நடுங்கிய பெங்களூர்.. வானிலிருந்து எழுந்த பெரும் மர்ம சத்தம்.. பரபரப்பு
பெங்களூர்: பெங்களூரில் இன்று மதியம் எழுந்த மர்ம ஒலி காரணமாக, மக்களிடையே பெரும் பீதி ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் ஜன்னல்கள் ஆடியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
2020 ஆம் ஆண்டு மே மாதம் 20ஆம் தேதி அதாவது கடந்த வருடம் மதியம் 1 மணி 20 நிமிடம் சுமாருக்கு திடீரென வானிலிருந்து ஒரு மர்ம சத்தம் வெடித்து கிளம்பியது.
இதனால் பொதுமக்கள் நடுங்கிப் போயினர். அந்த சத்தம் என்ற காரணத்தால் வந்தது என்பதை அறிந்து கொள்ள முடியாததாலும், அதுவரை பெங்களூர் மக்கள் அதுபோன்ற ஒரு சத்தத்தைக் கேட்டது இல்லை என்பதாலும் மக்கள் சமூக வலைத்தளங்களில் தாங்கள் கேட்ட சத்தம் மற்றும் அனுபவத்தை பீதியோடு பதிவு செய்ய தொடங்கினர்.

விசாரணை தீவிரம்
இது தொடர்பாக காவல்துறை விசாரணை நடத்தியது. புவியியல் துறையினரும் விசாரணை நடத்தினர். இறுதியில் இந்த சத்தம் சுகோய் போர் விமானம் கிளம்பிச் சென்றதால் ஏற்பட்டது என்பது தெளிவுபடுத்தப்பட்டது. இதன்பிறகு பீதி ஓய்ந்தது.

இன்று கேட்ட திடீர் சத்தம்
இந்த நிலையில் இன்று, அதாவது, ஜூலை மாதம் 2ம் தேதி, மதியம் 12.20 மணியளவில் திடீரென வானிலிருந்து பெரும் சத்தம் கேட்டுள்ளது. வெடிகுண்டு வெடித்ததை போல அந்த சத்தம் இருந்ததாக பெங்களூர் மக்கள் தெரிவிக்கிறார்கள்.

தெற்கு பெங்களூர் பகுதிகள்
ஜேபி நகர், எச்எஸ்ஆர் லேஅவுட், பொம்மனஹள்ளி, எலக்ட்ரானிக் சிட்டி உள்ளிட்ட தெற்கு பெங்களூர் பகுதிகளில் இதை அதிகம் உணர முடிந்துள்ளது. அல்சூர் உட்பட மத்திய பெங்களூர் பகுதிகளிலும் இந்த சத்தம் கேட்டுள்ளது.

ஜன்னல்கள் ஆடின
இந்த சப்தம் எதனால் ஏற்பட்டது என்பது குறித்து இன்னமும் தெரியவில்லை. இருப்பினும் மக்கள் பீதியுடன் தங்களது அனுபவங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்கள். வீடுகளில் ஜன்னல்கள் ஆடும் அளவுக்கும், டம்ளர்கள் நகரும் அளவுக்கும் சத்தத்தால் அதிர்வு ஏற்பட்டுள்ளது. இதனால் நடுங்கிப் போயுள்ளனர் மக்கள்.

சோனிக் பூம்
சோனிக் பூம் என்பது ஒரு பொருள் ஒலியை விட வேகமாக கடந்து செல்லும்போது ஏற்படும் சத்தமாகும். பெங்களூரில் கேட்ட சத்தமும் இதையொட்டியது என்கிறார்கள். ஆனால், ஏன் இந்த சத்தம் வந்தது என்பது புரியாமல் விசாரணையை ஆரம்பித்துளது காவல்துறை.












Click it and Unblock the Notifications