வீட்டுக்குள் நுழைந்த சிறுத்தை.. 5 பேரை கடித்து குதறிய சோகம்.. கர்நாடகாவில் நடந்த திக்திக் சம்பவம்
பெங்களூர்: கர்நாடகாவில் திடீரென்று சிறுத்தை ஒன்று குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தது. 3 கிராமங்களில் ஜாலியாக உலா வந்தது. சிறுத்தையை பார்த்து பொதுமக்கள் மிரண்டு ஓடினர். திடீரென்று ஆக்ரோஷமான சிறுத்தை 2 பெண்கள் உள்பட 5 பேரை கடித்து குதறியது. வீட்டில் புகுந்து சிறுத்தை தாக்கியதால் பொதுமக்கள் பீதியில் உறைந்து போயினர்.
கர்நாடகா மாநிலம் துமகூரு மாவட்டம் துருவக்கெரே தாலுகாவில் கோனிதுமகூரு என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமம் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. இந்த கிராமம் மட்டுமின்றி அதனை சுற்றிய பிற கிராமங்களில் அடிக்கடி வனவிலங்குகள் வந்து செல்வது வழக்கம்.

இந்நிலையில் தான் கடந்த சில நாட்களாக சிறுத்தை நடமாட்டம் இருந்து வந்தது. கோனிதுமகூரு, தேவஹள்ளி, நவுவனஹள்ளி உள்ளிட்ட கிராமங்களை சுற்றி சிறுத்தை ஒன்று உலா வந்துள்ளது.
இதனால் சிறுத்தையை பிடிக்க வேண்டும் என்று வனத்துறையினரிடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால் வனத்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்நிலையில் தான் நேற்று மாலையில் அந்த சிறுத்தை திடீரென்று கோனிதுமகூரு கிராமத்துக்குள் நுழைந்தது. இந்த சிறுத்தையை பார்த்த மக்கள் தங்களின் வீடுகளுக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டனர்.
ஆள்நடமாட்டம் இல்லாத கிராமத்தில் சிறுத்தை ஜாலியாக உலா வந்தது. இதற்கிடையே தான் சிறுத்தை நடமாட்டம் பற்றி அறியாத வனஜாக்சி, உச்சம்மா, போரேகவுடா ஆகியோர் தங்களின் வீட்டுக்கு வெளியே நின்றுள்ளார். அந்த சமயத்தில் அங்கு சென்ற சிறுத்தை அவர்கள் 3 பேரையும் கடித்துள்ளது. சிறுத்தை தாக்கிய அதிர்ச்சியில் அவர்கள் கத்தி கூச்சலிட்டுள்ளனர்.
இதில் மிரண்டுபோன சிறுத்தை உடனடியாக அங்கிருந்து ஓட்டம் பிடித்தது. கோனேதுமகூருவில் இருந்து அந்த சிறுத்தை அருகே உள்ள தேவஹள்ளி கிராமத்துக்குள் நுழைந்தது. அங்கு லிங்கேகவுடா மற்றும் சேகர் ஆகியோரை தாக்கியது. இதில் சேகர் என்பவரை வீடு புகுந்து சிறுத்தை தாக்கியது. இந்த சமயத்தில் சுதாரித்த சேகர் சிறுத்தையை தனது வீட்டுக்குள் வைத்து பூட்டிவிட்டு வெளியே ஓடிவந்தார்.
இதையடுத்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறையினர் விரைந்து வந்து மயக்க ஊசி செலுத்தி சிறுத்தையை பிடித்து சென்றனர். சிறுத்தை தாக்கியதில் காயமடைந்த 5 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முன்னதாக இந்த சிறுத்தை நவுவனஹள்ளி கிராமத்துக்குள் நுழைந்திருந்தது. அதிர்ஷ்டவசமாக அங்கு சிறுத்தை யாரையும் தாக்கவில்லை. அங்கிருந்து தான் கோனேதுமகூரு மற்றும் தேவஹள்ளி கிராமத்துக்குள் நுழைந்து 5 பேரை தாக்கி உள்ளது.












Click it and Unblock the Notifications