கர்நாடகாவில் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு ரத்து.. மாநில அரசு அதிரடி அறிவிப்பு!
பெங்களூர்: கர்நாடகா மாநிலத்தில் வார இறுதி நாட்களில் அமல்படுத்தப்படும் ஊரடங்கு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இரவு நேர ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் 2-ஆம் தேதி இந்தியாவில் முதல்முறையாக ஓமிக்ரான் பாதிப்பு கர்நாடகா மாநிலத்தில் பதிவானது. இதையடுத்து அந்த மாநிலத்தில் மட்டும் 149 க்கும் மேற்பட்டவர்களுக்கு ஓமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டது.

தொற்றானது அதிகமாகவே பரவி வந்தது. அது போல் கொரோனா பாதிப்பும் அதிகமாகவே இருந்து வந்தது. இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் சனி, ஞாயிறு ஆகிய இரு நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
அது போல் இரவு நேர ஊரடங்கும் அங்கு ஏற்கெனவே அமலில் உள்ளது. இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு ஊரடங்கு அமலில் உள்ளது. கொரோனா தொற்று அதிகம் உள்ள கேரளா, கோவா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வருவோர் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்து கோவிட் நெகட்டிவ் சான்றிதழுடன் வந்தால் மட்டுமே மாநிலத்திற்குள் அனுமதிக்கப்படுகிறார்கள்.
கேளிக்கை விடுதிகள், மதுபான பார்கள், உணவகங்கள், சினிமா தியேட்டர், நீச்சல் குளங்கள் உள்ளிட்டவைகளில் 50 சதவீத ஆட்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. வாடிக்கையாளர்கள் இரு தவணை கொரோனா தடுப்பூசிகளை போட்டிருக்க வேண்டும். அதே போல் திருமண நிகழ்வுகளில் 200 பேருக்கு மேல் அனுமதி இல்லை. மூடிய அரங்காக இருந்தால் 100 பேர் மட்டுமே திருமண விழாவில் அனுமதி போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் 47,754 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கை நீக்க வேண்டும் என வர்த்தகர்களும் எதிர்க்கட்சியினரும் கர்நாடகா மாநில அரசிடம் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து இன்றைய தினம் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
சுமார் 2 மணி நேரம் நடந்த ஆலோசனை கூட்டத்தில் வார இறுதி நாட்களான சனி, ஞாயிறுகளில் முழு ஊரடங்கை ரத்து செய்வது என மாநில அரசு அறிவித்துள்ளது. வார இறுதி நாட்களில் அமலில் இருந்த முழு ஊரடங்கு ரத்து செய்யப்பட்டாலும் இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் என மாநில அரசு தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications