ஹிஜாப் வழக்கு மேல்முறையீடு! ஹோலிக்கு பின் விசாரிப்போம்.. அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
பெங்களூர்: ஹிஜாப்புக்கு தடை விதித்தது செல்லும் எனக்கூறி மாணவிகளின் மனுக்களை நேற்று கர்நாடக உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து மாணவிகள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இதை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்த நிலையில் ஹோலி விடுமுறைக்கு பின் பட்டியலிட்டு விசாரிப்பதாக தெரிவித்துள்ளது.
Recommended Video
கர்நாடக கல்லூரிகளில் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டது. இதற்கு குடும் எதிர்ப்பு கிளம்பியது. ஹிஜாப்புக்கு ஆதரவாகவும், எதிராகவும் போராட்டங்கள் வெடித்தன. ஹிஜாப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து காவிஷால் அணிந்து போராட்டங்கள் நடந்தன.
கர்நாடகத்தில் சில இடங்களில் வன்முறைகள் வெடித்தன. இதனால் இந்த விவகாரம் சர்ச்சையானது. இந்தியா முழுவதும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கருத்துகள் தெரிவித்தனர்.

மாணவிகள் மனுத்தாக்கல்
இதற்கிடையே ஹிஜாப் தடையை நீக்க வேண்டும் எனக்கூறி உடுப்பி மாவட்ட கல்லூரி மாணவிகள் பெங்களூரில் உள்ள கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி, நீதிபதிகள் கிருஷ்ண தீட்சித், ஜே.எம்.காஜி அமர்வு வழக்கை பிப்ரவரி 10 முதல் விசாரிக்க துவங்கியது.

கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு
இந்த அமர்வு 11 நாள் விசாரித்தது. பிப்ரவரி 25ல் மனுக்கள் மீதான விசாரணை நிறைவடைந்தது. தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து நேற்று காலை 10.30 மணிக்கு தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி, நீதிபதிகள் கிருஷ்ண தீட்சித், ஜே.எம்.காஜி தீர்ப்பு வழங்கினர். ஹிஜாப் என்பது இஸ்லாமிய சட்டத்தில் அத்தியாவசிய விஷயமல்ல எனக்கூறிய உயர்நீதிமன்றம், கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடை செல்லும் எனக்கூறி கர்நாடக அரசின் உத்தரவை உறுதி செய்து தீர்ப்பு வழங்கியது.

மேல்முறையீடு
மேலும் ஹிஜாப் தடையை எதிர்க்கும், ஹிஜாப் அணிய அனுமதி கோரும் மனுக்களை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து 6 மாணவிகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்களை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என மூத்த வழக்கறிஞர் சஞ்சய் ஹெக்டே இன்று கூறினார். இதற்கு உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது.

ஹோலி விடுப்புக்கு பின்
இதுதொடர்பாக வழக்கறிஞர் சஞ்சய் ஹெக்டே கூறுகையில், ‛‛ விரைவில் தேர்வு வர உள்ளது. கர்நாடக உயர்நீதிமன்ற உத்தரவால் மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அவசர வழக்காக விசாரிக்க வேண்டும்'' என்றார். இதற்கு தலைமை நீதிபதி, ‛‛எங்களுக்கு நேரம் கொடுங்கள். ஹோலி விடுப்புக்கு பிறகு பார்ப்போம் '' என்றார். இதன்மூலம் ஹோலி விடுப்புக்கு பிறகு இந்த மனுக்கள் பட்டியலிட்டு விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications