மேகதாது அணை திட்டத்துக்கு கர்நாடகா வன உயிரினங்கள் வாரியம் அனுமதி.. தீவிரமாகும் ஆய்வு பணி
பெங்களூர்: தமிழகத்தின் எதிர்ப்புக்கு நடுவே கர்நாடகாவில் காவிரிக்கு குறுக்கே மேகதாதுவில் புதிதாக அணை கட்டுவதில் அம்மாநில அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் தான் மேகதாது அணை திட்டத்துக்கான ஆய்வு பணிகளை மேற்கொள்ள காவிரி நீராவரி நிகம் லிமிடெட் நிறுவனத்துக்கு, கர்நாடக வன உயிரினங்கள் வாரியம் அனுமதி வழங்கி உள்ளது. இது தமிழகத்துக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
காவிரி நீராவரி நிகம் லிமிடெட் என்பது கர்நாடகா அரசின் நிறுவனமாகும். இதன் தலைவராக கர்நாடகா முதல்வரும், துணை தலைவராக கர்நாடகா பெரிய மற்றும் நடுத்தர நீர்ப்பாசனத்துறை அமைச்சர் இருப்பார். இவர்களுடன் நிர்வாக இயக்குநர் உள்பட 10 பேர் இயக்குநர்களாக இருப்பார்கள்.

இந்த காவிரி நீராவரி நிகம் லிமிடெட் தான் காவிரி படுகை பகுதியில் புதிய நீர்ப்பாசனம் சார்ந்த திட்டங்கள் உள்பட பிற பணிகளை மேற்கொள்ளும். இந்நிலையில் தான் காவிரிக்கு குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் இடம் என்பது காவிரி வனவிலங்கு சரணாலய பகுதிக்குள் வருகிறது.
இதன் காரணமாக மேகதாது அணை திட்டத்துக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் வகையில் அங்கு தொழில்நுட்ப ரீதியிலான ஆய்வு மற்றும் மரங்கள் கணக்கெடுப்பு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள கர்நாடகா வன உயிரினங்கள் வாரியத்தின் அனுமதி தேவை. இதற்கான அனுமதி கோரப்பட்டு இருந்த நிலையில் தற்போது அது கிடைத்துள்ளது. மேகதாதுவில் அணை கட்டும் இடத்தில் தொழில்நுட்ப ரீதியிலான ஆய்வு மற்றும் மரங்கள் கணக்கெடுப்பு நடத்த காவிரி நீராவரி நிகம் லிமிடெட்டுக்கு, கர்நாடகா வன உயிரினங்கள் வாரியம் அனுமதி வழங்கி உள்ளது.












Click it and Unblock the Notifications