இனி நாடு முழுக்க "திராவிட மாடல்" தான்! கர்நாடக முடிவுகள் என்ன சொல்கிறது? பொன்முடி சொல்வதை கேளுங்க
பெங்களூர்: கர்நாடகாவில் இப்போது பாஜக ஆட்சியை அமைக்கும் சூழல் உருவாகி உள்ளது. இந்தச் சூழலில் செய்தியாளர்களிடம் பேசிய உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி சில முக்கிய தகவல்களைத் தெரிவித்தார்.
நமது அண்டை மாநிலமான கர்நாடகாவில் புதன்கிழமை சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. மொத்தம் இருக்கும் 224 தொகுதிகளில் ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெற்றது. காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு அமைதியாகவே நிறைவடைந்தது.
அதைத் தொடர்ந்து இன்று அங்கே வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. அங்கே ஒரு கட்சி பெரும்பான்மைக்கு 113 இடங்கள் தேவை என்ற நிலையில், பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்குப் பிரசாரத்தின் போது கடும் போட்டி நிலவியது.

ஓல்ட் மைசூர் உள்ளிட்ட சில பகுதிகள் மும்முனை போட்டியும் இருந்தது. தென் இந்தியாவில் பாஜக ஆட்சியில் இருக்கும் ஒரே மாநிலம் என்பதால் கர்நாடகாவில் ஆட்சியைத் தக்க வைக்க பாஜக கடுமையாக முயன்றது. இதன் காரணமாகவே இறுதிக் கட்டத்தில் பிரதமர் மோடியே பல முறை கர்நாடகாவுக்கு நேரடியாக வந்து பிரசாரம் செய்தார். எப்படியாவது ஆட்சியைத் தக்க வைக்க முயன்றனர்.
இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கிய போது, முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டது.. அப்போது பாஜகவே முன்னிலையில் இருந்தது. இருப்பினும், தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட ஆரம்பித்தவுடன் இந்த நிலை முற்றிலுமாக மாறியது. பல தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலைக்கு வந்தது. பாஜக பல இடங்களில் பின்னடைவை சந்தித்தது. பாஜகவின் முக்கிய தலைவர்கள் பலரும் தோல்வியடைந்தனர்.
இப்போதைய சூழலில் காங்கிரஸ் கட்சி 115க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலையில் இருக்கிறது. அங்கே ஆட்சி அமைக்க 113 இடங்கள் தேவை என்ற சூழலில் காங்கிரஸ் கட்சிக்கு எளிதாகப் பெரும்பான்மை கிடைக்கும் என்றே கூறப்படுகிறது. ஜேடிஎஸ் சுமார் 30 இடங்கள் வரை முன்னிலையில் இருக்கும் நிலையில், ஆளும் கட்சியாக இருந்த பாஜக 80 சீட்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது.
இந்தத் தேர்தல் தோல்வி மூலம் தென்னிந்தியாவில் ஒரு மாநிலத்திலும் பாஜக ஆட்சியில் இல்லை என்ற சூழல் உருவாகியுள்ளது. இப்போது கர்நாடகாவில் பாஜக ஆட்சி அமைக்கும் சூழலில், கேரளாவில் இடதுசாரிகளும், தமிழகத்தில் திமுகவும் ஆட்சியில் இருக்கிறது. தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம் மாநிலங்களில் முறையே டிஆர்எஸ் மற்றும் ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கிறது.
காங்கிரஸ் கட்சியின் இந்த வெற்றிக்குப் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பொன்முடி இது குறித்து சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார்.

முதலில் பொறியியல் விண்ணப்பங்கள் குறித்துப் பேசிய அவர், "+2 தேர்வுகள் வெளியாகிவிட்டன. இனிமேல் பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
கெளரவ விரிவுரையாளர்கள் விவகாரத்தில் நீதிமன்றம் என்ன தீர்ப்பை அளிக்கிறதோ.. அதைப் பொறுத்து நடவடிக்கை எடுக்கப்படும். இங்கே உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஒரே மாதிரியான கட்டணம், ஊதியம், பாடத்திட்டம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
தொடர்ந்து கர்நாடக தேர்தல் குறித்துப் பேசிய அவர், "விரைவில் நாடு முழுக்க திராவிட மாடல் ஆட்சி அமையும் என நம் முதல்வர் தெரிவித்துள்ளார். அதன் முதல்படி தான் கர்நாடகா.. கர்நாடகாவில் அது இப்போது பிரதிபலித்துள்ளது. அடுத்தாண்டு நடக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாக இந்த தேர்தல் அமைந்துள்ளது" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications