திமுகவுக்காக பேசிய மோடி.. "ஸ்டாலின் உதவியை காங்கிரஸ் மறந்துவிட்டு.. முதுகில் குத்திவிட்டது.!" ஆவேசம்
பெங்களூர்: திமுக முதுகில் காங்கிரஸ் கட்சி குத்திவிட்டதாக மிகக் கடுமையாக விமர்சித்துள்ள பிரதமர் மோடி, 2014க்கு முன்னால் காங்கிரஸ் தலைமையிலான அரசு 10 ஆண்டுகள் நீடித்ததற்கே திமுக தான் காரணம் என்றும் ஆனால் அரசியல் காற்று மாறியவுடன் திமுகவையே காங்கிரஸ் கைவிட்டு விட்டதாகக் கடுமையாகச் சாடியுள்ளது.
தமிழ்நாடு அரசியல் இப்போது மொத்தமாக மாறிவிட்டது. கடந்த 60 ஆண்டுகளில் முதல்முறையாகத் திராவிட கட்சிகள் இல்லாத ஒரு ஆட்சி தமிழகத்தில் அமைந்துள்ளது. முதல்வராக விஜய் பதவியேற்று இருக்கிறார். அதேபோல இத்தனை காலம் திமுகவுடன் கூட்டணியில் இருந்த காங்கிரஸ் கட்சி இப்போது தவெகவுடன் கூட்டணி அமைத்துள்ளது.

காங்கிரஸ் மீது பாய்ச்சல்
தவெகவுடன் கூட்டணி அமைத்த காங்கிரஸை திமுக தலைவர்கள் கடுமையாக விமர்சித்தனர். திமுகவின் முதுகில் தவெக குத்திவிட்டதாகக் கூட விமர்சித்தனர். இதற்கிடையே பிரதமர் மோடியும் காங்கிரஸ் மீது பாய்ந்துள்ளது. அதிகாரத்திற்காக திமுக முதுகில் காங்கிரஸ் குத்திவிட்டதாக அவர் சாடியுள்ளார்.
இதற்கிடையே பெங்களூரில் உள்ள HAL விமான நிலையத்தில் நடைபெற்ற பாஜக பேரணியில் உரையாற்றிய பிரதமர் மோடி, தமிழ்நாட்டின் புதிய முதல்வராகப் பதவியேற்றுள்ள விஜய்க்கு வாழ்த்து தெரிவித்தார். புதிய முதலமைச்சர் விஜய்க்கு வாழ்த்துச் சொன்ன கையோடு, தவெகவுடன் கூட்டணி அமைத்துள்ள காங்கிரஸை மிகக் கடுமையாக விமர்சித்தார் மோடி!
திமுக முதுகில் குத்திவிட்டது
தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றத்தை வைத்து காங்கிரஸைக் கடுமையாகச் சாடியுள்ளார் பிரதமர். இது தொடர்பாக அவர், "கடந்த 25-30 ஆண்டுகளாக திமுகவுடன் ஒட்டிக்கொண்டு இருந்த காங்கிரஸ், பலமுறை திமுகவால் ஆபத்திலிருந்து காப்பாற்றப்பட்டது. 2014க்கு முன்னால் காங்கிரஸ் தலைமையிலான அரசு 10 ஆண்டுகள் நீடித்ததற்கே திமுக தான் காரணம். ஆனால், இப்போது அரசியல் காற்று சற்று மாறியவுடன், தங்களுக்கு உதவிய திமுகவையே காங்கிரஸ் முதுகில் குத்திவிட்டது.
காங்கிரஸ் ஒரு ஒட்டுண்ணி கட்சி. அதிகாரப் பசிக்காக யாரை வேண்டுமானாலும் முதுகில் குத்தும். இப்போது உயிர் பிழைக்க மற்றொரு கட்சியின் (தவெக) முதுகில் ஏறிச் சவாரி செய்யப் பார்க்கிறது" என பிரதமர் மிகக் காரசாரமாக விமர்சித்துள்ளார். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் பிரதமர் மோடி சொல்வதைத்தான் திமுகவும் தனது தீர்மானத்தில் குறிப்பிட்டுள்ளது..
கட்சி மாறிய காங்கிரஸ்
முன்னதாக திமுக சார்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில், "வெற்றிக்கு நன்றி சொல்லக் கூட நேரில் வராமல், 3 நாட்களுக்குள் கட்சி மாறியது காங்கிரஸ். எங்கள் தலைவர் ஸ்டாலின் பெருந்தன்மையுடன் பொறுத்துக் கொண்டார். ஆனால், காங்கிரஸ் தனது பழைய புத்தியைக் காட்டத் தொடங்கிவிட்டது. பாஜக மற்ற மாநிலங்களில் என்ன செய்யுமோ, அதையே காங்கிரஸ் எங்களுக்குத் தமிழகத்தில் செய்துவிட்டது. ஒரு ராஜ்யசபா சீட், 28 எம்.எல்.ஏ சீட் என அனைத்தையும் வாங்கிக்கொண்டு, இப்போது முதுகில் குத்திவிட்டது" என அந்த தீர்மானங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி பெங்களூர் நிகழ்ச்சியில் மேலும் பேசுகையில், "தங்கள் தோல்விக்காக அரசியல் சாசனம், ஜனநாயகம், நீதிமன்றம் என உலகத்தையே அவர்கள் குறை சொல்கிறார்கள். ஒரு முக்கிய அரசியல் கட்சி இப்படிச் செய்வதை என் பொது வாழ்வில் நான் பார்த்ததே இல்லை.. நாங்கள் 12 ஆண்டுகளாக அதிகாரத்தில் இருக்கிறோம். 21 பிராந்தியங்களில் பாஜக/தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிகள் அமைந்துள்ளன. வளர்ச்சி என்ற மந்திரத்தை முன்வைத்து உழைக்கிறோம். ஆனால், 40 ஆண்டுகளுக்கு முன்பு நாடாளுமன்றத்தில் 400 இடங்களை வைத்திருந்த காங்கிரஸ், கடந்த மூன்று தேர்தல்களில் 100 இடங்களைக் கூடத் தொட முடியவில்லை.
வளர்ச்சி இல்லை
காங்கிரஸ் ஆளும் மாநிலங்களையே பாருங்கள்.. இந்த கர்நாடகாவில் கடந்த மூன்று ஆண்டுகளாக வளர்ச்சிக்குப் பதிலாக உட்கட்சி மோதல்கள் தான் நடக்கிறது. தற்போதைய முதல்வர் தொடர்வாரா அல்லது வேறொருவருக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பது கூடத் தீர்மானிக்கப்படாமல் இருக்கிறது. காங்கிரஸுக்குத் துரோகம் மட்டுமே தெரியும்; அவர்களின் கியாரண்டிகள் அனைத்தும் பொய். கேரளாவிலும் முதல்வர் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை. சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தானில் நடந்த அதே கூத்து இப்போது கேரளாவிலும் நடக்கிறது" என காட்டமாக சாடினார்.












Click it and Unblock the Notifications