அத்வானிக்கே அந்த கதி- எடியூரப்பா எம்மாத்திரம்? ஆட்டத்தை மொத்தமாக குளோஸ் செய்த கர்நாடகா பாஜக அரசு!
பெங்களூர்: கர்நாடகா முன்னாள் முதல்வர் எடியூரப்பா, அவரது மகன் விஜயேந்திரா ஆகியோர் மீது கர்நாடகாவில் ஆளும் பாஜக அரசு ஊழல் வழக்குகளை பதிவு செய்துள்ளது. இதனால் கர்நாடகா அரசியலில் எடியூரப்பா மற்றும் அவரது குடும்பத்தினரின் அரசியல் ஆதிக்கம் முடிவுக்கு கொன்டுவரப்படுகிறதா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.
பாஜகவை வாஜ்பாயுடன் இணைந்து உருவாக்கியவர் எல்.கே.அத்வானி. நாட்டின் துணை பிரதமராக பதவி வகித்தார். மத்தியில் 2014-ல் பாஜக ஆட்சி அமைத்த பின்னர் கடந்த 8 ஆண்டுகளாக அத்வானி இருப்பிடமே தெரியாமல் ஓரம்கட்டப்பட்டு உட்கார வைக்கப்பட்டார். பொதுக் கூட்ட மேடையில் ஒரு மைக் கிடைப்பதற்கு அத்வானி பட்டபாடை உலகம் பார்த்து அதிர்ந்தது.

கர்நாடகாவில் எடியூரப்பா
பாஜகவில் சீனியர்கள் பலரையும் வயதானவர்கள் என்ற ஒற்றை காரணம் மூலம் ஓரமாக உட்கார வைக்கபப்டுவது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதில் எடியூரப்பா மட்டும் இன்னமும் விலக்கு பெற்றவராக அரசியல் ஆடுகளத்தில் இருந்து வந்தார். கர்நாடகாவில் பாஜகவுடன் பல ஆண்டுகளாக மல்லுக்கட்டி தனிக்கட்சி தொடங்கி மீண்டும் இணைந்து என கண்ணாமூச்சி ஆடித்தான் வருகிறார் எடியூரப்பா.

குடைச்சல் எடியூரப்பா
முதல்வர் பதவியில் இருந்து டெல்லி மேலிடத்தால் அகற்றப்பட்ட பின்னரும் கூட மகன் விஜயேந்திராவுக்கா உரத்து குரல் எழுப்பிக் கொண்டிருந்தார் எடியூரப்பா. தமது ஜாதிய பலத்தால்தான் பாஜக வெல்ல முடியும் என்கிற அபரிதமான நம்பிக்கையில் கர்நாடகா பாஜகவினர் வார்த்தைகளில் சொல்வதானால் பெரும் குடைச்சலப்பாவாக வலம் வந்து கொண்டிருந்தார் எடியூரப்பா.

அதிரடி வழக்கு பதிவு
இந்நிலையில்தான், பெங்களூரு வளர்ச்சி ஆணையம் எனப்படும் பிடிஏ, குடியிருப்புகள் கட்டும் திட்டத்தை மேற்கொண்டது. இத்திட்டத்துக்கு அனுமதி கொடுத்தவர் மாஜி முதல்வர் எடியூரப்பா. இந்த கட்டுமானப் பணிகளுக்காக ஒப்பந்தம் பெற்ற ராமலிங்கத்திடம் எடியூரப்பா, மகன் விஜயேந்திரா உள்ளிட்டோர் ரூ12 கோடி லஞ்சம் பெற்றதாக சமூக ஆர்வலர் ஆபிரகாம் குற்றம்சாட்டி இருந்தார். இது தொடர்பான ஆடியோக்களும் வெளியாகின. இது கர்நாடகா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக வழக்கும் தொடரப்பட்டது. ஆனால் மக்கள் பிரதிநிதிகளை விசாரிக்கும் நீதிமன்றம் இதற்கு அனுமதி தர மறுத்தது. இது தொடர்பான வழக்கில் எடியூரப்பா உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த கர்நாடகா உயர்நீதிமன்றம், கர்நாடகா லோக் ஆயுக்தா அமைப்புக்கு அதிரடியாக உத்தரவிட்டது.

எதிர்காலம் என்னவாகுமோ?
இதனால் வேறுவழியே இல்லாமல் எடியூரப்பா, அவரது மகன் விஜயேந்திரா, அமைச்சர் எஸ்.டி.சோமசேகர் உள்ளிட்டோர் மீது கர்நாடகா லோக் ஆயுக்தா வழக்குப் பதிவு செய்துள்ளது. இதனால் எடியூரப்பாவுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எடியூரப்பா மீது ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதால் பாஜகவில் உள்ள அத்தனை பொறுப்புகளில் இருந்தும் எடியூரபா விலகிவிட வேண்டும்; உடனே ராஜினாமா செய்ய வேண்டும் என்ற குரல் பாஜகவில் வலுத்துள்ளது. இதனால் எடியூரப்பா, அவரது குடும்பத்தினருக்கு இனி பாஜகவில் இடம் கிடைக்க வாய்ப்பு மிக மிக குறைவு என்கின்றன கர்நாடகா அரசியல் வட்டாரங்கள். கர்நாடகா சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் இந்த விவகாரம் மிக முக்கியமானதாகவும் பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications