சந்திரயான் 3 சக்சஸுக்கு பின்னால் இவ்வளவு மேட்டரா! அடுத்த நகர்வுக்கு ரெடியாகும் இஸ்ரோ! இதுதான் விஷயம்
பெங்களூர்: நிலவின் தென் துருவ பகுதியை ஆராய இஸ்ரோ அனுப்பியுள்ள சந்திரயான் 3 விக்ரம் லேண்டர் இன்று மாலை தரையிறங்க இருக்கிறது. இந்த மிஷன் வெற்றி அடைந்தால், இந்திய விண்வெளித்துறையில் அந்நிய நேரடி முதலீட்டை அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இந்தியா இதற்கு முன்னர் எவ்வளவோ செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்பியுள்ளது. ஆனால் அதைவிட இந்த சந்திரயான் 3 மிஷனை சாமானிய மக்கள் தொடங்கி அனைத்து தரப்பினரும் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். இதற்கு காரணம் நிலவின் தென் துருவ பகுதியில் இதுவரை எந்த நாடும் ரோவரை இறக்கவில்லை என்பதுதான். இப்படி இருக்கையில் இந்தியா ரோவரை வெற்றிகரமாக தரையிறக்கினால் அது உலக சாதனையாக மாறும்.

உலகின் நாடுகள் மத்தியில் நிலவின் தென்துருவ பகுதியை ஆக்கிரமிக்க தற்போது கடுமையான போட்டி நடக்கிறது. அதில் இந்தியாதான் முன்னணியில் இருக்கிறது. இந்த போட்டிக்கு பின்னால் மிகப்பெரிய காரணம் இருக்கிறது. நமது பூமி மீது இன்னும் சில நூறு ஆண்டுகளில் விண்கற்கள் விழ தொடங்கும். இப்போதும் இதற்கு முன்னரும் கூட இந்த விண்கற்கள் விழுந்திருக்கிறது. ஆனால் அவையெல்லாம் எப்போதாவது ஒரு முறை என்றும், மிகவும் சிறிய அளவிலும் விழுந்ததால் பெரிய பாதிப்பு ஏற்படவில்லை.
இனி வரும் காலங்களில் அடிக்கடி இதுபோன்று விண்கற்கள் விழ வாய்ப்பிருக்கிறது. அதேபோல அளவிலும் பெரியதாக விழும். எனவே ஒட்டுமொத்த மனித குலமே ஆபத்தில் இருக்கிறது. இவையெல்லாம் சில நூறு ஆண்டுகளில் ஏற்படும் நிகழ்வுகள். இதுவே ஒரு சில ஆயிரம் ஆண்டுகள் கடந்தால் பூமியை தாக்கும் கற்களின் அளவு மிகப்பெரியதாக இருக்கக்கூடும் என்று விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். எனவே பூமிக்கு மாற்றாக வேறு ஒரு கிரகத்தை கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். ஆனால் இதற்காக நமக்கு கொஞ்சம் டைம் இருக்கிறது.
எனவே தற்போது நிலவு மற்றும் செவ்வாய்க்கு ரோவர்களை அனுப்பவதற்கான உடனடி நோக்கம் இது இல்லை. ஆக உலக நாடுகளுக்கு வேறு ஒரு நோக்கம் இருக்கிறது. அது நிலவில் இருக்கும் கனிமங்களை கைப்பற்றுவதுதான்.
நிலவின் தென் துருவத்தில் நீர் இருப்பதை இஸ்ரோவின் சந்திரயான் 1 கண்டுபிடித்தது. நீர் இருப்பது என்பது உண்மையில் ஒரு பாசிட்டிவ்வான விஷயமாகும். ஏனெனில் பூமியில் மிகவும் அரிதாக கிடைக்கும் கனிமங்கள் நிலவில் ஏகபோகத்திற்கு இருக்கிறது. எனவே இந்த நீரை பயன்படுத்தி அந்த கனிமங்களை அலேக்காக நாம் பூமிக்கு எடுத்து வரலாம். அதாவது 2 ஹைட்ரஜன் அணுக்கள் ஒரு ஆக்சிஜன் (H2O) அணு சேர்த்தால் நம்மால் தண்ணீரை உருவாக்க முடியும்.
இதில் உள்ள ஹைட்ரஜன்தான் முக்கியமான மேட்டர். இந்த ஹைட்ரஜனை கொண்டு எரிபொருளை உருவாக்க முடியும். இதனை ராக்கெட்டில் அடைத்து நிலவில் உள்ள கனிமங்களை எளிதாக பூமிக்கு கொண்டுவர முடியும்.
ஆக இந்த நோக்கத்திற்காகவும், பிறகாலத்தில் வேறு ஏதாவது ஒரு கிரகத்திற்கு போக வேண்டும் எனில் நிலவில் உள்ள நீரிலிருந்து ஹைட்ரஜனை பிரித்தெடுத்து அதை வைத்து நிலவிருந்தே வேறு கிரகத்திற்கு போகலாம். இந்த யோசனையில்தான் நிலவின் தென் பகுதியை உலக நாடுகள் கழுகு போல வட்டமிட்டு வருகின்றன. உலக நாடுகள் என்று சொல்வதை விட தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனங்கள் என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும்.

ஏனெனில் இந்தியாவும் ஏற்கெனவே விண்வெளித்துறையில் தனியார் மையத்தை அனுமதித்துவிட்டது. இந்நிலையில் இந்த சந்திரயான் 3 திட்டம் வெற்றி பெற்றால் அதன் மூலம் இந்திய விண்வெளி துறையில் அந்நிய முதலீடுகளை 5 மடங்கு அதிகரிக்க யோசித்திருக்கிறது. இதற்கான வாய்ப்பும் இருக்கிறது. ஏனெனில் ரஷ்யாவின் லூனா 25 தோல்வியடைந்துவிட்டது, அமெரிக்கா ரூ.6.9 லட்சம் கோடியில் ஆர்டெமிஸ் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. சீனாவும், ரூ.90 ஆயிரம் கோடியில் தனது புதிய விண்வெளி திட்டத்தை வகுத்து வருகிறது.
ஆனால் இந்தியாவோ சந்திரயான் 3 திட்டத்திற்கு வெறும் ரூ.614 கோடியைதான் செலவு செய்திருக்கிறது. எனவே தெற்காசியாவை பொறுத்த அளவில் மிகவும் செலவு கம்மியான அதே நேரம் சக்சஸை கொடுக்கும் ஒரே விண்வெளி ஆய்வு நிறுவனம் இஸ்ரோதான். ஆகவே நிச்சயம் தனியார் முதலாளிகள் இதில் முதலீடு செய்வார்கள். இந்த முதலீடுகளை இஸ்ரோ தனது வளர்ச்சிக்கு பயன்படுத்திக்கொள்ள திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications