புல்வாமா தாக்குதல்.. "கராச்சி" பேக்கரியின் பெயர் பலகையை மூட வைத்த மர்ம நபர்கள்.. பெங்களூர் பரபரப்பு
பெங்களூர்: புல்வாமா தாக்குதல் எதிரொலியாக கராச்சி பேக்கரியின் பெயர் பலகையை அதன் ஊழியர்களை கொண்டே மர்ம நபர்கள் மூட வைத்துள்ளனர்.
ஜம்மு- காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த வாரம் வியாழக்கிழமை அன்று தற்கொலை படையினர் நடத்திய தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் வீரமரணமடைந்தனர்.
இந்த சம்பவத்தால் பாகிஸ்தான் மீது இந்தியாவுக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தியது. பாகிஸ்தானுக்கு செல்லும் உபரி நீரை இந்திய அரசு தடுத்து நிறுத்த முயற்சித்து வருகிறது. பாகிஸ்தான் வீரர்களின் படங்கள் கிரிக்கெட் வாரியத்திலிருந்து நீக்கப்பட்டது.

இந்திரா நகர்
புல்வாமா தாக்குதலால் பாகிஸ்தான் தொடர்பான அனைத்து விஷயங்களும் கடும் கோபத்தை உண்டாக்கி வருகிறது. இந்நிலையில் பெங்களூரில் இந்திரா நகரில் கராச்சி பேக்கரி உள்ளது.

கோஷம்
இது ஹைதராபாத் நிறுவனத்திற்கு சொந்தமானது. இந்த பேக்கரிக்கு வெள்ளிக்கிழமை இரவு 8 மணிக்கு 20 முதல் 25 எண்ணிக்கையிலான நபர்கள் பேக்கரிக்கு முன்பு வந்தனர். அங்கு பேக்கரிக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

ஊழியர்கள்
பின்னர் கராச்சி பேக்கரியில் கராச்சி என்ற வார்த்தையை நீக்குமாறு கோஷமிட்டனர். மேலும் அங்கிருந்த பெயர் பலகையில் இருந்த கராச்சி என்ற வார்த்தையை மூடுமாறு ஊழியர்களை மிரட்டினர். இதையடுத்து அவர்களும் அவ்வாறே செய்தனர்.

ராணுவம்
இதுகுறித்து கராச்சி பேக்கரியின் மேலாளர் கூறுகையில் அரை மணி நேரமாக அவர்கள் கடை முன்பு நின்று கொண்டிருந்தனர். பெயரை மாற்றுமாறு கோரிக்கை விடுத்தனர். ராணுவத்தில் உள்ளவர்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் என கூறினர்.

வழக்கம்
நாங்கள் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் என அவர்கள் தவறாக நினைத்து விட்டனர். ஆனால் இந்த பெயரை நாங்கள் 53 ஆண்டுகளாக பயன்படுத்தி வருகிறோம். எங்களது உரிமையாளர்கள் இந்து. பெயர் மட்டும் கராச்சி பேக்கரி. அவர்களை திருப்திப்படுத்த தேசியக் கொடியை ஏற்றினோம் என்றார். இத்தனை களேபரங்களுக்கு மத்தியிலும் பேக்கரி வழக்கம் போல் இரவு 11 மணிக்குதான் மூடப்பட்டது.












Click it and Unblock the Notifications