‛சென்னையை விட மோசம்’.. லோக்சபா தேர்தலில் பெங்களூரில் ஓட்டுப்போடாத 50% பேர்! ஏன் இப்படி இருக்காங்க
பெங்களூர்: கர்நாடகாவில் நேற்று நடந்த லோக்சபா தேர்தலில் பெங்களூரில் சுமார் 50 சதவீதம் பேர் ஓட்டளிக்கவில்லை. அதோடு சென்னையில் உள்ள 3 லோக்சபா தொகுதிகளை ஒப்பிடும்போது பெங்களூரில் உள்ள 3 தொகுதிகளில் குறைந்த அளவில் தான் ஓட்டு பதிவாகி உள்ளது. இதனால் நெட்டிசன்கள் விமர்சிக்க தொடங்கி உள்ளன.
கர்நாடகாவில் மொத்தம் 28 லோக்சபா தொகுதிகள் இருக்கும் நிலையில் 2 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி முதற்கட்ட தேர்தல் ஏப்ரல் 26ம் தேதியும், 2ம் கட்ட தேர்தல் மே 7 ம் தேதியும் நடைபெறும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதையடுத்து நேற்று கர்நாடகாவில் பெங்களூரில் உள்ள 3 தொகுதிகள் உள்பட தென்கர்நாடகாவில் உள்ள 14 லோக்சபா தொகுதிகளுக்கு முதற்கட்டமாக தேர்தல் நடந்தது. காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரை தேர்தல் நடந்தது.
இதில் மொத்தம் 69.23 சதவீத ஓட்டுகள் பதிவாகியது. அதிகபட்சமாக மண்டியா தொகுதியில் 81.48 சதவீத ஓட்டுகள் பதிவாகி இருந்தது. இந்த தொகுதியில் கர்நாடகா முன்னாள் முதல்வரும், ஜேடிஎஸ் கட்சியின் தலைவருமான குமாரசாமி போட்டியிட்டுள்ளார். அவர் பாஜக, ஜேடிஎஸ் வேட்பாளராக களமிறங்கி உள்ளார். மேலும் உடுப்பி சிக்கமகளூர் தொகுதியில் 76.06 சதவீதம், ஹாசனில் 77.51 சதவீதம், தட்சின கன்னடாவில் 77.43 சதவீதம், சித்ரதுர்காவி் 73.11 சதவீதம், துமகூருவில் 77.70 சதவீத ஓட்டுகள் பதிவாகி இருந்தது.
மைசூரில் 70.45 சதவீதம், சாமராஜநகரில் 76.59 சதவீதம், சிக்கபள்ளாப்பூரில் 76.82 சதவீதம், கோலாரில் 78.01 சதவீதம், பெங்களூர் புறநகரில் 67.29 சதவீதம், பெங்களூர் வடக்கில் 54.42 சதவீதம், பெங்களூர் சென்ட்ரலில் 52.81 சதவீதம், பெங்களூர் தெற்கில் 53.15 சதவீதம் ஓட்டுகள் மட்டுமே பதிவாகி உள்ளது.
குறிப்பாக பெங்களூர் சிட்டியில் உள்ள பெங்களூர் வடக்கு, பெங்களூர் சென்ட்ரல், பெங்களூர் தெற்கில் குறைந்த அளவில் தான் ஓட்டுப்பதிவாகி உள்ளது. இது சென்னையில் உள்ள 3 லோக்சபா தொகுதிகளை ஒப்பிடும்போதும் குறைந்த அளவாக உள்ளது. இதன்மூலம் சென்னையை ஒப்பிடும்போது பெங்களூரில் குறைந்த அளவிலான மக்கள் தான் ஓட்டளித்துள்ளனர் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.
அதாவது தமிழ்நாட்டில் கடந்த 19ம் தேதி 39 லோக்சபா தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. இதில் மொத்தம் 69.71 சதவீத ஓட்டுகள் பதிவான நிலையில் மத்திய சென்னையில் 53.96 சதவீதம், வடசென்னையில் 60.11 சதவீதம், தென்சென்னையில் 54.17 சதவீத ஓட்டுகள் பதிவாகி இருந்தது. தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் மத்திய சென்னையில் தான் குறைந்த பட்சமாக 53.96 சதவீத ஓட்டுகள் பதிவானது. ஆனால் மத்திய சென்னையை விட பெங்களூரில் தெற்கில் 53.15 சதவீதம், பெங்களூர் சென்ட்ரலில் 52.81 சதவீத ஓட்டுகள் என குறைந்த அளவில் தான் பதிவாகி உள்ளது.
பொதுவாகவே சட்டசபை தேர்தல், லோக்சபா தேர்தல் என எதை எடுத்து கொண்டாலும் கூட சென்னை, பெங்களூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் குறைந்த அளவில் தான் மக்கள் ஓட்டளித்து வருகின்றனர். அதுதான் தற்போதைய தேர்தலிலும் நடந்துள்ளது. இந்நிலையில் தான் ஓட்டளிக்காத நகரவாசிகளை நெட்டிசன்கள் வலைதளங்களில் விமர்சனம் செய்ய தொடங்கி உள்ளனர்.












Click it and Unblock the Notifications