ஜொலிஜொலித்த ரூ.500.. எஸ்எஸ்எல்சியில் பாஸாக விடைத்தாளில் மாணவர்கள் வைத்த லஞ்சப்பணம்! எமோஷனல் வேற
பெங்களூர்: ‛‛இந்தாங்க இந்த 500 ரூபாய் உங்களுக்கு தான். இதை டீ செலவுக்கு வைத்து கொள்ளுங்கள். என்னை எப்படியாவது பாஸ் செய்து விடுங்க. நான் பாஸ் ஆனால் தான் எனது காதல் கைகூடும். எனது காதலே உங்களின் கையில் தான் உள்ளது'' 500 ரூபாய் நோட்டுடன் 10ம் வகுப்பு விடைத்தாளில் இருந்த வாசகம் தான் இது. கர்நாடகாவில் எஸ்எஸ்எல்சி தேர்வில் பாஸ் மார்க் பெறுவதற்காக விடைத்தாளுடன் ரூ.500 வைத்து சில மாணவர்கள் அனுப்பி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பள்ளி, கல்லூரி காலத்தில் சாதாரண தேர்வின்போது குறிப்பிட்ட பாடத்தில் ஜஸ்ட் மிஸ்ஸில் ‛ஃபெயில்' ஆனால் உடனடியாக ஆசிரியர், ஆசிரியைகளை நோக்கி சென்று ‛‛சார் ஒரு மார்க் மட்டும் போடுங்க சார்.. பாஸ் ஆகிடுவேன்'' என்று கெஞ்சிய அனுபவம் பலருக்கும் இருக்கும்.

ஆனால் அதுவே எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 அல்லது பல்கலைக்கழக தேர்வு என்றால் சாத்தியமா? கிடையவே கிடையாது. ஏனென்றால் நாம் எழுதிய தேர்வு விடைத்தாள் நம் பள்ளிக்கு அப்பால் வேறொரு ஆசிரியர், பேராசிரியரால் திருத்தி மதிப்பெண் வழங்கப்படும்.
இதனால் தேர்வு எழுதிய மாணவ-மாணவிகள் யார்? அவர்களின் பின்னணி என்ன? என்பது பற்றிய விபரம் தெரியாது. இதனால் சரியாக தேர்வு எழுதவில்லையெனில் தேர்வில் தோல்வியடைவது உறுதி. இந்நிலையில் தான் கர்நாடகாவில் எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வை சரியாக எழுதாத மாணவர்கள் பாஸ் ஆக வேண்டும் என்பதற்காக தங்களின் விடைத்தாளில் லஞ்சமாக பணம் வைத்து அனுப்பிய விவகாரம் தெரியவந்துள்ளது. அதுமட்டுமின்றி லஞ்ச பணத்தோடு, எதற்காக பாஸ் மார்க் போட வேண்டும் என்பது தொடர்பான விபரங்களையும் குறிப்பிட்டு உள்ளனர்.
இந்நிலையில் தான் எஸ்எஸ்எல்சி தேர்வை சரியாக எழுதாத மாணவர்கள் விடைத்தாளுக்குள் ரூ.500யை வைத்து பாஸ் மார்க் போடும்படி கூறியிருக்கும் தகவல் வெளியாகி உள்ளது. ஏதாவது ஒரு மாணவர் என்றால் பரவாயில்லை. பல மாணவர்கள் இப்படி 500 ரூபாய் பணத்தை வைத்து பாஸ் மார்க் கேட்டுள்ளனர். இந்த சம்பவம் கர்நாடகாவில் பெலகாவி மாவட்டத்தில் நடந்துள்ளது. அங்கு எஸ்எஸ்எல்சி விடைத்தாள் திருத்தும் பணி நடந்தது.
விடைத்தாளை திறந்தபோது சில மாணவர்கள் 500 ரூபாயை லஞ்சமாக வைத்துள்ளனர். அந்த பணத்தை வைத்து கொண்டு பாஸ் மார்க் போடும்படி எழுதி வைத்துள்ளனர். மேலும் அவர்கள் பாஸ் ஆவதன் முக்கியத்துவத்தையும் அவர்கள் விடைத்தாளில் குறிப்பிட்டுள்ளனர். அதன்படி மாணவர் ஒருவர், ‛‛நான் காதலிக்கிறேன். எனது காதல் கைகூட நான் பாஸ் ஆக வேண்டும். இந்த 500 ரூபாயை வைத்து கொண்டு எனக்கு பாஸ் மார்க் போட்டு விடுங்கள்'' என்று கூறியுள்ளார்.
அதேபோல் இன்னொரு மாணவர், ‛‛எனது காதல் உங்களின் கையில் தான் உள்ளது. என்னுடைய இந்த 500 ரூபாயை வைத்து கொண்டு தயவுசெய்து என்னை பாஸ் ஆக்கிவிடுங்கள்'' என தெரிவித்துள்ளார். மற்றொரு மாணவரோ, ‛‛இந்த 500 ரூபாயை எடுத்து கொள்ளுங்கள். டீ குடித்து கொள்ள பயன்படுத்தி கொள்ளுங்கள். என்னை தயவு செய்து பாஸ் ஆக்கிவிடுங்கள்'' என எழுதியுள்ளார்.
இந்த வரிசையில் இன்னொரு மாணவர், ‛‛என்னை பாஸ் ஆக்கினால் நான் உங்களுக்கு பணம் தருவேன்'' என்று விடைத்தாளில் எழுதி வைத்துள்ளார். இன்னும் சிலரோ எமோஷனாலாக பாஸ் மார்க் போடும்படி கெஞ்சியுள்ளனர். அதன்படி ஒருவர் ‛‛எனக்கு நீங்கள் பாஸ் மார்க் போடாவிட்டால் எனது பெற்றோர் கல்லூரி செல்ல அனுமதிக்கமாட்டார்கள்'' என எழுதி வைத்துள்ளார். இதுதொடர்பான போட்டோக்கள் தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications