மனைவிக்கு 14 மனைகள் ஒதுக்கீடு- ஆளுநர் அனுமதிக்கு எதிரான சித்தராமையா மனு மீது ஹைகோர்ட் இன்று விசாரணை!
பெங்களூர்: கர்நாடகா முதல்வர் சித்தராமையா மனைவி பார்வதிக்கு மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையமான மூடா 14 வீட்டு மனைகளை சட்டவிரோதமாக ஒதுக்கிய விவகாரத்தில் இன்று கர்நாடகா உயர்நீதிமன்றம் முக்கிய விசாரணை நடத்த உள்ளது. மூடா நில மோசடி விவகாரத்தில் தம் மீது வழக்கு தொடர ஆளுநர் அனுமதி கொடுத்ததற்கு எதிரான சித்தராமையா மனுவை இன்று அம்மாநில உயர்நீதிமன்றம் விசாரிக்கிறது.
மூடா நிறுவனம் 14 வீட்டு மனைகளை முதல்வர் சித்தராமையா மனைவி பார்வதிக்கு ஒதுக்கீடு செய்தது சட்டவிரோதம் என்கிறது பாஜக. ஆனால் மனைவி பெயரிலான நிலத்தை மூடாதான் சட்டவிரோதமாக ஆக்கிரமித்தது; அதற்கு நஷ்ட ஈடுதான் இந்த 14 வீட்டு மனைகள் என்கிறார் சித்தராமையா.

இந்த விவகாரத்தில் சித்தராமையாவுக்கு எதிராக வழக்கு தொடர சமூக ஆர்வலர்களுக்கு மாநில ஆளுநர் தாவர்சந்த் கெலாட் அனுமதி கொடுத்தார். இது கர்நாடகா அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஆளுநர் கெலாட்டின் இந்த அனுமதிக்கு எதிராக கர்நாடகா அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அத்துடன் ஆளுநரின் இந்த அனுமதிக்கு எதிராக கர்நாடகா முழுவதும் காங்கிரஸ் கட்சி போராட்டம் நடத்தியது. இதற்கு பதிலடியாக, சித்தராமையா ராஜினாமா செய்ய கோரி பாஜக, ஜேடிஎஸ் கட்சிகள் போராட்டம் நடத்தின.
மேலும் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் சித்தராமையா வழக்கும் தொடர்ந்தார். இந்த மனு மீது கடந்த வாரம் விசாரணை நடத்திய கர்நாடகா உயர்நீதிமன்றம், சித்தராமையா மீது விசாரணை நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க இடைக்காலத் தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது.
இந்த நிலையில் கர்நாடகா உயர்நீதிமன்றம், சித்தராமையா மனு மீது விசாரணை நடத்த உள்ளது. கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதி நாகபிரசன்னா, சித்தராமையாவின் மனுவை விசாரிக்க இருக்கிறார். இன்றைய கர்நாடகா உயர்நீதிமன்றத்தின் உத்தரவு கர்நாடகா அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.












Click it and Unblock the Notifications