பெங்களூரில் கொரோனா நோயாளிகளுக்கு பெட் ஒதுக்குவதில் முறைகேடு.. விசாரணை நடத்த கர்நாடக ஹைகோர்ட் உத்தரவு
பெங்களூர்: பெங்களூரில் கொரோனா நோயாளிகளுக்கு பெட் ஒதுக்குவதில் முறைகேடு நடப்பதாக புகார்கள் எழுந்த நிலையில் இதுகுறித்து விசாரணை நடத்தும்படி கர்நாடக ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
கர்நாடக தலைநகர் பெங்களூரில் பெட் ஒதுக்குவதில் முறைகேடு நடப்பதாக பெங்களூர் தெற்கு தொகுதி பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா புகார் அளித்து இருந்தார். பெங்களூரில் கொரோனா நோயாளிகளுக்கு மருத்துவமனை பெட்களை ஒதுக்க பிபிஎம்பி மாநகராட்சி சார்பாக வார் ரூம் இயக்கப்பட்டு வருகிறது.

இங்கு பெட்களை புக் செய்ய லஞ்சம் வாங்கப்படுகிறது. அதிக விலை கொடுக்கும் நபர்களுக்கு பெட் ஒதுக்கப்படுகிறது என்று தேஜஸ்வி சூர்யா புகார் வைத்தார்.
ஒரு நபர் ஒரு பெட்டை புக் செய்து இருந்தாலும் கூட, அதிக பணம் கொடுக்கும் நபர்களுக்கு பெட்கள் ஒதுக்கப்படுகின்றன. இதில் நிறைய லஞ்சம் கை மாறுகிறது என்று தேஜஸ்வி சூர்யா குற்றச்சாட்டு வைத்து இருந்தார்.
இந்த நிலையில் பெங்களூரில் மருத்துவமனையில் பெட் ஒதுக்குவதில் முறைகேடு நடப்பது குறித்து விசாரணை நடத்தும்படி கர்நாடக ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதற்காக தனி குழுவை நியமிக்க வேண்டும், இதில் போலீஸ் அதிகாரிகள், சைபர் கிரைம் அதிகாரிகள் இடம்பெற வேண்டும், ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் குழுவை மேற்பார்வையிட வேண்டும் என்று கர்நாடக ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
அதே சமயம் இதற்காக இரண்டு மூத்த போலீஸ் அதிகாரிகளின் மேற்பார்வையில் ஏற்கனவே விசாரணை குழு நியமித்துவிட்டதாக கர்நாடக அரசு ஹைகோர்ட்டில் தெரிவித்துள்ளது.
முன்னதாக இந்த முறைகேட்டில் பெங்களூர் மாநகராட்சியில் வேலை பார்க்கும் 17 இஸ்லாமிய ஊழியர்களுக்கு தொடர்பு இருப்பதாக தேஜஸ்வி குற்றச்சாட்டு வைத்தார். இதையடுத்து இவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். ஆனால் போலீஸ் விசாரணையில் இவர்கள் மீது தவறு இல்லை என்று நிரூபிக்கப்பட்டதால் கடந்த 10ம் தேதி இவர்கள் மீண்டும் பணிக்கு அமர்த்தப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications