கட்சியினரை கூல் பண்ணும் காங், ம. ஜனதா தளம்.. அமைச்சர் கனவில் காங்.எம்எல்ஏக்கள்!
பெங்களுரு: பெரும் எதிர்ப்பார்ப்புகளுக்கு இடையே வரும் 22ம் தேதி கர்நாடக அமைச்சரவை விரிவுபடுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு வழியாக காங்கிரஸ் கட்சியினரும், மத சார்பற்ற ஜனதா தள கட்சியினரும் எதிர்பார்த்திருந்த சட்டசபை விரிவாக்கம் தொடர்பான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

கடந்த மே மாதம் ஆட்சியில் அமர்ந்த காங்கிரஸ், மத சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அரசு, அரசியல் பரபரப்புக்கு பஞ்சமில்லாத வகையில் சென்று கொண்டிருக்கிறது.
மேடையில் குமாரசாமி கண்ணீர் விட்டு கதறிய காட்சிகள் ஒரு பக்கம் அரங்கேறின. அவரது கண்ணீர் தேசிய அரசியல் அரங்கில் முக்கியத்துவத்தை பெற்றாலும், கூட்டணிக்குள் அதிகார பரவல் தொடர்பான லாவணிகள், இரு கட்சிகளின் முக்கிய பிரமுகர்களிடையே பதவிகளை பிடிக்க முட்டல், மோதல் என ஒரு வழியாக மாநில அரசு செயல்பட்டு கொண்டிருக்கிறது.
இந்நிலையில், வரும் 22ம் தேதி கர்நாடக அமைச்சரவை விரிவுபடுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பெங்களுருவில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் முக்கிய தலைவருமான சித்தராமையா, ஆளும்கட்சியின் 5 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழுவின் நீண்ட ஆலோசனைக்கு பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
கூட்டத்தில், அமைச்சர் பதவி கேட்டு அடம்பிடிக்கும் கட்சி எம்எல்ஏக்கள் பற்றியும், அவர்களை சமாளிப்பது குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது. காரசார விவாதத்துக்கு பிறகு, அமைச்சரவையை விரிவாக்கம் செய்வது என்று முடிவு எடுக்கப்பட்டது.
அதன்படி, காங்கிரசில் இருந்து 6 பேரும், மதசார்பற்ற ஜனதா தளத்தில் இருந்து 2 பேரும் அமைச்சர்களாக பொறுப்பேற்க உள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
தொடர்ந்து பலமுறை தள்ளி போடப்பட்ட அமைச்சரவை விரிவாக்கத்துக்கு தற்போது நாள் குறிக்கப்பட்டுள்ளதால், இரு கட்சியினரும் குஷியாக உள்ளனர்.
அமைச்சரவை விரிவாக்கம், கூட்டணிக்குள் இணக்கம் என்பது போன்று தென்பட்டாலும், எந்த எம்எல்ஏக்களும் காங்கிரசை விட்டு செல்லவில்லை என்றும், மாற்று கட்சியினருடன் ரகசிய ஆலோசனை என்பது போன்ற வதந்திகளும் கசிந்து கொண்டிருக்கின்றன.












Click it and Unblock the Notifications