மீண்டும் 3வது இடத்திற்கு தள்ளப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து! விஜய் அமைச்சரவை விரிவாக்க விழாவில் சர்ச்சை
சென்னை: முதல்வர் விஜய் தலைமையில் அமைச்சரவை விரிவாக்கம் இன்று ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. கடந்த காலங்களில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்தும், அதன் பிறகு தேசிய கீதமும் பாடப்பட்ட நிலையில், இப்போது வந்தே மாதரம் பாடல் முதலில் பாடப்பட்டது. அதைத் தொடர்ந்து தேசிய கீதம், பிறகு தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடப்பட்டுள்ளது. இது பேசுபொருளாக மாறியிருக்கிறது.
தமிழ்நாட்டில் அரசு விழாக்களில் எப்போதும் தொடங்கும்போது 'தமிழ்த்தாய் வாழ்த்து' முதலாவதாகவும், நிகழ்வின் இறுதியில் 'தேசிய கீதம்' பாடுவதும் தான் பல ஆண்டு கால மரபாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால், சமீப காலமாக இந்த நடைமுறையில் மாற்றம் வந்துள்ளது சர்ச்சையாக மாறியிருக்கிறது. புரோட்டோகால் முற்றிலும் மாறியுள்ளது!

இன்று காலை நடந்த அமைச்சர்கள் பதவியேற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து 3வது இடத்திற்குத் தள்ளப்பட்டது. முதலில் வந்தே மாதரம் பாடப்பட்ட நிலையில், அதைத் தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அதன் பிறகு மாநில பாடலான தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடப்பட்டது. இதுதான் இப்போது சர்ச்சையாக மாறியிருக்கிறது.
ஏற்கனவே முதல்வர் விஜய்யின் பதவியேற்பு விழாவின் போதே இதேபோல தமிழ்த்தாய் வாழ்த்து 3வது இடத்திற்குத் தள்ளப்பட்டு இருந்தது. இந்த விவகாரம் அப்போதே பெரிய சர்ச்சையைக் கிளப்பியிருந்தது. இடதுசாரிகள், விசிக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் இதற்குத் தங்களின் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்திருந்தன.
தவெக அரசின் புதிய அமைச்சரான ஆதவ் அர்ஜுனாவும் இது தொடர்பாகப் பேசியிருந்தார். எதிர்காலத்தில் தமிழக அரசின் நிகழ்வுகளில் எப்போதும் போலத் தமிழ்த்தாய் வாழ்த்து முதலாவதாகப் பாடப்படுவது உறுதி செய்யப்படும் எனக் கூறியிருந்தார். ஆனால், இன்றைய தினம் மீண்டும் வந்தே மாதரம் தான் முதலில் பாடப்பட்டது. தமிழ்த்தாய் வாழ்த்து 3வதாகவே இசைக்கப்பட்டது.
அதேபோல அமைச்சரவை விரிவாக்க நிகழ்ச்சி முடிக்கப்பட்ட பிறகும் வந்தே மாதரம் மற்றும் தேசிய கீதம் மீண்டும் இசைக்கப்பட்டது. வந்தே மாதரம் முழுமையாக பாடப்பட்ட நிலையில், அதைத் தொடர்ந்து தேசிய கீதம் பாடப்பட்டது.
இருப்பினும், மத்திய அரசின் புதிய நெறிமுறைகளின்படி, குடியரசுத் தலைவர், துணைத் தலைவர் அல்லது ஆளுநர்கள் பங்கேற்கும் முதன்மையான நிகழ்வுகளில் 'வந்தே மாதரம்' மற்றும் 'தேசிய கீதம்' ஆகியவற்றுக்கு முதலிடம் தரப்பட வேண்டும் என்ற விளக்கத்தின் அடிப்படையிலேயே இந்த முறை பின்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது!












Click it and Unblock the Notifications