கர்நாடகாவை உலுக்கும் கவுன்சிலர் மகள் படுகொலை! 'லவ் ஜிகாத்' என பாஜக பந்த்.. இஸ்லாமியர்களும் பங்கேற்பு
பெங்களூர்: கர்நாடகாவில் காங்கிரஸ் கவுன்சிலரின் மகள் இஸ்லாமிய இளைஞரால் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், பாஜக இன்று முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்திருக்கிறது. இதில் இஸ்லாமிய அமைப்புகளும் பங்கெடுத்திருக்கின்றன.
கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் உள்ள பிவிபி கல்லூரியில் இந்த படுகொலை சம்பவம் நடந்திருக்கிறது. இந்த கல்லூரியில் காங்கிரஸ் கவுன்சிலர் நிரஞ்சன் ஹிரேமத் என்பவரின் மகள் நேஹா ஹிரேமத் எம்சிஏ முதலாம் ஆண்டு படித்து வந்திருக்கிறார். இதே கல்லூரியில் இஸ்லாமிய மாணவராக ஃபயாஸ் கோண்டுநாயக்கும் படித்து வந்திருக்கிறார். ஃபயாஸூக்கு நேஹா மீது ஒருதலைபட்சமாக காதல் மலர்ந்திருக்கிறது. ஆனால், தொடக்கத்தில் நேஹா இதை கண்டுக்கொள்ளவில்லை.

இருப்பினும் ஃபயாஸ் இதனை விடுவதாக தெரியவில்லை. நேஹாவை துரத்தி துரத்தி தொந்தரவு செய்திருக்கிறார். ஒரு கட்டத்தில் நேஹா, ஃபயாஸை கடுமையாக எச்சரித்திருக்கிறார். இந்த புள்ளியில்தான் பிரச்னை வெடித்திருக்கிறது. நேஹாவை பழிவாங்க நேரம் பார்த்து ஃபயாஸ் காத்திருந்திருக்கிறார்.
சரியான நேரம் பார்த்து கல்லூரி வளாகத்தில் வைத்தே நேஹாவை கத்தியால் குத்தியிருக்கிறார். இதில் நேஹா ரத்த வெள்ளத்தில் சரிய, சக மாணவர்கள் நேஹாவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால், நேஹா சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து நேஹாவின் தந்தை கூறுகையில், "என் மகள் துணிச்சலானவள். அவனது காதலை ஏற்கவில்லை. இதன் காரணமாக ஒரு கும்பல் நீண்ட காலமாக எனது மகளுக்கு தொல்லை கொடுத்து வந்தது. எனக்கு தகவல் தெரிந்ததும் அவர்களை எச்சரித்தேன். இப்போது திட்டமிட்டு கொலை செய்துள்ளனர். கொலைகாரனின் பின்னணியில் ஒரு கும்பல் இருக்கிறது. இது அப்பட்டமான லவ் ஜிகாத்" என்று கூறியுள்ளார்.
பாஜகவின் மாணவர் அமைப்பான ஏபிவிபி இந்த பிரச்னையை 'லவ் ஜிகாத்' என கையில் எடுத்திருக்கிறது. சம்பந்தப்பட்ட கல்லூரி மட்டுமல்லாது கர்நாடகா முழுவதும் இந்த பிரச்சினையை முன்வைத்து போராட்டம் நடத்த முயன்று வருகிறது.
இது குறித்து அம்மாநில முதல்வர் சித்தராமையா கூறுகையில், "கொலை குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். இதனை மத ரீதியான அரசியலுக்கு பாஜக பயன்படுத்துகிறது" என்றார். கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஷ்வர் கூறும்போது, "இது லவ் ஜிகாத் கிடையாது. தேர்தல் நேரத்தில் பாஜகவினர் இதனை பயன்படுத்தி இந்துக்களை ஒன்றிணைக்க முயற்சிக்கின்றனர்" என குற்றம் சாட்டியுள்ளார்.
இந்நிலையில் பாஜக இந்த விவகாரம் குறித்து பந்த்-க்கு அழைப்பு விடுத்துள்ளது. அம்மாநில பாஜக தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா கூறுகையில் , "பாஜக தொண்டர்கள் தேர்தல் வேலைகளை ஒதுக்கி வைத்துவிட்டு பந்த்-ல் கலந்துக் கொள்ளுங்கள். பெண்களை கொடுமைப்படுத்துதல், தேச பக்தர்கள் மீதான தாக்குதல் போன்றவற்றை நாம் புறக்கணிக்க முடியாது.
ஹூப்ளியைச் சேர்ந்த நேஹா ஹிரேமத் கொல்லப்பட்டது மிகவும் கொடூரமான சம்பவம். இதை போலீசார் அனைத்து கோணங்களிலும் விசாரிக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது. இதற்காகதான் நாங்கள் போராடுகிறோம். இந்த சம்பவத்தில் அரசாங்கம் அலட்சியமாக நடந்துகொள்கிறது. சிறுபான்மையினரின் ஆதரவே இந்த அரசாங்கத்தின் முன்னுரிமை" என்று விமர்சித்துள்ளார்.
இன்று பாஜக சார்பில் ஹூப்ளியில் பந்த் நடைபெறுகிறது. இந்த பந்தில், பாஜகவுடன் இஸ்லாமிய அமைப்புகளும் கைகோர்த்திருக்கின்றன. இந்த பந்த் குறித்து பேசிய அஞ்சுமன்-இ-இஸ்லாம் தலைவர் எஸ்மாயில் தமாத்கர் "நாங்கள் இந்த கொடூர சம்பவத்தை கண்டித்தும், உயிரிழந்த மாணவியின் ஆன்மா சாந்தியடையவும் பந்த்-ஐ நடத்துகிறோம்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications