மங்களூரு சம்பவம்: வீட்டிலேயே வெடி குண்டு தயாரித்த ஷரீக்.. போலீசார் வெளியிட்ட திடுக்கிடும் தகவல்கள்
பெங்களூர்: கர்நாடகாவின் மங்களூருவில் ஆட்டோவில் குக்கர் வெடிகுண்டு வெடித்த வழக்கில் முக்கிய குற்றவாளியான ஷரீக், ஏற்கனவே சோதனை செய்து பார்க்கும் வகையில் வீட்டில் தயாரித்த வெடிகுண்டை ஆற்றுப்படுகையில் வெடிக்க வைத்து ஒத்திகை பார்த்த திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
தமிழகத்தின் அண்டை மாநிலமான கர்நாடகாவின் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவில் நேற்று முன் தினம் மாலை ஆட்டோவில் வெடிபொருள் ஒன்று வெடித்து சிதறியது.
இது முதலில் ஏதாவது விபத்தாக இருக்கலாம் என்று பலரும் நினைத்திருந்த நிலையில், பயங்கரவாத நிகழ்வு என்று போலீசார் விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
கர்நாடகா குக்கர் குண்டு வெடிப்பு..தமிழக எல்லைகள் உஷார்..தீவிரமடையும் வாகன சோதனை
குக்கர் வெடிகுண்டு
ஆட்டோவில் வெடித்தது குக்கர் வெடிகுண்டு என்பதை போலீசார் கண்டறிந்தனர். வெடிகுண்டை வேறு இடத்தில் வைத்து வெடிக்க வைத்து பயங்கர நாசவேலையில் ஈடுபட திட்டமிட்டு இருந்ததாகவும் ஆனால், அது ஆட்டோவிலேயே வெடித்து சிதறியிருப்பதாகவும் கர்நாடக கூடுதல் டிஜிபி நேற்று அளித்த பேட்டியில் தெரிவித்தார். ஆட்டோ வெடித்து சிதறியதில் ஆட்டோ ஓட்டுநரும் ஆட்டோவில் பயணித்த பயணியும் பலத்த காயம் அடைந்தனர்.
தீவிர விசாரணை
இருவரும் மருத்துவமனையில் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதால் அவர்களிடம் போலீசார் உரிய விசாரணை நடத்த முடியவில்லை. ஆட்டோவில் பயணம் செய்த ஷரிக் என்பவர் தான் குக்கர் வெடிகுண்டை ஆட்டோவில் எடுத்து வந்தது தெரியவந்தது. தற்போது 60 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையில் ஷாரிக் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரிடம் தீவிர விசாரணை நடத்த முடியவில்லை.
திடுக்கிடும் தகவல்கள்
எனினும், போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இது தொடர்பாக கர்நாடக கூடுதல் டிஜிபி அலோக் குமார் கூறியதாவது:- சிவமோகா மாவட்டத்தை சேர்ந்த ஷரீக் என்பவர் தான் IED- ரக வெடி குண்டை பிரஷர் குக்கரில் எடுத்து வந்தததும் ஆட்டோவில் இருந்து இறங்க வேண்டிய நேரத்தில் வெடித்து சிதறியதும் தெரியவந்துள்ளது.
5 இடங்களில் போலீசார் சோதனை
போலி ஆதார் அட்டை வைத்திருந்த ஷரீக், தமிழகத்தின் கோயம்புத்தூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சமீபத்தில் பயணம் செய்துள்ளது தெரிய வந்ததாக கர்நாடக போலீசார் தெரிவித்தனர். இதனால், கோவை கார் வெடித்த சம்பவத்திற்கும் இதற்கும் தொடர்பு உள்ளதா? என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக 5 இடங்களில் கர்நாடக போலீசார் சோதனை நடத்தினர்.
ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தால்
மைசூருவில் உள்ள ஷரீக் வீட்டிலும் சோதனை நடைபெற்றது. இதில், வெடிகுண்டுகள் தயாரிக்க பயன்படும் பொருட்களும் அவரது வீட்டில் இருந்து மீட்கப்பட்டுள்ளன. ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தால் அவர் கவரப்பட்ட ஷரீக்..தன்னை இயக்கும் ( handlers) நபர்களை தொடர்பு கொள்ள டார்க் வெப்-ஐ பயன்படுத்தியிருக்கிறார். வீட்டிலேயே வெடிகுண்டை தயாரித்த ஷரீக், கடந்த செப்டம்பர் 19 ஆம் தேதி சோதனை அடிப்படையில் வெடிகுண்டை வெடிக்கச் செய்து இருக்கின்றனர்.
வீட்டை வாடகைக்கு எடுத்து
அவருக்கு உடந்தையாக மேலும் இருவரும் இருந்தனர். மறுநாளே போலீசார் உடந்தையாக செயல்பட இருவரை கைது செய்து விட்டனர். ஆனால், ஷரிக் தப்பி ஓடிவிட்டார். அதன் பிறகு, போலி ஆதார் அட்டையை பயன்படுத்தி மைசூருவில் உள்ள ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியிருக்கிறார். அங்கும் வெடி குண்டு தயாரித்து வந்து இருக்கிறார்.
5 குழுக்கள் அமைத்து
5 குழுக்கள் அமைத்து இந்த வழக்கில் விசாரணை முடுக்கி விட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 7 இடங்களில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. இந்த சோதனையில் சில எலக்ட்ரானிக் கருவிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அல் ஹிந்த் என்ற அமைப்புடனும் ஷரீக்கிற்கு தொடர்பு இருந்து இருந்துள்ளது. இந்த தகவல்களை கர்நாடக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
பயங்கரவாத செயல்
இதனிடையே, மங்களூரு குண்டு வெடிப்பு சம்பவம் பயங்கரவாத செயல் என்று தெரிய வந்து இருப்பதால் என்.ஐ.ஏ வசம் வழக்குக் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து என்.ஐ.ஏ அதிகாரிகள் குழு மங்களூரு வந்து விசாரணையை தொடங்கியிருக்கிறது. முதல் கட்ட விசாரணையை தொடங்கியிருக்கும் என்.ஐ.ஏ அதிகாரிகள் கூறியதாவது:- ஆட்டோவில் பயணம் செய்த நபர் போலி ஆதார் கார்டை பயன்படுத்தியிருக்கிறார். அவர் தமிழகத்தின் பல இடங்களுக்கு சென்றதும் தெரியவந்துள்ளது. அவர் யாருடன் எல்லாம் தொடர்பு இருந்து இருக்கிறார் என்று விசாரணையை தொடங்கியிருக்கிறோம்" என்றனர்.