Exclusive: குமாரசாமி அரசு கவிழ ஈகோதான் காரணம்.. நடிகை மாளவிகா அதிரடி
பெங்களூரு: குமாரசாமி அரசு கவிழ்ந்ததற்கு அவரது ஈகோ தான் காரணம் என்று கர்நாடக பாஜக செய்தித்தொடர்பாளரும் நடிகையுமான மாளவிகா அவினாஷ் கூறியுள்ளார்.
அண்ணி தொலைக்காட்சித் தொடர் மூலம் தமிழக மக்களுக்கு அறிமுகமானவர் மாளவிகா. நிறையப் படங்களில் நடித்துள்ளார். தற்போது கர்நாடக பாஜக செய்தித் தொடர்பாளராக இருக்கும் மாளவிகாவிடம் அங்குள்ள நிலவரம் குறித்துக் கேட்டோம்.
குமாரசாமி அரசு கவிழ பாஜகதான் காரணமா என்று கேட்டபோது, அட அதெல்லாம் இல்லைங்க. அவரோட ஈகோதான் காரணம் என்று அதிரடியாக கூறினார் மாளவிகா. மாளவிகா நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியிலிருந்து...
கேள்வி: கர்நாடகாவில் ஒரு வழியாக பாஜக ஆட்சி அமைக்கப்போகிறது, இதை எப்படி பார்க்கிறீர்கள்?
பதில்: கடந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜகவை விட குறைந்த தொகுதிகளில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி, மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் கூட்டணி அமைத்து ஆட்சி நடத்தி வந்தது..மைனாரிட்டி ஆட்சி நடத்தி வந்த குமாரசாமிக்கும், சித்தராமையாவுக்கும் அவ்வப்போது கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டன. இதைப்பற்றி இருவருமே பல நேரங்களில் வெளிப்படையாக தெரிவித்துள்ளனர். அவர்களுக்குள் இருந்த 'ஈகோ', மற்றும் முரண்பாடு காரணமாகவே ஆட்சி கவிழ்ந்துள்ளது. இதற்கு பாஜகவை காரணம் கூறுவது ஏற்புடையதல்ல. நாங்கள் வேடிக்கை மட்டுமே பார்த்தோம்.
கேள்வி : குமாரசாமி தலைமையிலான அரசு கவிழ சித்தராமையா தான் காரணம் என்பது போல் கூறுகிறீர்கள், அவர் ஆட்சியை தக்க வைக்கத் தானே முயற்சித்தார்?
பதில்: குமாரசாமி, சித்தராமையா ஆகிய இருவர் மீதும் அதிருப்தி அடைந்ததால் தான் 16 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா கடிதம் அளித்தார்கள். இந்த ஆட்சிக்கு ஆதரவளிக்க மாட்டோம் என அவர்கள் உறுதியாக இருந்தார்கள். அப்போது நாங்கள் என்ன செய்ய முடியும்.
கேள்வி: பாஜகவிடம் எதிர்ப்பார்ப்பு இல்லாமலா 16 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா கடிதம் அளித்திருப்பார்கள்?
பதில்: ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும், ராஜினாமா கடிதம் தந்த எம்.எல்.ஏ.க்களில் சிலருக்கு சித்தராமையா மீது அதிருப்தி இருந்தது, சிலருக்கு குமாரசாமி நடவடிக்கைகள் பிடிக்கவில்லை, சிலருக்கு காங்கிரஸ் தலைமை மீது கோபம் இருந்தது..இப்படி பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. காங்கிரஸ், ம.ஜனதா தளம் இடையே பல மாதங்களாக நிலவி வந்த கருத்துமோதல் ஒரு கட்டத்தில் வெடித்து வெளிச்சத்திற்கு வந்துள்ளன.
கேள்வி: கோவாவில் பாஜகவை விட காங்கிரஸ் அதிக தொகுதிகளில் வெற்றிபெற்றது, ஆனால் அங்கு நீங்கள்(பாஜக) ஆட்சி அமைக்கவில்லையா?
பதில்: கோவாவில் ஆட்சி அமைக்க காங்கிரஸ் உரிமை கோரியதா? சொல்லுங்கள்..உரிமை கோராமல் அசட்டையாக இருந்ததற்கு நாங்கள் எப்படி பொறுப்பேற்க முடியும்.நாங்கள் ஆட்சி அமைக்க உரிமை கோரினோம். ஆதரவு திரட்டினோம். காங்கிரஸ் முயற்சியே செய்யாத போது அவர்கள் எப்படி ஆட்சி அமைக்க முடியும்.கோவாவையும் கர்நாடகாவையும் ஒப்பிடாதீர்கள்.
கேள்வி: அடுத்த மூன்றரை ஆண்டுகால ஆட்சியை பாஜக நிறைவு செய்து விடுமா?
பதில்: தற்போதைய சூழலில் எங்களிடம் பெரும்பான்மை இருக்கிறது. முதலில் ஆளுநர் ஆட்சியமைக்க அழைப்பு விடுக்கட்டும்..அதற்குள் நிறைவு செய்வீர்களா, நீடிப்பார்கள் எனக்கேட்கிறீர்கள்..
கேள்வி : சபாநாயகர் ரமேஷ்குமார் ஒரு கட்டத்தில் விரக்தி நிலைக்கு வந்தது போல் தெரிகிறதே..?
பதில்: சபாநாயகர் பற்றி கருத்துக் கூற முடியாது. நம்பிக்கை வாக்கெடுப்பு விவகாரத்தில் சபாநாயகர் பேச்சுக்கு குமாரசாமி மதிப்பு தரவில்லை, ஆளுநர் கடிதம் அனுப்பியிருந்தார் அதையும் அவர் மதிக்கவில்லை. இறுதியாக உச்சநீதிமன்றம் தலையிட வேண்டிய சூழல் குமாரசாமியால் தான் ஏற்பட்டது. இதன் காரணமாக கூட இருக்கலாம் என்றார் மாளவிகா.