மாஜி பிரதமர் மாளிகையில் துப்பாக்கி முனையில் பெண் பிரமுகரை பலாத்காரம் செய்த பிரஜ்வல்-தொடரும் ஷாக்!
பெங்களூர்: முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் விருந்தினர் மாளிகையில் துப்பாக்கி முனையில் பெண் பிரமுகரை மிரட்டியே 3 ஆண்டுகளாக பலாத்காரம் செய்தார் ஜேடிஎஸ் முன்னாள் எம்பி பிரஜ்வல் ரேவண்ணா என 3-வது குற்றப்பத்திரிகையில் அதிர்ச்சி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 3,000 ஆபாச வீடியோ வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா மீது அடுத்தடுத்து கர்நாடகா சிறப்பு புலனாய்வுக் குழு போலீசார் குற்றப்பத்திரிகைகளைத் தாக்கல் செய்து வருகின்றனர்.
முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா. தேவகவுடாவின் மூத்த மகன் ரேவண்ணா எம்.எல்.சி.யின் மகன்தான் பிரஜ்வல். ஹாசன் தொகுதி முன்னாள் எம்பி. லோக்சபா தேர்தலில் ஹாசன் தொகுதியில் மீண்டும் பிரஜ்வல் ரேவண்ணா போட்டியிட்டார். அப்போது பிரஜ்வல் தொடர்புடைய 3,000 ஆபாச வீடியோக்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இது தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தியது. ஆனால் ஆபாச வீடியோக்கள் வெளியான உடனே ஜெர்மன் நாட்டுக்கு தப்பி ஓடினார் பிரஜ்வல்.

அதேநேரத்தில் பிரஜ்வல் ரேவண்ணாவை கைது செய்ய தீவிரம் காட்டியது கர்நாடகா சிறப்பு புலனாய்வுக் குழு. இதனால் வேறுவழியே இல்லாமல் நாடு திரும்பிய பிரஜ்வல் ரேவண்ணா, பெங்களூர் விமான நிலையத்திலேயே கைது செய்யப்பட்டார்.
தற்போது பிரஜ்வல் ரேவண்ணா மீதான வழக்குகளில் அடுத்தடுத்து குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன. பிரஜ்வல் மீதான 3-வது பலாத்கார வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட 1691 பக்க குற்றப்பத்திரிகையில் பல அதிர்ச்சித் தகவல்கள் இடம் பெற்றுள்ளன. ஜேடிஎஸ் கட்சியின் ஹாசன் மாவட்ட பெண் பிரமுகரை பலாத்காரம் செய்த வழக்கு இது.
பிரஜ்வலின் தாத்தா, முன்னாள் பிரதமர் தேவகவுடாவுக்கு பொதுப் பணித்துறை விருந்தினர் மாளிகை ஒன்று ஒதுக்கீடு செய்திருந்தது. இந்த விருந்தினர் மாளிகையில் பிரஜ்வலை ஹாசன் மாவட்ட ஜேடிஎஸ் பெண் பிரமுகர் உதவி கேட்டு சந்தித்திருக்கிறார். ஆனால் அவரை துப்பாக்கி முனையில் மிரட்டி பிரஜ்வல் பலாத்காரம் செய்திருக்கிறார்.
விருந்தினர் மாளிகைக்கு வராவிட்டால் கணவரை கொலை செய்வேன் என துப்பாக்கியை காட்டி மிரட்டியே 3 ஆண்டுகளாக ஜேடிஎஸ் பெண் பிரமுகரை பிரஜ்வல் வேட்டையாடி இருக்கிறார். அத்துடன், அந்த பெண் பிரமுகரை வீடியோ காலில் அழைத்து நிர்வாணமாக நிற்க வேண்டும் எனவும் பிரஜ்வல் மிரட்டி இருக்கிறார். அதேபோல அந்த பெண் பிரமுகரை பலாத்காரம் செய்த போது வீடியோவையும் பிரஜ்வல் பதிவு செய்திருக்கிறார். ஆனால் இந்த வீடியோ எடுக்க பயன்படுத்திய செல்போனை பிரஜ்வல் அழித்துவிட்டார் எனவும் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications