ஓமிக்ரான் பரவல்: கர்நாடகாவிலும் டிசம்பர் 28 முதல் 10 நாட்களுக்கு இரவு நேர ஊரடங்கு!
பெங்களூரு: நாடு முழுவதும் ஓமிக்ரான் எனும் உருமாறிய கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வரும் நிலையில் கர்நாடகா மாநிலத்தில் டிசம்பர் 28-ந் தேதி முதல் 10 நாட்களுக்கு இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. டிசம்பர் 28-ந் தேதி முதல் இரவு 10 மணியில் இருந்து காலை 5 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படும் என கர்நாடகா அரசு அறிவித்துள்ளது.
Recommended Video
இந்தியாவில் ஓமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 422 ஆக அதிகரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து பல மாநிலங்கள் கொரோனா கால கட்டுப்பாடுகளை மீண்டும் அமல்படுத்தி வருகின்றன.
மகாராஷ்டிராவில் பாதிப்பு
நாட்டில் மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் மிக அதிகபட்சமாக 108 பேருக்கு ஓமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு அடுத்ததாக டெல்லியில் ஓமிக்ரான் பாதிப்பு அதிகம் உள்ளது.
பல மாநிலங்களில் ஊரடங்கு
மகாராஷ்டிராவில் இரவு 9 மணி முதல் காலை 6 மணிவரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கிறது. இரவு நேரங்களில் பொது இடங்களில் 5 பேருக்கு மேல் கூடுவதற்கும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. பொது நிகழ்ச்சிகளுக்குமான கட்டுப்பாடுகளையும் மகாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணிவரை ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
ஒடிஷாவில் தடை
உத்தரப்பிரதேச மாநிலத்திலும் இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கிறது. குஜராத்தில் இரவு 11 மணி முதல் காலை 5 மணிவரை ஊரடங்கு அமலில் உள்ளது. ஹரியானாவில் ஜனவரி 1-ந் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வருகிறது. பொதுநிகழ்ச்சிகளில் 200 பேருக்கு மேல் ஒன்றுகூடவும் அம்மாநில அரசு தடை விதித்துள்ளது. ஒடிஷாவில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்திலும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
கர்நாடகாவில் இரவு நேர ஊரடங்கு
இந்த நிலையில் கர்நாடகா மாநில அரசும் வரும் 28-ந் தேதி முதல் இரவு நேர ஊரடங்கை செயல்படுத்த உள்ளது. மேலும் மிகப் பெரிய பொது ஒன்றுகூடல் நிகழ்வுகளுக்கும் கர்நாடகா அரசு தடை விதித்துள்ளது. கர்நாடகாவில் இரவு 10 மணி முதல் காலை 5 மணிவரை ஊரடங்கு அமலில் இருக்கும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் 97% பேர் ஒரு டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். எஞ்சிய 3% பேருக்கு ஒரு டோஸ் தடுப்பூசி போடும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன என்றார் சுதாகர். மேலும் ஜனவரி 10 முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூச்சி போடப்படும் என்றும் அவர் கூறினார்.