"கசங்கி கிடந்த டிஸ்ஸு! அதை எடுத்து பார்த்ததும்.." 4 வயது மகனை கொன்ற பெண் சிஇஓ வழக்கில் திருப்பம்
பெங்களூர்: தனது 4 வயது மகனைத் தாய் ஒருவரே கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் பகீர் கிளப்பிய நிலையில், இது தொடர்பாக சில கூடுதல் தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது.
கர்நாடகாவைச் சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் சிஇஓவாக பணிபுரிந்த பெண் ஒருவர், தனது மகனையே கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் பகீர் கிளப்பியது. மகனின் சடலத்தை எடுத்துக் கொண்டு அந்த பெண் சிஇஓ கோவாவில் இருந்து கர்நாடகாவுக்கு வந்துள்ளார்.

இது தொடர்பான வழக்கு விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. இதில் உண்மையில் என்ன நடந்தது.. அந்த பெண்ணுக்கு உளவியல் பாதிப்பு இருக்கிறதா என்பதைக் கண்டறியும் முயற்சியில் போலீசார் இறங்கியுள்ளனர்.
கடிதம்: இதற்கிடையே தனது நான்கு வயது மகனைக் கொன்ற பெங்களூர் ஸ்டார்ட் அப் பெண் சிஇஓ உடைமைகளில் இருந்து போலீசார் கடிதம் ஒன்றை மீட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அந்தக் கடிதத்தில் என்ன இருக்கிறது என்பது குறித்த தெளிவான தகவல்களை போலீசார் வெளியிடவில்லை. இருந்த போதிலும் குற்றம் சாட்டப்பட்ட சுசனா சேத், தனது கணவருடனான கசப்பான உறவு குறித்து அதில் குறிப்பிட்டுள்ளதாக போலீசார் கூறுகின்றனர்.
39 வயதான அந்தப் பெண், கோவாவில் உள்ள ஹோட்டல் அறையில் தனது 4 வயது மகனைக் கொலை செய்துள்ளார். இருவருக்கும் இடையே சில காலமாகவே மோதல் இருந்ததாகவும் விவகாரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. அதில் குழந்தையைத் தந்தையிடம் கொடுக்க வேண்டிய நிலை வந்ததாகவும் இதன் காரணமாகவும் குழந்தையைக் கொலை செய்து இருக்கலாம் என்று போலீசார் கூறுகின்றனர்.
சோதனை: அவருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட உள்ளதாகவும் இதுவரை விசாரணையில் அவர் தனது மகனைக் கொன்றதற்கு எந்த வருத்தமும் காட்டவில்லை என்றும் போலீசார் கூறுகின்றனர். இந்தச் சூழலில் தான் போலீசார் அந்தக் கடிதத்தைக் கண்டுபிடித்துள்ளனர். அந்த கடிதம் டிஸ்யூ பேப்பரில் ஐலைனர் மூலம் எழுதப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இந்த கையெழுத்து இப்போது தடய அறிவியல் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
அந்தக் கடிதத்தில், அவரது கணவர் வெங்கட் ராமனுடனான திருமண உறவில் உள்ள விரிசலையும், குழந்தையைச் சந்திக்க ராமனுக்கு நீதிமன்றம் அனுமதி அளித்ததால் அதிருப்தி அடைந்தது குறித்தும் விவரித்துள்ளார். அவர் எந்த மனநிலையில் இருந்தார் என்பதை இந்தக் கடிதம் காட்டுவதாக போலீசார் கூறுகின்றனர்.
யார் இவர்: கர்நாடக தலைநகர் பெங்களூரில் ஏஐ ஸ்டார்ட்-அப் நிறுவனமான மைண்ட்ஃபுல் ஏஐ என்ற நிறுவனத்தின் சிஇஓவாக உள்ளவர் தான் சுசனா சேத். 39 வயதான இவர், கடந்த சனிக்கிழமை தனது மகனுடன் வடக்கு கோவாவின் கண்டோலிமில் உள்ள சோல் பன்யன் கிராண்டேவுக்கு சென்றார். அங்கே இரண்டு நாட்கள் தங்கியவர், திங்கட்கிழமை ரூமை காலி செய்துள்ளார். வரும் போது மகன் இருந்த நிலையில், கிளம்பும்போது மகன் இல்லாததால் ஊழியர்கள் சந்தேகமடைந்தனர்.
இதையடுத்து ரூமை செக் செய்யும் போது சுவரில் ரத்தக் கறைகள் இருந்ததால் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விசாரணையிலும் அந்தப் பெண் முறையான பதிலை அளிக்கவில்லை. இதையடுத்து கர்நாடகாவில் உள்ள போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்த பேக்கை சோதனை செய்ததில் அதில் அந்த 4 வயதுக் குழந்தையின் சடலம் இருந்துள்ளது.












Click it and Unblock the Notifications