வன்முறையை நிராகரித்த காஷ்மீர் மக்கள்.. தீவிரவாதிகள் ஜம்பம் பலிக்காது - மார்தட்டி சொன்ன ராணுவ தளபதி
பெங்களூர்: காஷ்மீர் மக்கள் வன்முறையை நிராகரித்துள்ளதாகக் கூறிய ராணுவத் தலைமை தளபதி மனோஜ் பாண்டே, இனி தீவிரவாதிகளின் ஜம்பம் அங்குப் பலிக்காது எனவும் தெரிவித்தார்.
இந்தியாவின் 75-வது ராணுவத் தின அணிவகுப்பு நிகழ்ச்சிகள் கர்நாடகா மாநிலம் பெங்களூரில் இன்று நடைபெற்றது.
ராணுவத் தின அணிவகுப்பு டெல்லிக்கு வெளியே நடைபெறுவது இதுவே முதல்முறையாகும். இதனால் இந்த அணிவகுப்பு நிகழ்ச்சியையும், ராணுவ வீரர்களின் சாகசங்களையும் பார்க்க ஆயிரக்கணக்கான மக்கள் அங்குக் குவிந்திருந்தனர். இந்நிகழ்ச்சியில் ராணுவத் தலைமை தளபதி மனோஜ் பாண்டே பேசியதாவது:
வரலாற்றில் முதல்முறையாக டெல்லிக்கு வெளியே ராணுவ தின அணிவகுப்பு -கர்நாடகாவில் அதிரடி காட்டிய வீரர்கள்
இரட்டிப்பு பதிலடி
இந்திய ராணுவம் எந்த மாதிரியான அச்சுறுத்தலையும், சவாலையும் சமாளிக்கக் கூடிய வல்லமையுடன் உள்ளது. இந்தியா மீது எதிரிகள் தாக்குதல் நடத்தினால் இரட்டிப்பு பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. இந்திய ராணுவத்தின் இந்த அதிரடியால் பாகிஸ்தான் எல்லையில் துப்பாக்கிச் சூடு போன்ற சம்பவங்கள் வெகுவாக குறைந்திருக்கின்றன. இருந்தபோதிலும், பாகிஸ்தானில் இருந்து தீவிரவாதிகள் ஊடுருவது குறையவில்லை. ஆனால், ஊடுருவும் தீவிரவாதிகள் உயிருடன் இருப்பதில்லை.
ட்ரோன் அச்சுறுத்தல்
இன்றைய காலகட்டத்தில், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி எதிரிகள் போக்கு காட்டி வருகின்றனர். தீவிரவாதிகளை நேரடியாக அனுப்புவதை விட ஆளில்லா விமானங்களான டிரோன்கள் மூலமாகக் காஷ்மீர் மற்றும் பஞ்சாபில் ஆயுதங்களையும், போதை பொருட்களையும் பாகிஸ்தான் விநியோகித்து வருகிறது. இந்த டிரோன் அச்சுறுத்தலைத் தடுப்பதற்காக, டிரோன் எதிர்ப்பு ஜாமர்களை இந்திய ராணுவம் பயன்படுத்தி வருகிறது.
வன்முறையை நிராகரிக்கும் காஷ்மீர்
கடந்த சில ஆண்டுகளாகவே அரசு மற்றும் ராணுவம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளால் காஷ்மீரில் நல்ல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அதில் முதன்மையானது, காஷ்மீர் மக்கள் வன்முறையை நிராகரித்திருப்பது. வன்முறை மூலம் எதுவும் சாதிக்க முடியாது என்பதைக் காஷ்மீர் மக்கள் உணர்ந்துள்ளனர். இதனால் தீவிரவாத இயக்கங்களுக்கு அவர்கள் பலி கடா ஆவது தடுக்கப்பட்டுள்ளது.
விளம்பரத்தைத் தேடும் தீவிரவாதிகள்
ராணுவம் மற்றும் பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கையால் காஷ்மீரில் வன்முறை குறைந்துள்ளது. அந்த விரக்தியில், சில உள்ளூர் தீவிரவாத அமைப்புகள் அப்பாவி மக்களை குறிவைத்துத் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதன் மூலம் தங்கள் அமைப்புகளுக்கு அவை விளம்பரம் தேடிக்கொள்கின்றன. இந்த முயற்சிகளையும் முறியடிக்க, மற்ற பாதுகாப்புப் படையினருடன் இணைந்து ராணுவம் பணியாற்றி வருகிறது. இவ்வாறு மனோஜ் பாண்டே கூறினார்.