சென்சிட்டிவ்வான மேட்டர்.. போக்சோவில் கைதாகும் எடியூரப்பா? என்ன நடந்தது? உள்துறை அமைச்சர் விளக்கம்
பெங்களூர்: 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் கர்நாடகா பாஜக மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான எடியூரப்பா மீது போக்சோ உள்பட 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில் அவர் கைது செய்யப்பட உள்ளதாக தகவல் பரவும் நிலையில் கர்நாடகா உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் சம்பவம் குறித்து முக்கிய விளக்கம் அளித்துள்ளார்.
கர்நாடகாவில் பாஜகவின் மூத்த தலைவராக இருப்பவர் எடியூரப்பா. வயது 81. இவர் 4 முறை கர்நாடகாவின் முதல்வராக இருந்துள்ளார். கடந்த 2007 ல் 7 நாட்கள், அதன்பிறகு 2008 முதல் 2011 வரையும், அதன்பிறகு 2018 ல் 3 நாட்களும், அதைத்தொடர்ந்து 2019 ஜுலை மாதம் 2021 ஜுலை மாதம் வரையும் எடியூரப்பா முதல்வராக உள்ளார்.

இவரது மகன் விஜயேந்திரா தான் தற்போது கர்நாடகா மாநில பாஜக தலைவராக உள்ளார். இந்நிலையில் தான் எடியூரப்பா மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவர் உதவி கேட்டு வந்த 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து அவர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதாவது பெங்களூரில் சதாசிவநகரில் எடியூரப்பாவின் இல்லம் அமைந்துள்ளது. கடந்த பிப்ரவரி 2ம் தேதி பெண் ஒருவர் தனது மகளுடன் உதவி கேட்க எடியூரப்பாவின் இல்லத்துக்கு சென்றுள்ளார். இந்த சமயத்தில் சிறுமியை அறைக்குள் அழைத்து சென்று எடியூரப்பா பாலியல் தொல்லை அளித்ததாக சதாசிவ நகர் போலீசில் பரபரப்பான புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரை 17 வயது சிறுமியின் தாய் போலீசில் கொடுத்தார்.
இந்த புகாரை தொடர்ந்து எடியூரப்பா மீது போக்சோ உள்பட 2 பிரிவுகளில் சதாசிவநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். . எடியூரப்பா மீதான இந்த புகார் கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ள நிலையில் எடியூரப்பா தான் பாஜகவின் முகமாக உள்ளார். அவர் பிரசாரத்துக்கு தயாராகி வந்த நிலையில் இந்த வழக்கு என்பது அவருக்கு பிரச்சனையாக மாறி உள்ளது.
மேலும் விரைவில் எடியூரப்பா கைது செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுபற்றி கர்நாடகா உள்துறை அமைச்சர் பரமேஸ்வரிடம் இன்று கேள்வி கேட்கப்பட்டது. அப்போது, ‛‛முன்னாள் முதல்வர் எடியூரப்பா தனது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பெண் ஒருவர் சதாசிவநகர் போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தில் உண்மை அறியும் வரை எங்களால் எதையும் கூற முடியாது.
ஏனென்றால் இது மிகவும் சென்சிட்டிவான விஷயம். அதோடு முன்னாள் மதல்வர் சம்பந்தப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தை பொறுத்தவரை விசாரணை அறிக்கையை பொறுத்து தான் எதையும் கூற முடியும். மேலும் இதில் அரசியல் கோணம் இருப்பதாக நான் நினைக்கவில்லை. புகார் தந்த பெண் யார்? என்பது எங்களுக்கு தெரியாது. அவர் போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்'' என்றார். இதன்மூலம் எடியூரப்பாவுக்கு எதிரான வழக்கில் முதற்கட்ட விசாரணை முடிந்த பிறகே அடுத்தக்கட்ட நடவடிக்கை என்பது எடுக்கப்பட உள்ளது உறுதியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications