‛பேஸ்மேக்கர்’ கருவியில் மல்லிகார்ஜூன கார்கே.. பெங்களூர் மருத்துவமனையில் திடீர் அறுவை சிகிச்சை
பெங்களூர்: காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே நேற்று முன்தினம் இரவு பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் தான் அவருக்கு இதயம் சார்ந்த பிரச்சனை இருந்தது. இதய துடிப்பில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக அவருக்கு ‛பேஸ்மேக்கர்' கருவி பொருத்தப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக இருப்பவர் மல்லிகார்ஜூன கார்கே. வயது 82. கர்நாடகாவின் கலபுரகி மாவட்டத்தை சேர்ந்த மல்லிகார்ஜூன கார்கே நேற்று முன்தினம் இரவில் பெங்களூரில் உள்ள எம்எஸ் ராமய்யா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் பிரச்சனையால் அவர் பாதிக்கப்பட்டதாகவும், இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் தான் அவருக்கு இதயம் சார்ந்த பிரச்சனை இருந்தது.
அதாவது மல்லிகார்ஜூன கார்கேவின் இதய துடிப்பில் மாறுபாடுகள் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நள்ளிரவில் மல்லிகார்ஜூன கார்கேவிற்கு அறுவை சிகிச்சை மூலமாக பேஸ் மேக்கர் கருவி உடலில் பொருத்தப்பட்டுள்ளது. மல்லிகார்ஜூன கார்கேவிற்கு ஏற்கனவே இதயத்தில் பிரச்சனை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பேஸ்மேக்கர் சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. அதனடிப்படையில் இன்று அந்த சிகிச்சை வெற்றிகரமாக நடந்துள்ளது.
பேஸ்மேக்கர் கருவி என்பது இதயத்தின் சீரான இயக்கத்துக்கு உதவும். இதய தசைகளில் பிரச்சனை ஏற்படும்போது அதன் துடிப்பு விகிதம் குறையும். இது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும். இதனை சரிசெய்யும் வகையில் உடலில் இடதுபக்க மார்பின் இதயத்தின் அருகே பேஸ்மேக்கர் என்ற கருவி அறுவை சிகிச்சை மூலமாக பொருத்தப்படும். இது பேட்டரி உதவியுடன் இயங்கும் கருவியாகும். இது இதய துடிப்பு குறையும்போது அதனை சீர்செய்யும் வகையில் செயல்படும்.
பேஸ்மேக்கர் கருவி பொருத்தப்பட்டுள்ள மல்லிகார்ஜூன கார்கே தற்போது நலமாக உள்ளதாக அவரது மகன் பிரியங்க் கார்கே தெரிவித்துள்ளார். பிரியங்க் கார்கே கர்நாடகாவில் அமைச்சராக உள்ளார். இதுபற்றி அவர் தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛மல்லிகார்ஜூன கார்கேவிற்கு இன்று காலையில் பேஸ்பேக் சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ளது. இது சிறிய, எளிமையான சிகிச்சை முறையாகும். இந்த சிகிச்சைக்கு பிறகு மல்லிகார்ஜூன கார்கே நலமாக உள்ளார். அவர் அக்டோபர் 3 (நாளை) முதல் திட்டமிட்டப்படி அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பார். அவரது உடல்நிலை பற்றி கவலை கொண்ட அனைவருக்கும் நன்றி'' என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications