கன்னடம் கற்பது கட்டாயம்.. பெங்களூர் உள்பட கர்நாடகத்தில் பிறமாநில பணியாளர்களுக்கு ‛செக்‛! புதிய மசோதா
பெங்களூர்: பெங்களூர் உள்பட கர்நாடகம் முழுவதும் கன்னட மொழி பயன்பாட்டை ஊக்குவிக்கவும், வேலைகளில் கன்னடர்களுக்கு முன்னுரிமை அளிக்காத நிறுவனங்களுக்கு வழங்கும் சலுகைகளை நீக்கம் செய்யவும் கர்நாடக அரசு சார்பில் புதிதாக மசோதா கொண்டு வரப்பட்டு நடப்பு சட்டசபை கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
கர்நாடகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் கட்சி திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. இதற்காக ஆளும் பாஜக அரசுக்கு எதிராக ஊழல் புகார் கூறி வருகிறது.
இது ஒருபுறம் இருக்க மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்கும் நோக்கில் பாஜக கட்சி செயல்பட்டு வருகிறது. அதன்படி கர்நாடகத்தல் கன்னட மொழியை வளர்க்கவும், மாநிலத்தில் தனியார் வேலைவாய்ப்பில் கர்நாடகத்தை சேர்ந்த மக்களுக்கு முன்னுரிமை வழங்குவதில் கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளது.
நிர்வாண போட்டக்களை பகிர்ந்த சென்னை மருத்துவர்! பிளான் போட்டு அடித்தே கொன்ற காதலி! மிரண்ட பெங்களூர்
கன்னட மொழிக்கான மசோதா
அதன்படி கர்நாடகத்தில் ஆட்சி செய்யும் பாஜக அரசு சார்பில் புதிய வரைவு முன்மொழிவு மசோதா ஒன்று தயார் செய்யப்பட்டுள்ளது. இது கன்னட மொழிக்கான விரிவான மேம்பாட்டு மசோதா என அழைக்கப்படுகிறது. இந்த மசோதாவானது விரைவில் நடைபெற உள்ள அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டு நடப்பு சட்டசபை கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
மசோதாவின் அம்சங்கள் என்ன?
இந்த மசோதாவின்படி மாநிலத்தில் கன்னட மொழியை அனைத்து கல்வி, தகவல் தொடர்பு உள்பட அனைத்து வகையிலும் பயன்படுத்த வழிவகை செய்யும். மாநிலத்தின் அதிகாரப்பூர்வ மொழியாக கன்னடாவை எடுத்துரைக்கும். கர்நாடக ஆளுநர் முதல் மத்திய அரசு, பிற துறைகள், தொழில்கள், கூட்டுறவு சங்கங்கள் பிறப்பிக்கும் உத்தரவுகள் அனைத்தும் கன்னட மொழியில் இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்யும். மேலும் அனைத்து கீழமை நீதிமன்றங்கள், மாநில தீர்ப்பாயங்கள் மற்றும் நீதித்துறை சார் அமைப்புகளில் கன்னட மொழி பயன்படுத்தப்பட வேண்டும். என்பதையும், கன்னடத்தில் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட வேண்டும் என்பதையும் மசோதா வலியுறுத்துகிறது. கூடுதலாக ஆங்கிலத்திலும் உத்தரவுகளை வெளியிட முடியும்.
பெயர் பலகைகளில் கன்னடம்
அதோடு மாநிலம் முழுவதும் அனைத்து பெயர் பலகைகளும் கன்னட மொழியில் இருக்க வேண்டும். மத்திய அரசு மற்றும் அதன் நிதியுதவி பெறும் அமைப்புகளின் பெயர் பலகைகளும் கன்னடத்தில் இருக்க வேண்டும். 10ம் வகுப்பு வரையிலான தொழில்முறை பயிற்சி கல்லூரி மாணவர்கள் கன்னடத்தை பாடமாக எடுத்து கொள்ளாத நிலையில் அவர்களுக்கு சிறப்பு முறையில் கன்னடம் கற்பிக்க வழிவகை செய்யப்படும். கன்னட கலாச்சாரம் மற்றும் நெறிமுறைகள் புரிந்து கொள்ளும் வகையில் கூடுதலாக பாடம் அறிமுகம் செய்யப்படும். 10ம் வகுப்பு வரை கன்னடத்தை முதன்மை அல்லது 2வது மொழியாக மாணவர்-மாணவிகள் படிக்காத நிலையில் அரசு பணிக்கு விண்ணப்பம் செய்தால் அதற்கு தகுதி தேர்வு நடத்தப்படும். இது கர்நாடக அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.
