“ஆட்டம் ஸ்டார்ட்”.. நிலாவில் ஓடி வரும் பிரக்யான் ரோவர்! ஆய்வு தொடக்கம் - இஸ்ரோவின் முக்கிய “அப்டேட்”
பெங்களூர்: நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கிய சந்திரயான் 3ன் விக்ரம் லேண்டரில் இருந்து வெளியே வந்த பிரக்யான் ரோவர், தனது ஆய்வுப் பணிகளை வெற்றிகரமாக தொடங்கி இருப்பதாக இஸ்ரோ அறிவித்து உள்ளது.
ரஷியா, அமெரிக்கா, சீனா ஆகிய நிலவிற்கு விண்கலத்தை அனுப்பிய நாடுகளின் வரிசையில் 4 வது நாடாக இணையும் முனைப்புடன் சந்திராயன் 1 விண்கலத்தை கடந்த 2008 ஆம் ஆண்டு இஸ்ரோ விஞ்ஞானிகள் நிலவிற்கு அனுப்பினார்கள். அது நிலவில் இருந்து எடுத்து அனுப்பிய ஏராளமான புகைப்படங்களின் மூலம் நிலவில் நீர் இருப்பதற்கான தடங்கள் தெரிந்தன.

கடந்த 2019 ஆம் ஆண்டு 2 வது முறையாக சந்திராயன் 2 விண்கலத்தை நிலவை நோக்கி இஸ்ரோ அனுப்பியது. ஆனால் நிலவில் ரோவர் கருவி தரையிறங்கும்போது வேகமாக மோதி வெடித்து சிதறியது. இருப்பினும் அதன் ஆர்ப்பட்டர் தொடர்ந்து செயல்பட்டு சந்திரயான் 3 திட்டத்துக்கு உதவியது. கடந்த ஜூலை மாதம் 14 ஆம் தேதி சந்திரயான் 3 விண்கலம் நிலவின் இருண்ட பகுதியை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்டது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் இருந்து ஏவப்பட்ட சந்திரயான் 3, வரலாற்றில் முதல் முறையாக நிலவின் தெற்கு பகுதியில் விண்கலத்தை நிலை நிறுத்தும் வகையில் அனுப்பப்பட்டதாகும். வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட விண்கலம் பூமியின் நீள் வட்டப் பாதையில் 5 முறை சுற்றி வந்தது.
அதை தொடர்ந்து நிலவின் ஆர்ப்பிட்டுக்குள் நுழைந்த சந்திரயான் 3 நீள் வட்டப்பாதையில் பல நாட்கள் சுற்றியது. நேற்று மாலை சந்திராயன் 3 விண்கலம் வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கி இருக்கிறது. நிலாவை விக்ரம் லேண்டர் தொட்ட உடன் சந்திரயான் 3 விண்கலம், "இந்தியா.. நான் எனது இலக்கை எட்டிவிட்டேன். நீங்களும்தான்." என இஸ்ரோவுக்கு ஒரு மெசேஜை அனுப்பியது.
இதன் மூலம் நிலவில் விண்கலத்தை அனுப்பிய 4 வது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. இந்தியா விண்கலத்தை நிலவின் தென் துருவத்தில் நிலை நிறுத்திய முதல் நாடு என்ற பெருமையை பெற்று உள்ளது. நிலவின் தென்பகுதியில் இருந்து விக்ரம் லேண்டர் எடுத்த புகைப்படங்களையும் இஸ்ரோவுக்கு அனுப்பி இருக்கிறது.

அத்துடன் விக்ரம் லேண்டர் - பெங்களூரு இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்தின் இணைப்பு வெற்றிகரமாக நடந்து இருக்கிறது. விக்ரம் லேண்டரின் மீது படிந்து இருந்த நிலவின் மணல் தூசு விலகியதை தொடர்ந்து பிரக்யான் ரோவர் நேற்று அதில் இருந்து வெளியேறியது. இந்த நிலையில் தற்போது முழுமையாக விக்ரம் லேண்டரை விட்டு பிரிந்து சென்று ரோவர் ஆய்வை தொடங்கி உள்ளது.
இதன் மூலம் அதிகாரப்பூர்வமாக நிலவின் தென் துருவத்தில் சந்திரயான் 3 ஆய்வுப் பணிகள் தொடங்கி இருக்கின்றன. லேண்டரில் உள்ள ILSA, RAMBHA, chaSTE ஆகிய செயல்பாடுகள் இயக்கப்பட்டு இருப்பதாக இஸ்ரோ அறிவித்து உள்ளது. 14 நாட்கள் நிலவின் மேற்பரப்பில் இருக்கு மண்ணின் தன்மை, வளிமண்டலம் ஆகியவை குறித்து இந்த பிரக்யான் ரோவர் ஆய்வு செய்ய உள்ளது.












Click it and Unblock the Notifications