டிகே சிவக்குமாருக்கு புதிய சிக்கல்.. பெங்களூர் எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து போர்க்கொடி.. பரபரப்பு
பெங்களூரு: கர்நாடக முதல்வராக பொறுப்பேற்றுள்ள டிகே சிவக்குமாருக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. இலாகா மாற்றம் மற்றும் அமைச்சர் பதவி கேட்டு டெல்லியில் காங்கிரஸ் தலைவர்கள் முகாமிட்டுள்ளதால் புதிய தலைவலி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பெங்களூர் நகர வளர்ச்சி துறையை பெற்ற கிருஷ்ணபைரே கவுடா போர்க்கொடி உயர்த்தி இருப்பது பெரும் பிரச்சனையாக பார்க்கப்படுகிறது.
கர்நாடகா முதல்வராக டிகே சிவக்குமார் கடந்த 3ம் தேதி பொறுப்பேற்றார். அவருடன் துணை முதல்வர், 12 அமைச்சர்கள் பதவியேற்றனர். இதையடுத்து தொடர்ந்து கர்நாடகா அரசியலில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. அமைச்சர் பதவி பெற்றவர்களும், அமைச்சர் பதவி கிடைக்காதவர்களும் தொடர்ந்து போர்க்கொடி உயர்த்தி வருகின்றனர்.

குறிப்பாக பெங்களூர் நகர வளர்ச்சி துறை ஒதுக்கவில்லை என்று கூறி மூத்த காங்கிரஸ் தலைவரும், பெங்களூர் பிடிஎம் லே-அவுட் தொகுதியின் எம்எல்ஏவுமான ராமலிங்க ரெட்டி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா கடந்த 5ம் தேதி ராஜினாமா செய்தார். அதன்பிறகு டிகே சிவக்குமார் சமாதானம் செய்தார். இதையடுத்து ராமலிங்க ரெட்டி தனது ராஜினாமாவை திரும்ப பெற்றார்.
அதன்பிறகு உணவு, பொது விநியோக துறையை பெற்ற அமைச்சர் கேஎச் முனியப்பா தனக்கு சமூக நலத்துறை கேட்டு அடம் பிடித்தார். ஆனால் சீனியர் தலைவர் இளம் தலைவர்களை அனுசரித்து செல்ல வேண்டும் என்று ராகுல் காந்தி நேரில் அழைத்து அட்வைஸ் கொடுத்ததால் அவர் அடங்கினார். கேஎச் முனியப்பா பெங்களூர் தேவனஹள்ளி சட்டசபை தொகுதியின் எம்எல்ஏவாக உள்ளார்.
இதனால் பிரச்சனை ஓவர் என்று நினைத்த நிலையில் தான் தற்போது புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதாவது அமைச்சராக பதவியேற்றுள்ள கிருஷ்ணபைரே கவுடா போர்க்கொடி உயர்த்தி உள்ளார். இவர் பெங்களூர் பேட்ராயனபுரா தொகுதியின் எம்எல்ஏவாக உள்ளார். இவருக்கு பெங்களூர் நகர வளர்ச்சி துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இந்நிலையில் தான் தற்போது அவர் போர்க்கொடி உயர்த்தியுள்ளார்.
அதாவது தனது துறைக்கு கூடுதல் அங்கீகாரம் தர வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
அதன்படி பெங்களூர் நகர வளர்ச்சி துறையின் கீழ் பிடிஏ (பெங்களூர் வளர்ச்சி குழுமம்), பிஎம்ஆர்டிஏ (பெங்களூர் மெ்டரோபாலிட்டர் மண்ட வளர்ச்சி குழுமம்) ஆகியவற்றையும் கொண்டு வர வேண்டும். அப்போது தான் பெங்களூர் நகர வளர்ச்சிக்கு சிறப்பாக பங்களிக்க முடியும் என்று கூறியுள்ளார். தற்போது இந்த பிடிஏ மற்றும் பிஎம்ஆர்டிஏ ஆகியவை பெங்களூர் நகர வளர்ச்சி துறையின் கீழ் வராத நிலையில் அதனை கிருஷ்ணபைரே கவுடா கேட்டுள்ளார்.
அதேபோல் பெங்களூர் சிவாஜி நகர் சட்டசபை தொகுதியின் எம்எல்ஏவாக ரிஸ்வான் அர்சத் உள்ளார். இவர் கடந்த 2019 இடைத்தேர்தலில் முதல் முறையாக வெற்றி பெற்றார். பிறகு 2023 சட்டசபை தேர்தலில் வென்றுள்ளார். இந்நிலையில் தான் இஸ்லாமியர் என்ற அடிப்படையில் தனக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்று ரிஸ்வான் அர்சத் போர்க்கொடி தூக்கி உள்ளார். தற்போது அமைச்சர் கிருஷ்ணபைரே கவுடா மற்றும் ரிஸ்வான் அர்சத் ஆகியோர் டெல்லி சென்று காங்கிரஸ் மேலிட தலைவர்களை சந்தித்து தங்களின் கோரிக்கையை வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications