ஆதரவு 99, எதிர்ப்பு 105 வாக்குகள்.. நம்பிக்கை வாக்கெடுப்பில் தோற்று கவிழ்ந்தது குமாரசாமி அரசு
Recommended Video
பெங்களூர்: நம்பிக்கை வாக்கெடுப்பில் தோற்றது குமாரசாமி தலைமையிலான கர்நாடக அரசு. அரசுக்கு ஆதரவாக 99 வாக்குகளும், எதிர்த்து பாஜகவுக்கு ஆதரவாக 105 வாக்குகளும் பதிவாகியிருந்தன. இதன் மூலம் 14 மாத கால காங்கிரஸ்-மஜத கூட்டணி அரசு கவிழ்ந்தது.
கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. இந்த நிலையில் அடுத்தடுத்து இந்த கூட்டணியை சேர்ந்த 16 எம்எல்ஏக்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர்.
அதில் ராமலிங்க ரெட்டி என்ற காங்கிரஸ் எம்எல்ஏ மட்டும் தனது முடிவை மாற்றிக் கொண்டு சட்டசபை நிகழ்வுகளில் கலந்து கொண்டார். மற்றவர்கள் மும்பையில் உள்ளனர். இந்த நிலையில்தான், தானாக முன்வந்து சட்டசபையில் தனக்கு பெரும்பான்மை இருப்பதை நிரூபிக்க போவதாக அறிவித்தார் குமாரசாமி.
கடந்த வியாழக்கிழமை, நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை அவர் சட்டசபையில் தாக்கல் செய்தார். ஆனால் அதிருப்தி எம்எல்ஏக்களை தங்கள் பக்கம் இழுப்பதில், காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தள கட்சித் தலைவர்கள் தோல்வியடைந்தனர். இதனால் உடனடியாக வாக்கெடுப்பை நடத்த ஆளும் தரப்பு விரும்பவில்லை. நம்பிக்கை தீர்மானத்தின் மீது, பேசி பேசியே நேரத்தை இழுத்தடித்து வந்தனர்.
ஒரு பக்கம் ஆளுநர், மறுபக்கம் உச்ச நீதிமன்றம், என நெருக்கடி தொடர்ந்த நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று சபாநாயகர் ரமேஷ் குமார் நேற்று கடுமையான உத்தரவை பிறப்பித்தார்.
இதை ஏற்று, நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீதான உறுப்பினர்களின் பேச்சு இன்று மாலை 5.30 மணிக்கு முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து முதல்வர் குமாரசாமி அவர்களுக்கு பதில் அளித்து பேசினார்.
பின்னர் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவது தொடர்பாக சபாநாயகர் குரல் வாக்கெடுப்பு நடத்தினார். இரு தரப்பிலும் ஆதரவு குரல்கள் எழுந்தன. இதையடுத்து எதிர்க்கட்சி தலைவர் எடியூரப்பா, டிவிஷன் வாக்கெடுப்புக்கு கோரிக்கைவிடுத்தார். சபாநாயகரும், டிவிஷன் ஓட்டுக்கு உத்தரவிட்டார்.
அதன்படி முதலில் ஆட்சிக்கு ஆதரவு அளிக்கும் எம்எல்ஏக்கள் வரிசையாக எண்ணப்பட்டனர். பிறகு ஆட்சிக்கு எதிரான எம்எல்ஏக்கள் எண்ணப்பட்டது. இரு தரப்பு வாக்குகளையும் இறுதியில் சபாநாயகர் ரமேஷ் குமார் அறிவித்தார்.
ஆட்சிக்கு ஆதரவாக 99 வாக்குகளும், எதிர்த்து 105 வாக்குகளும் பதிவானதாக அறிவித்தார், சபாநாயகர். இதன் மூலம், குமாரசாமி அரசு கவிழ்ந்தது. அடுத்ததாக, ஆளுநரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை குமாரசாமி வழங்க திட்டமிட்டுள்ளார்.