ரூ 8 கோடி சொத்துக்காக! கணவரையே கொன்ற மனைவி! உடலை எரிக்க 840 கி.மீ. தூரம் பயணம்! கர்நாடகாவில் ஷாக்
பெங்களூர்: கர்நாடகாவில் குடகு மாவட்டத்தில் உடல் பாதி எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில் அவரது மனைவி, கள்ளக்காதலன் உள்பட 3 பேரை போலீஸார் கைது செய்தனர். ரூ 8 கோடி சொத்துகளுக்காக கணவரை மனைவி கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த அக்டோபர் 8ஆம் தேதி கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் உள்ள காபி தோட்டத்தில் பாதி எரிந்த நிலையில் உடல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றினர்.

அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது அந்த வழியாக சிவப்பு கலரில் ஒரு கார் வந்து சென்றது சிசிடிவியில் பதிவாகியிருந்தது.
அந்த கார் ரமேஷ் என்பவரது பெயரில் பதிவாகியிருந்தது. இதை பறிமுதல் செய்து தீவிர விசாரணை நடத்தினர். இதுகுறித்து ரமேஷின் இரண்டாவது மனைவி நிகாரிகாவிடம் (29) விசாரணை நடத்தப்பட்டது. அப்போது நிகாரிகா முன்னுக்கு பின் முரணாக பேசியதால் போலீஸாருக்கு அவர் மீது சந்தேகம் எழுந்தது.
அப்போது அவரிடம் நடத்திய விசாரணையில் நிகாரிகா தனது காதலன் நிகில் என்பவருடன் சேர்ந்து கணவரை கொலை செய்தது தெரியவந்தது. விசாரணையில் நிகாரிகா கூறுகையில், எனக்கு சிறு வயதிலேயே திருமணமாகி குழந்தை பிறந்துவிட்டது. அதன் பிறகு எனது கணவனை பிரிந்துவிட்டேன்.

இதைத் தொடர்ந்து நிதி மோசடியில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு ஹரியானா சிறையில் அடைக்கப்பட்டேன். அங்கு எனக்கு அங்குர் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. சிறையில் இருந்து வெளியே வந்ததும் ரமேஷை நான் இரண்டாவது திருமணம் செய்து கொண்டேன் என்றார்.
ரமேஷ் , தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த தொழிலதிபர். இதனால் நிகாரிகா ஆடம்பரமாக வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் கணவரிடம் ரூ 8 கோடி பணத்தை கேட்டாராம். ஆனால் அவ்வளவு பணத்தை கொடுக்க ரமேஷ் மறுத்ததாக தெரிகிறது. இதனிடையே நிகாரிகாவுக்கு நிகில் என்பவருடன் தொடர்பு ஏற்பட்டது.
பிறகு அந்த பணத்தை தராமல் மறுத்த ரமேஷை கொலை செய்து அவரது பணத்தை அடையலாம் என நிகாரிகா திட்டமிட்டிருந்தார். இதற்கு கள்ளக்காதலன் நிகில், அங்குர் ஆகியோர் உதவி செய்வதாக தெரிவித்தனர். ரமேஷை ஹைதராபாத்தில் உப்பலில் மூச்சுத்திணறடித்து மூவரும் கொலை செய்தனர். பிறகு அந்த உடலை அப்புறப்படுத்த அங்கிருந்து 840 கி.மீ. தொலைவிற்கு சென்றனர்.
அதாவது கர்நாடகா மாநிலம் குடகு மாவட்டத்தில் காபி எஸ்டேட்டில் அவரது உடலை எரித்தனர். பின்னர் அவர்கள் ஹைதராபாத் வந்துவிட்டனர். இந்த நிலையில் ஹைதராபாத் வந்த நிகாரிகா , தனது கணவரை காணவில்லை என புகார் அளித்திருந்தார். இதுகுறித்து போலீஸார் கூறுகையில், இந்த வழக்கில் கொலையாளியை கண்டுபிடிப்பது மிகவும் சவாலானதாக இருந்தது.
நிகாரிகா அனைத்து ஆதாரங்களையும் அழித்துவிட்டார். உடல் எரிக்கப்பட்ட பகுதியில் நள்ளிரவில் கார் வந்தது சிசிடிவி காட்சிகளில் தெரியவந்தது. தும்கூர் வரை இருந்த 500 கேமராக்களை அலசி ஆராய்ந்த போதுதான் துப்பு கிடைத்தது. இதில் நிகாரிகாதான் முக்கிய குற்றவாளி, அவரையும் அவருக்கு உடந்தையாக இருந்த நிகில் , அங்குர் ஆகிய இருவரையும் கைது செய்துவிட்டோம். இவ்வாறு போலீஸார் தெரிவித்தனர். கைதானவர்களில் நிகில் கால்நடை மருத்துவர், அங்குர்,பெங்களூரைச் சேர்ந்தவர்.












Click it and Unblock the Notifications