வேறலெவல்! பெங்களூர் ஏர்போர்ட்டில் மெய்மறந்த நடிகர் மாதவன்! பிரதமர் மோடியின் ரியாக்சன் பாருங்க! செம
பெங்களூர்: பெங்களூர் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள 2வது முனையத்தை பார்த்து நடிகர் மாதவன் மெய்சிலிர்த்து வீடியோ வெளியிட்ட நிலையில் அதற்கு பிரதமர் மோடி கொடுத்த ரியாக்சன் தற்போது அனைவரையும் கவர்ந்துள்ளது. இதுதொடர்பான வீடியோ இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
தமிழ் உள்பட பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்து வருபவர் நடிகர் மாதவன். இவர் பிரதமர் மோடியுடன் நெருக்கமாக உள்ளார். அடிக்கடி பிரதமர் மோடியின் திட்டங்களையும் நடிகர் மாதவன் புகழ்ந்து பேசி வருகிறார்.

இந்நிலையில் தான் மாதவன் கர்நாடகா தலைநகர் பெங்களூரில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்துக்கு சென்றார். சமீபத்தில் தான் இந்த விமான நிலையத்தின் புதிய 2வது முனையம் திறக்கப்பட்டது.
இதனை பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு திறந்து வைத்தார். இந்த முனையம் ரூ.5 ஆயிரம் கோடியில் கட்டப்பட்டுள்ளது. இந்த முனையம் 2 லட்சத்து 55 ஆயிரத்து 645 சதுர மீட்டர் பரப்பளவில் பரந்து விரிந்து காணப்படுகிறது. இந்த முனையத்தில் பெரும்பாலான பகுதிகளில் மூங்கில்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இது கார்பன் வெளியீட்டை குறைக்கும். அதோடு மூங்கிலில் பல்வேறு கலைநயமிக்க கலைஞர்கள் சில வித்தியாசமான வடிவங்களை வடிவமைத்துள்ளனர்.
மேலும் பசுமை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 10 ஆயிரம் சதுர மீட்டர் தொலைவுக்கு செடி, அழகிய மரங்கள் மூலம் பசுமை சுவர்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதோடு பசுந்தாவரங்களுடன் தொங்கு தோட்டம் உள்ளது. மொத்தம் 8,060 வகையான தாவரங்களை ஆராய்ந்து 400 தாவரங்களை தேர்வு செய்யப்பட்டு விமான முனைத்தில் வைக்கப்பட்டுள்ளன. அதோடு செயற்கை நீரூற்றுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் தான் பெங்களூர் விமான நிலையத்தை பார்த்து வியப்படைந்த நடிகர் மாதவன் அதுதொடர்பான வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார். அந்த வீடியோவில் நடிகர் மாதவன், ‛‛இந்தியாவின் உள்கட்டமைப்பு என்னவாக மாறுகிறது என்பது நம்பமுடியாத வகையில் உள்ளது. நான் பெங்களூர் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் இருக்கிறேன். நான் உங்களுக்கு ஒன்றை சொல்கிறேன், இது ஒரு விசித்திரமான... கவர்ச்சியான இடம் போல் தெரிகிறது. இன்னும் சொல்ல வேண்டும் என்றால் இது ஒரு விமான நிலையம் என்றால் யாரும் நம்பமாட்டார்கள்.
விமான நிலையத்தில் உள்ள தாவரங்கள் உண்மையானவை. இவற்றுக்கு தினமும் தண்ணீர் ஊற்றப்படுகிறது. மூங்கில்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. பெங்களூர் விமான நிலையத்தை பார்க்கும்போது நான் வெளிநாட்டில் இருப்பது போல் உணர்கிறேன். உண்மையில் இது மிகச்சிறந்த உள்கட்டமைப்பு. ரொம்ப பெருமையாக இருக்கிறது'' என்றார். இதனை பார்த்த பிரதமர் மோடி, ‛‛இந்தியாவின் வளர்ச்சிக்கும், அடுத்த தலைமுறைக்கான உள்கட்டமைப்பு இது'' என தெரிவித்துள்ளார். தற்போது நடிகர் மாதவனின் இந்த வீடியோ இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications