இந்து மதம் எப்ப பிறந்ததாம்? யார் உருவாக்கினதாம்? கர்நாடகா அமைச்சர் பரமேஸ்வரா சரமாரி கேள்வி
பெங்களூர்: இந்து மதம் என்பது எப்போது பிறந்தது? யார்தான் இந்து மதத்தை உருவாக்கியது? என கர்நாடகா உள்துறை அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான ஜி.பரமேஸ்வரா கேள்வி எழுப்பியது புதிய விவாதத்தை உருவாக்கி உள்ளது.
சனாதன தர்மம் ஒழிப்போம் என தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய பேச்சு நாடு முழுவதும் கடும் சர்ச்சையை உருவாக்கி இருக்கிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி அத்தனை பாஜக தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் 200க்கும் மேற்பட்ட நீதிபதிகளை உள்ளடக்கிய சமூக ஆர்வலர்கள் உச்சநீதிமன்றத்திலும் முறையிட்டுள்ளனர்.

உதயநிதி, பிரியங்க் கார்கே: அமைச்சர் உதயநிதி ஸ்டாலினைப் போல கருத்து தெரிவித்த கர்நாடகா அமைச்சர் பிரியங் கார்கேவையும் பாஜகவினர் விமர்சித்து வருகின்றனர். உதயநிதி ஸ்டாலின், பிரியங்க் கார்கே மீது நாட்டின் பல பகுதிகளில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
யாரு உருவாக்கினது?: இந்நிலையில் கர்நாடகா உள்துறை அமைச்சர் ஜி.பரமேஸ்வரா மதம் தொடர்பாக பேசிய பேச்சு புதிய விவாதங்களை கிளப்பிவிட்டுள்ளது. மதம் குறித்த ஜி. பரமேஸ்வரா பேசியதாவது: உலகில் எத்தனையோ மதங்கள் தோன்றி இருக்கின்றன. புத்த மதமும் சமண மதமும் (ஜைன மதம்) இந்தியாவில் பிறந்ததுதான். இஸ்லாம், கிறிஸ்தவம் என்பது வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு வந்தவைதான். ஆனால் இந்து மதம் என்பது எப்போது பிறந்தது? யார் அதனை உருவாக்கியது? இந்து மதத்தை பிறப்பித்தது யார்? என்பது மட்டும் யாருக்குமே தெரியாது. இவ்வாறு ஜி.பரமேஸ்வரா பேசினார்.
காங்கிரஸ் புத்தி: கர்நாடகா அமைச்சர் பரமேஸ்வராவின் இந்தப் பேச்சுக்கு பாஜக கடுமையாக கண்டனம் தெரிவித்து வருகிறது. பாஜக எம்.எல்.சி. கோடா ஶ்ரீனிவாஸ் பூஜாரி கூறுகையில், கர்நாட்கா மாநில நலன் சார்ந்த பல பிரச்சனைகள் இருக்கும் போது அமைச்சர் பரமேஸ்வரா தேவை இல்லாத பிரச்சனையை பேசுகிறார். இந்து மதம் குறித்த பரமேஸ்வரா பேச்சு தேவையற்றது. காங்கிரஸும் அதன் தலைவர்களும் சிறுபான்மையினரை தாஜா செய்கிற புத்தியைத்தான் இந்த பேச்சு வெளிப்படுத்துகிறது என சாடியிருக்கிறார்.
இந்து மதம் பெருங்கடல்: கர்நாடகா பாஜக பொதுச்செயலாளர் என்.ரவி குமார் கூறுகையில், இந்து மதத்தின் தோற்றம் குறித்து அமைச்சர் பரமேஸ்வரா கேள்வி எழுப்பி இருக்கிறார். இந்து மதத்தை இழிவுபடுத்துகிறது அவர் பேச்சு. இந்து மதம் என்பது பெருங்கடல். பிற மதங்களுடன் இந்து மதத்தை ஒப்பிடவே முடியாது. அனைவராலும் மதிக்கத்தக்கது இந்து மதம். பல்லாயிரம் ஆண்டுகளாக இந்து மதம் இங்கே பின்பற்றப்பட்டு வருகிறது. அதை கேள்விக்குள்ளாக்க கூடாது என்றார்.












Click it and Unblock the Notifications