முதல்வர் சித்தராமையாவுக்கு எதிராக சதி- அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது கர்நாடகா போலீஸ் வழக்கு!
பெங்களூர்: கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள வால்மீகி வாரிய நிதி முறைகேடு வழக்கில் முதல்வர் சித்தராமையாவுக்கும் தொடர்பிருப்பதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் நெருக்கடி தருவதாக சர்ச்சைகள் வெடித்திருந்தன. இதனையடுத்து கர்நாடகா மாநில அரசின் சமூக நலத்துறை கூடுதல் இயக்குநர் அளித்த புகாரின் பேரில் முதல்வர் சித்தராமையாவை தொடர்புபடுத்தி வாக்குமூலம் பெற நெருக்கடி தந்த இரண்டு அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது அம்மாநில போலீசார் வழக்குப் பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகா மாநில அரசின் வால்மீகி வளர்ச்சி ஆணையம் என்பது பழங்குடிகள் மேம்பாட்டுத் திட்டங்களைச் செயல்படுத்தக் குடிய நல வாரியம். இதன் அதிகாரியாகப் பணியாற்றிய சந்திரசேகர் என்பவர் அண்மையில் தற்கொலை செய்து கொண்டார்.

வால்மீகி வாரிய அதிகாரி சந்திரசேகர் தமது தற்கொலைக்கான காரணத்தை விளக்கி எழுதி வைத்த கடிதத்தில், வால்மீகி சமூக வளர்ச்சி ஆணையத்துக்கு மாநில அரசு ரூ187 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. ஆணையத்தின் 3 அதிகாரிகள் ரூ85 கோடியை பல்வேறு காரணங்களை சுட்டிக்காட்டி பல்வேறு வங்கிக் கணக்குகளுக்கு மாற்றி மோசடி செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் தமக்கு நெருக்கடி தந்தனர் என குறிப்பிட்டிருந்தார்.
இதனையடுத்து வால்மீகி வாரிய முறைகேடு விவகாரம் பெரும் பிரளயத்தை ஏற்படுத்தியது. இதனால் அமைச்சர் நாகேந்திரா தமது பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் அமலாக்கத்துறையும் இந்த வழக்கில் இணைந்தது. இவ்வழக்கில் முன்னாள் அமைச்சர் நாகேந்திராவை அமலாக்கத்துறை கைது செய்தது.
இந்த நிலையில்தான் வால்மீகி வாரிய முறைகேடு வழக்கில் முதல்வர் சித்தராமையாவுக்கு தொடர்பு உள்ளது என வாக்குமூலம் தரக் கோரி மாநில அரசு அதிகாரிகளுக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் நெருக்கடி கொடுத்ததாகவும் சர்ச்சை வெடித்தது.
இதனால் அமலாக்கத்துறை அதிகாரிகள் நெருக்கடி கொடுத்ததாக கர்நாடகா மாநில அரசின் சமூக நலத்துறை கூடுதல் இயக்குநர் போலீசில் புகார் கொடுத்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் இரண்டு அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது கர்நாடகா போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
தமிழ்நாட்டில் திண்டுக்கல் அரசு மருத்துவரை மிரட்டி லஞ்சம் வாங்கியதாக அமலாக்கத்துறை அதிகாரி ஒருவர் கையும் களவுமாக சிக்கினார். அப்போது மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்துக்குள்ளேயே நுழைந்து தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புப் போலீசார் அதிரடி சோதனை நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications