சித்தராமையாவுக்கு நெருக்கடி-முடா முறைகேடு- லோக் ஆயுக்தா விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
பெங்களூர்: கர்நாடகா முதல்வர் சித்தராமையா மனைவிக்கு முடா நிறுவனம் முறைகேடாக 14 வீட்டு மனைகள் ஒதுக்கியது தொடர்பால லோக் ஆயுக்தா விசாரணை நடத்த பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. பெங்களூர் சிறப்பு நீதிமன்ற விசாரணைக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை கர்நாடகா உயர்நீதிமன்றம் நேற்று நீக்கிய நிலையில் இன்று லோக் ஆயுக்தா விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது சித்தராமையாவுக்கு நெருக்கடியை அதிகரித்துள்ளது.
கர்நாடகா முதல்வர் சித்தரமையா பதவிக்கு கடும் நெருக்கடியை கொடுத்துள்ளது முடா வீடு ஒதுக்கீடு முறைகேடு. சித்தராமையா மனைவி பார்வதிக்கு 14 வீட்டு மனைகளை முடா ஒதுக்கீடு செய்தது. முடா என்பது மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம். ஆனால் மனைவி பார்வதியின் நிலத்தை முடா சட்டவிரோதமாக ஆக்கிரமித்தது; அதற்கு நட்ட ஈடுதான் 14 வீட்டு மனைகள் என்கிறார் சித்தராமையா.

இது தொடர்பாக சித்தராமையா மீது வழக்கு தொடர சமூக ஆர்வலர்களுக்கு ஆளுந்நர் தாவர்சந்த் கெலாட் அனுமதி கொடுத்தார். இதனடிப்படையில் சித்தராமையா மீது பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
ஆனால் ஆளுநரின் அனுமதிக்கு எதிராக சித்தராமையா, கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், தீர்ப்பு வழக்கும் வரை பெங்களூர் சிறப்பு நீதிமன்ற விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தது.
இந்த பின்னணியில் சித்தராமையாவின் மனுவை கர்நாடகா உயர்நீதிமன்றம் நேற்று டிஸ்மிஸ் செய்தது. மேலும் பெங்களூர் சிறப்பு நீதிமன்ற விசாரணைக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையும் நீக்கப்பட்டது.
இதனையடுத்து இன்று பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் சித்தராமையாவுக்கு எதிரான வழக்கை விசாரித்தது. இந்த முடா முறைகேடு குறித்து லோக் ஆயுக்தா விசாரிக்க பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஏற்கனவே சித்தராமையா முதல்வர் பதவியில் இருந்து விலக வேண்டும் என பாஜக போர்க்கொடி தூக்கி வருகிறது. தற்போது லோக் ஆயுக்தா விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ள நிலையில் பாஜகவின் போராட்டங்கள் விஸ்வரூபம் எடுக்கும் என கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications