள்ளன? இந்த புதிய சாலை திட்டங்கள் மட்டும் செயல்பாட்டுக்கு வந்துவிட்டால் அதனால் ஏற்படும் சாதகங்கள் என்னென்ன தெரியுமா?
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், டெல்லி மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களின் சாலை கட்டமைப்பை வலுப்படுத்தும் இரண்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இந்த திட்டங்கள் குறித்த அதிகாரப்பூர்வ விவரங்களை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களிடம் விளக்கமாக சொன்னார்.

டெல்லியில் புதிய சுரங்கப்பாதை
டெல்லியில் நிலவி வரும் டிராபிக் நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் ஒரு புதிய திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி டெல்லியில் உள்ள துவாரகா அதிவேக நெடுஞ்சாலையை, வசந்த் குஞ்ச் பகுதியில் இருக்கும் நெல்சன் மண்டேலா சாலையோடு இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக தேசிய நெடுஞ்சாலை 148AE-ன் ஒரு பகுதியாக 6 வழிகளைக் கொண்ட புதிய சுரங்கப்பாதை ஒன்று அமைக்கப்பட உள்ளது.
சுமார் 8.1 கிலோமீட்டர் நீளம் கொண்ட இந்த சுரங்கப்பாதை திட்டத்திற்காக மட்டுமே, மத்திய அரசு 6,969.67 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கியுள்ளது. இந்த சுரங்கப்பாதை பயன்பாட்டிற்கு வரும்போது, டெல்லியின் முக்கியப் பகுதிகளில் நிலவி வரும் அளவுக்கதிகமான போக்குவரத்து நெரிசல் குறையும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.. இதனால் வாகன ஓட்டிகளின் நேரமும், எரிபொருளும் சேமிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல்
இதற்கு அடுத்தபடியாக, உத்தரப்பிரதேச மாநிலத்தின் சாலை இணைப்பை வலுப்படுத்தும் வகையில் இன்னொரு புதிய திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் உள்ள கான்பூர் மற்றும் கப்ராய் ஆகிய 2 நகரங்களை இணைக்கும் வகையில், தேசிய நெடுஞ்சாலை 34-ல் இந்த புதிய சாலை அமையவுள்ளது. சுமார் 117.7 கிலோமீட்டர் தூரத்திற்கு இந்த சாலை உருவாக்கப்பட உள்ளது.
இந்த புதிய சாலை 4 அல்லது 6 வழிகளைக் கொண்ட பாதையாக விரிவுபடுத்தப்பட இருக்கிறது. வாகனங்கள் குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே உள்ளே நுழையவும், வெளியேறவும் கூடிய கட்டுப்பாட்டு வசதிகள் கொண்ட "பசுமைவழிச் சாலையாக" இது வடிவமைக்கப்பட உள்ளது. இந்த திட்டத்திற்காக மட்டும் 7,145.14 கோடி ரூபாய் மதிப்பீட்டுச் செலவு செய்யப்பட உள்ளது.
சரக்கு போக்குவரத்தும் மேம்படும்
மத்திய அரசு டெல்லி மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ள இந்த 14,115 கோடி ரூபாய் திட்டங்கள் மூலம், பயணமும் சரக்கு போக்குவரத்தும் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அறிவிப்பு இப்போது பரவலான கவனத்தைப் பெற்றுள்ளது.
இந்த புதிய சாலைத் திட்டங்கள் மூலம் டெல்லியின் முக்கியப் பகுதிகளில் நிலவும் கடுமையான போக்குவரத்து நெரிசல் குறைந்து, வாகன ஓட்டிகளின் நேரமும் எரிபொருளும் பெருமளவு சேமிக்கப்படும். குறிப்பாக, துவாரகா அதிவேக நெடுஞ்சாலை மற்றும் வசந்த் குஞ்ச் இடையேயான இணைப்பு எளிதாகி, விமான நிலையத்திற்கான பயண வசதி பெருமளவில் மேம்படும்.
அதுமட்டுமல்லாமல் உத்தரப்பிரதேசத்தின் கான்பூர்-கப்ராய் பசுமைவழிச் சாலை மூலமாக அண்டை நகரங்களுக்கு இடையேயான சரக்கு போக்குவரத்தும் பிராந்திய வர்த்தகமும் வேகமெடுக்கும்.












Click it and Unblock the Notifications