கன்னட மொழி கட்டாயம்
இதுமட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்து கர்நாடகம் வந்து பணியாற்றுவோருக்கு கன்னட மொழியை எழுத, படிக்க கற்று கொடுப்பதை உறுதி செய்ய வைக்கும். மேலும் கர்நாடகத்தில் பிறந்தவர்களுக்கு வேலையில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்பதை உறுதி செய்யும். இதனை முறைப்படி பின்பற்றாத நிறுவனங்களுக்கு வழங்கப்படும் சலுகைகள், ஊக்கத்தொகைகளை ரத்து செய்யவும் இந்த மசோதா வழிவகுக்கும் என கூறப்படுகிறது.
கன்னடர்கள் யார்?
இந்த மசோதாவின் அடிப்படையில் கன்னடர்கள் என்பவர்கள் யார் என்றால் "15 ஆண்டுகக்கு குறையாமல் கர்நாடகத்தில் வசித்திருப்பதோடு, 10 ஆம் வகுப்பு வரை கன்னடத்தை ஒரு மொழியாக படிக்கவும், எழுதவும், பேசவும் கற்றுக் கொண்டவராகவும் இருக்க வேண்டும்''என வரையறை செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த மசோதா மூலம் 1984ல் சமர்ப்பிக்கப்பட்ட சரோஜினி மகிஷி அறிக்கையின்படி 58 பரிந்துரைகளின்படி கன்னடர்களின் உரிமைகளை பாதுகாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி மகிஷி அறிக்கையின்படி கர்நாடகத்தில் மத்திய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் குரூப் சி மற்றும் குரூப் டி பணியிடங்களிலம் 100 சதவீதம் கன்னட மக்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும். மேலும் தனியார் நிறுவனங்கள், மல்டி நேஷனல் நிறுவனங்களிலும் குறிப்பிட்ட சதவீதத்திலான பணிகளை கன்னட மக்களுக்கு வழங்க வேண்டியது கட்டாயமாகும்.
அபராதம் வசூலிக்க முடியும்
கன்னட வளர்ச்சி குழுமத்தின் தலைவர் டி எஸ் நாகாபரணா கூறுகையில், ‛‛ இந்த மசோதா என்பது கன்னடர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் கொண்டு வரப்பட உள்ளது. மாநிலம் முழுவதும் கன்னடத்தை முழுவதுமாக அமல்படுத்துவதை உறுதிசெய்ய இந்த மசோதா அதிகாரிகளுக்கு வலுசேர்க்கும். முன்னதாக, கன்னடா வளர்ச்சி குழுமத்தின் உத்தரவுகளை பின்பற்றாதவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மட்டுமே இருந்தது. இந்த மசோதாவின்படி விதிமீறினால் அபராதம் விதிக்கவும் முடியும் ''என்றார்.
கன்னட அமைப்பினர் வரவேற்பு
மேலும் இந்த மசோதா என்பது மாநிலத்தில் உள்ளூர் மொழியில் தகவல் தொடர்பை ஏற்படுத்தவும், மாநிலத்தில் பணிபுரியும் பிற மாநிலத்தவர்களுக்கு கன்னட மொழியை தொடர்புப்படுத்தும் வகையிலும் தான் இந்த மசோதா நிறைவேற்றப்பட உள்ளதாக கர்நாடக பாஜக அரசு சார்பில் கூறப்பட்டுள்ளது. கர்நாடக அரசின் இந்த நடைமுறையை கன்னட அமைப்பினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இந்த மசோதா என்பது கர்நாடகத்தில் கன்னட மக்களின் உரிமையை பாதுகாக்கும் எனவும், மகிஷி அறிக்கையின் பரிந்துரைகளை உயிர்ப்புடன் வைத்து செயல்படுத்த வழிவகுக்கும் எனவும் கருத்து தெரிவித்துள்ளனர்.