சந்திரயான் 3 விண்கலம்.. விக்ரம் லேண்டர் தரையிறங்குவது தாமதம் ஆகிறதா? இஸ்ரோ விஞ்ஞானி சொன்ன தகவல்
பெங்களூர்: நிலவின் தென் துருவத்தில் சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் வரும் 23 ஆம் தேதி தரையிறங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிகழ்வை உலகமே எதிர்பார்த்துக் கொண்டு இருக்கும் நிலையில், சாதகமான சூழல் இல்லை என்றால் லேண்டர் நிலவில் தரையிறங்குவது சில நாட்கள் தாமதம் ஆகும் என இஸ்ரோ விஞ்ஞானி தெரிவித்துள்ளார்.
நிலவு குறித்த ஆராய்ச்சில் முக்கிய மைல் கல் ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் திட்டம் சந்திரயான் 3.. இதுவரை அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகள் நிலவு ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது. இருந்தாலும் தென் துருவத்தில் இதுவரை எந்த நாடும் ஆய்வு மேற்கொண்டது இல்லை. நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான் 3 விண்கலம் கடந்த ஜூலை 14-ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது.

இஸ்ரோ அனுப்பிய சந்திரயான்-3 விண்கலம் எல்விஎம் ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது. நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்யும் ரஷியாவின் லூனா-25 திட்ட தோல்வியில் முடிந்தது. ரஷ்யா தவறவிட்டதை சந்திரயான்-3 விண்கலத்தின் மூலம் சாதித்துக் காட்ட இஸ்ரோ தயாரகிக் கொண்டு இருக்கிறது. நாளை மறுநாள் மாலை 6.04 மணிக்கு நிலவில் விக்ரம் லேண்டர் தரையிறங்க உள்ளது.
அடுத்த 2 நாட்களில் சந்திரயான்-3-ன் நிலை தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்று இஸ்ரோ தலைவர் கூறியுள்ளார். தொடர்ந்து நிலவு வட்டப்பாதையில் சுற்றி வரும் ரோவர், லேண்டரின் நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகிறது.லேண்டர் அபாயத்தைக் கண்டறிதல் மற்றும் தவிர்ப்பு கேமரா மூலம் நிலவின் தென் துருவத்தில் எடுத்த புகைப்படங்களை தொடர்ந்து அனுப்பி வருகிறது என்று விஞ்ஞானிகள் கூறினர்.
இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் மிகுந்த எதிர்பார்பார்ப்பை இந்த நிகழ்வு ஏற்படுத்தியுள்ளது. விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்குவதை நேரலையில் காணலாம் என்று இஸ்ரோ கூறியுள்ளது. புதன் கிழமை மாலை 5.27 மணி முதல் நேரலை ஒளிபரப்பு தொடங்கிவிடும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது. இஸ்ரோ இணையதளம் (https://www.isro.gov.in/) , யூடியூப் , இஸ்ரோவின் முகநூல் பக்கம் (https://www.facebook.com/ISRO/) மற்றும் டிடி நேஷனல் டிவி. சேனல் உள்ளிட்டவற்றில் இது நேரலையாக ஒளிபரப்பப்படும் என இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, சாதகமான சூழல் இல்லை என்றால் சந்திரயான் 3 விண்கலம் தரையிறங்குவதில் தாமதம் ஏற்படும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த இஸ்ரோவின் விண்வெளி செயல்பாட்டு மையத்தின் விஞ்ஞானி நிலேஷ் எம். தேசாய், சாதகமான சூழல் இல்லை என்றால் சந்திரயான் விண்கலம் தரையிறங்குவது தள்ளி வைக்கப்படும் என்றார். இது குறித்து அவர் கூறுகையில்,
லேண்டரின் தன்மை மற்றும் நிலவில் இருக்கும் சூழல் ஆகியவற்றின் அடிப்படையில் தரையிறங்குவது குறித்து முடிவு எடுக்கப்படும் ஆகஸ்டு 23-ந்தேதி சந்திரயான்-3 தரையிறங்குவதற்கு சரியாக 2 மணிநேரத்திற்கு முன்பு, அது தரையிறங்குவது அப்போது சரியா? இல்லையா? என்பது குறித்து முடிவு செய்யப்படும். சாதகமற்ற சூழல் நிலவினால் லேண்டரை தரையிறங்குவது ஆகஸ்டு 27-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்படும். எனினும் எந்த பிரச்சினையும் ஏற்படாது. திட்டமிட்டபடி ஆகஸ்ட் 23 ஆம் தேதி தரையிறக்க முடியும்" என்றார்.












Click it and Unblock the Notifications