நடிகை சவுந்தர்யா மரணத்தில் மர்மமா? நடிகர் மோகன் பாபுவுக்கு தொடர்பா? கணவர் ரகு பரபர விளக்கம்!
பெங்களூர்: நடிகை சவுந்தர்யா மரணத்தில் நடிகர் மோகன் பாபுவுக்கு தொடர்பிருப்பதாக வெளியான தகவல்கள் குறித்து அவரது கணவர் ரகு விளக்கம் அளித்துள்ளார். நடிகர் மோகன் பாபுவும் தங்களது குடும்பத்தினரும் நெருங்கிய நட்புறவுடன் பழகி வருவதாகவும் சவுந்தர்யாவின் மரணத்தில் மோகன் பாபுவுக்கு எந்த தொடர்பும் இல்லை எனவும் கணவர் ரகு தெரிவித்துள்ளார்.
தமிழில் கார்த்திக் நடித்த பொன்னுமணி திரைப்படம் மூலம் திரை உலகத்துக்கு அறிமுகமானவர் நடிகை. ரஜினிகாந்த், விஜயகாந்த் உள்ளிட்ட நடிகர்களுடன் நடித்து தென்னிந்திய நட்சத்திரமாக வலம் வந்த நிலையில் பாஜகவில் இணைந்தார்.

2004-ம் ஆண்டு பாஜகவுக்காக பிரசாரம் செய்ய ஹெலிகாப்டரில் சென்ற போது விபத்தில் சிக்கி நடிகை சவுந்தர்யா உயிரிழந்தார். இந்த சம்பவம் தென்னிந்திய திரையுலகையும் அரசியல் வட்டாரங்களையும் பெரும் அதிர்ச்சியடைய வைத்தது.
நடிகை சவுந்தர்யா மரணம் அடைந்து 20 ஆண்டுகள் கழித்து ஆந்திராவைச் சேர்ந்த சிட்டி மல்லு திடீரென சர்ச்சையை கிளப்பி இருக்கிறார். இது தொடர்பாக சிட்டி மல்லு கூறுகையில், நடிகை சவுந்தர்யாவுக்கு ஜல்பள்ளி கிராமத்தில் ரூ100 கோடி மதிப்பிலான நிலம் உள்ளது; இந்த நிலத்தை நடிகர் மோகன் பாபு, சவுந்தர்யாவிடம் இருந்து வாங்க முயற்சித்தார். ஆனால் சவுந்தர்யா, மோகன்பாபுவுக்கு நிலத்தை தர மறுத்துவிட்டார். இதனால் சவுந்தர்யாவின் மரணத்துக்கும் மோகன் பாபுவுக்கும் தொடர்பிருக்கிறது; இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என கூறியிருந்தார்.
நடிகை சவுந்தர்யா மரணம் தொடர்பாக சிட்டி மல்லு எழுப்பிய சர்ச்சை தென்னிந்தியாவை மீண்டும் பரபரப்பாக்கியது. இது தொடர்பாக பெங்களூரில் வசித்து வரும் நடிகை சவுந்தர்யாவின் கணவரான ரகு கூறுகையில், சவுந்தர்யா மரணத்துக்கும் மோகன் பாபுவுக்கும் எந்த தொடர்புமே இல்லை; மோகன் பாபு, எங்கள் குடும்பம் நல்ல நட்புறவுடன் இருந்து வருகிறது. ஆகையால் ஆதாரமற்ற செய்திகளை நம்ப வேண்டாம்; இத்தகைய செய்திகளுக்கு நாங்கள் மறுப்பு தெரிவிக்கிறோம் என்றார்.












Click it and Unblock the Notifications