இனி டிராபிக் ரூல்ஸ் மீறினால்.. ஆபீசில் குட்டு விழும்! அதிரடியில் இறங்கிய பெங்களூர் போலீஸ்.. அம்மாடி
பெங்களூர்: கர்நாடக தலைநகர் பெங்களூரில் ஐடி ஊழியர்கள் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுவது அதிகரித்துள்ள நிலையில், இதைக் கட்டுப்படுத்த அம்மாநில போலீசார் அதிரடி நடவடிக்கை ஒன்றைக் கையில் எடுத்துள்ளனர்.
இந்தியாவில் முக்கிய நகரங்களில் டிராபிக் என்பது மிகப் பெரிய பிரச்சினையாக மாறி இருக்கிறது. பொருளாதார வளர்ச்சி, வாகனங்கள் அதிகரிப்பது, முறையான பொது போக்குவரத்து கட்டமைப்பு இல்லாமல் இருப்பது என இதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது.

முன்பு ஓரிரு நகரங்களில் மட்டுமே இருந்த டிராபிக் பஞ்சாயத்து, இப்போது நாட்டின் அனைத்து நகரங்களிலும் பிரச்சினையாக மாறி இருக்கிறது. இதனால் நமக்குப் பல மணி நேரம் வரை நேரமும் வேஸ்ட் ஆகிறது.
பெங்களூர் டிராபிக்: இந்தியாவில் இப்போது டிராபிக் அதிகம் இருக்கும் நகரங்கள் என எடுத்தால் அதில் பெங்களூரைத் தவிர்க்கவே முடியாது. பீக் ஹவர்களில் அருகே இருக்கும் இடத்திற்குச் செல்லக் கூட நீண்ட நேரம் டிராபிக்கில் இருக்க வேண்டி உள்ளது. இதன் காரணமாகப் பெங்களூரில் பலரும் விதிகளை மதிக்காமல் செல்ல ஆரம்பித்துள்ளனர். இதனால் மோசமான விபத்துகள் கூட ஏற்படும் ஆபத்தான சூழல் ஏற்பட்டுள்ளது. இப்போது இதைத் தடுக்க பெங்களூர் போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இனிமேல் பெங்களூரில் நீங்கள் போக்குவரத்து சிக்னல்களை மதிக்காமல் செல்லும் போதும், சாலைகளில் வேக வரம்பை மீறும் போதும் ஒரு முறைக்கு இருமுறை யோசிக்க வேண்டும். ஏனென்றால் ஐடி ஊழியர்கள் போக்குவரத்து விதிகளை மீறும்போது, நேரடியாகச் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு இது குறித்துத் தெரிவிக்கப் பெங்களூர் போலீசார் முடிவு செய்துள்ளனர்.
போக்குவரத்து விதிகள்: இது குறித்து பெங்களூர் போலீசார் கூறுகையில், "சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விதிகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த முயற்சியை எடுத்துள்ளோம். முதற்கட்டமாகப் பெங்களூரில் தகவல் தொழில்நுட்ப வழித்தடத்தில் வெளிவட்டச் சாலை மற்றும் ஒயிட்ஃபீல்டு பகுதிகளில் இந்த முயற்சியை முன்னெடுத்துள்ளனர்" என்றார்.
இப்போது இந்த குறிப்பிட்ட பகுதியில் மட்டும் இந்த முறையை அமல்படுத்தத் திட்டமிடுகிறோம். இத்திட்டம் மூலம் விபத்துகள் குறைந்தால் பெங்களூரின் பிற முக்கிய பகுதிகளுக்கும் இதை விரிவுபடுத்த அவர்கள் திட்டமிட்டுள்ளனர். போலீசார் மேலும் கூறுகையில், "இந்த குறிப்பிட்ட பகுதிகளில் தான் போக்குவரத்து விதிமீறல் அதிகம் நடக்கிறது. இங்குள்ள ஐடி ஊழியர்கள் தான் அதிகம் போக்குவரத்து விதிகளை மீறுவதைத் தெரிய வந்ததையடுத்து இந்த நடவடிக்கையை எடுத்துள்ளோம்.
ஐடி ஊழியர்கள் தான் அதிகம்: பெங்களூருவின் கிழக்குப் பிரிவில் சோதனை அடிப்படையில் இதை ஆரம்பித்துள்ளோம். எனவே, ஐடி நிறுவன ஊழியர்கள் யாராவது போக்குவரத்து விதிகளை மீறினால், குறிப்பிட்ட விதிமீறல் குறித்துச் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு மின்னஞ்சல் அல்லது வாட்ஸ்அப் மூலம் தகவல் தெரிவிக்கப்படும். போக்குவரத்து விதிகள் மற்றும் சாலைப் பாதுகாப்பு குறித்து அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த நடவடிக்கை எடுக்கிறோம்" என்றார்.
இதன்படி போக்குவரத்து விதிகளை மீறுவோரிடம் இருந்து ஐடி கார்டுகளை வாங்கி, அதை உறுதி செய்துவிட்டு, இந்த விதிமீறல் குறித்துச் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்குத் தகவல் தெரிவிக்கப்படும். மேலும், ஐடி நிறுவனங்களும் போக்குவரத்து விதிமீறல்கள் குறித்து தங்கள் ஊழியர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்று பெங்களூர் போலீசார் வலியுறுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications