3000 ஆபாச வீடியோ: பிரஜ்வல் தாயார் பவானி ரேவண்ணாவிடம் நாளை விசாரணை.. ஒத்துழைக்காவிட்டால் அதிரடி கைது?
பெங்களூர்: 3,000 ஆபாச வீடியோ வழக்கில் ஹாசன் எம்பி பிரஜ்வல் ரேவண்ணா கைது செய்யப்பட்ட நிலையில் அவரது தாயார் பவானி ரேவண்ணாவை நாளைய விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டு சிறப்பு புலனாய்வுக் குழுவினர் புதிய சம்மன் அனுப்பி உள்ளனர்.
கர்நாடகாவின் ஹாசன் தொகுதி எம்பியான பிரஜ்வல் ரேவண்ணா 3000 ஆபாச வீடியோக்களில் சிக்கி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். கடந்த ஏப்ரல் 21-ந் தேதி முதல் ஹாசனில் மட்டுமல்ல கர்நாடகாவில் இந்த விவகாரம் பெரும் புயலைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது.

ஹாசனில் பாஜக ஜேடிஎஸ் கூட்டணி வேட்பாளராக போட்டியிட்டார் பிரஜ்வல். இத்தொகுதியில் ஏப்ரல் 26-ந் தேதி வாக்குப் பதிவு முடிவடைந்தது. இதனையடுத்து 3000 ஆபாச வீடியோக்கள் தொடர்பாக கர்நாடகா அரசு சிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டது. அதேநேரத்தில் பிரஜ்வல் ரேவண்ணா வெளிநாட்டுக்குத் தப்பி ஓடினார்.
இதனிடையே இந்த வழக்கில் பிரஜ்வலின் தந்தை முன்னாள் அமைச்சர் ரேவண்ணா கைது செய்யப்பட்டார். தற்போது ரேவண்ணா ஜாமீனில் இருக்கிறார்.
இந்த பின்னணியில் ஜெர்மனியில் பதுங்கி இருந்த பிரஜ்வல், இன்று அதிகாலை பெங்களூர் விமான நிலையம் வந்திறங்கினார். பெங்களூர் விமான நிலையத்திலேயே பெண் போலீஸ் படை பிரஜ்வல் ரேவண்ணாவை அதிரடியாக கைது செய்தது. தற்போதும் பிரஜ்வலிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
இதனையடுத்து பிரஜ்வல் தாயார் பவானி ரேவண்ணாவையும் விசாரணைக்கு அழைத்துள்ளது சிஐடி. ஏற்கனவே பவானி ரேவண்ணாவுக்கு பலமுறை சம்மன் அனுப்பியும் அவர் விசாரணைக்கு அஜராகவில்லை. இந்த நிலையில் நாளைய விசாரணைக்கு பவானி ரேவண்ணா ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டு புது சம்மன் அனுப்பி இருக்கிறது சிறப்பு புலனாய்வுக் குழு. இதற்கு முந்தைய விசாரணைக்கான சம்மன்களுக்கு பவானி ரேவண்ணா பதில் கூட தராமல் இழுத்தடித்து வந்தார். இதனால் நாளைய விசாரணை பவானி ரேவண்ணாவுக்கு நெருக்கடி தரக் கூடியதாக கிடுக்குப்பிடி விசாரணையாக இருக்கக் கூடும் எனவும் கூறப்படுகிறது.
பவானி ரேவண்ணா தம்மிடம் நடத்தப்படும் விசாரணைக்கு ஒத்துழைப்பு தராமல் இருந்தால் அவரை சிறப்பு புலனாய்வுக் குழு கைது செய்யவும் சாத்தியம் இருக்கிறது என்கின்றன பெங்களூர் வட்டாரங்கள்.












Click it and Unblock the Notifications