“நான் தான் சூரியை கைபிடித்து அழைத்து போனேன்! இன்று ஒரு NOC கூட கிடைக்கல!” இயக்குநர் பகீர் குற்றச்சாட்டு
சென்னை: கோலிவுட்டில் அமைதியாக இருந்த சூழ்நிலையை தலைகீழாக மாற்றும் வகையில் நடிகர் சூரி குறித்து இயக்குநர் வெற்றிவீரன் கூறிய தகவல்கள் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. எப்போதும் மேடைகளில் பழைய கஷ்டங்கள், நண்பர்கள், போராட்ட நாட்கள் பற்றி உணர்ச்சிவசப்பட்டு பேசும் சூரி குறித்து, "அது வெறும் இமேஜ் பில்டப்பா?" என்ற கேள்வியை எழுப்பும் வகையில் வெற்றிவீரன் பேசியிருப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இயக்குநர் வெற்றி வீரன் குற்றச்சாட்டு
சமீபத்தில் நடந்த பேட்டியில் மனதில் தேங்கியிருந்த ஆதங்கத்தை வெளிப்படுத்திய வெற்றிவீரன், "நான் தான் சூரியை ஆரம்பத்தில் சினிமா பக்கம் அழைத்து வந்தவன். ஒரு சீரியலில் வாய்ப்பு கிடைத்தபோது அவரையும் கூட்டிக்கொண்டு போனேன். பிறகு சங்கமம் படத்தில் வேலை செய்யும்போதும் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அப்போது ஒரு முக்கியமான காட்சிக்காக வைத்திருந்த கண்ணாடியை அவர் தவறுதலாக உடைத்துவிட்டார். அந்த இரவு முழுக்க இயக்குநரிடம் நான்தான் திட்டு வாங்கினேன். இரவோடு இரவாக அதே மாதிரி கண்ணாடி ரெடி பண்ணி ஷூட்டிங்கை காப்பாத்தினேன்," என்று கூறியுள்ளார்.
பழைய நட்பு
அதுமட்டுமல்லாமல், "நான் இயக்குநராக வாய்ப்பு பெற்றபோதும் அவரை மறக்கவில்லை. என்னுடைய படத்தில் அவரையும், நம்மோடு கஷ்டப்பட்ட சில பேரையும் நடிக்க வைத்தேன். பலர் பிரபலமான முகங்களை வை என்று சொன்னார்கள். ஆனாலும், என்னோடு இருந்தவர்களுக்கு வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காகவே அந்த முடிவு எடுத்தேன்," என்று பழைய நட்பை நினைவுகூர்ந்தார்.
நடிகர் சூரியின் ஆரம்ப காலம்
ஆனால் இப்போது அந்த நட்பே தன்னை காயப்படுத்தியிருக்கிறது என்கிறார் வெற்றிவீரன். "நாங்கள் 20 பேர் சேர்ந்து ஒரு ரூம்ல தங்கி சினிமா வாய்ப்புக்காக கஷ்டப்பட்டவர்கள். அந்த 20 பேரில் ஒருத்தருக்காவது சூரி உதவி செய்தாரா? யாருக்கும் இல்லை. மேடையில் மட்டும் பழைய நண்பர்கள் பற்றி பேசுவார். அதை பார்த்து மக்கள், 'நல்ல மனிதர்' என்று நினைப்பார்கள். ஆனால் நிஜத்தில் அந்த உதவி யாருக்கும் போகவில்லை," என்று நேரடியாக குற்றம்சாட்டினார்.
சூரியோடு பிரச்சனை இதுதானா?
மேலும், "நானும் சூரியும் சேர்ந்து ஒரு படம் செய்ய இருந்தோம். அந்த படம் ஓடிடி வரை பேசப்பட்டு, கிட்டத்தட்ட ஓகே ஆனது. பின்னர் சில காரணங்களால் நின்றது. பிறகு ஒரு பெரிய நிறுவனம் அதே கதையை புதிதாக எடுக்க முன்வந்தது. தயாரிப்பாளர் உட்பட எல்லோரிடமிருந்தும் NOC வாங்கிட்டேன். சூரியிடமிருந்து மட்டும் கிடைக்கவில்லை. அந்த ஒரு கையெழுத்து இல்லாததால் முழு project நின்றுபோய்விட்டது," என்று வேதனையுடன் தெரிவித்தார்.
ஆனால் இதற்கிடையில் அவர் ஒரு முக்கிய விளக்கமும் கொடுத்தார். "எனக்கு சூரி மீது பொறாமை இல்லை. அவர் இன்று பெரிய இடத்தில் இருக்கிறார், அது சந்தோஷம். ஆனால் நம்மோடு கஷ்டப்பட்டவர்களுக்கு அவர்கள் கேட்காமலே உதவ வேண்டும் என்ற மனசு இருக்கணும். நான் சொல்வது என் வருத்தம் மட்டுமே," என்றார்.
எப்போதும் எளிமை, நகைச்சுவை, நல்ல மனசு என்ற இமேஜில் இருக்கும் சூரி மீது இப்படியான குற்றச்சாட்டு எழுந்திருப்பது ரசிகர்களையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இப்போது அனைவரும் எதிர்பார்ப்பது ஒன்றே ஒன்று தான் - சூரி இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்?














Click it and Unblock the Notifications