சென்னை கோவில்களில் விரைவில் குண்டு வெடிக்கும்.. பெங்களூருக்கு போன மிரட்டல் மின்னஞ்சல்
பெங்களூர்: சென்னை கோவில்களில் விரைவில் வெடிகுண்டு வெடிக்கும் என்று மின்னஞ்சலில் மிரட்டல் வந்துள்ளது. பெங்களூர் காவல்துறைக்கு வந்துள்ள மிரட்டல் மின்னஞ்சல் குறித்து சென்னை காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
சென்னை, கோவை பள்ளிகளில் வெடிகுண்டு வெடிக்கும் என்று மின்னஞ்சலில் மர்ம ஆசாமிகள் மிரட்டல் விடுத்து வந்தனர். கடந்த ஒரு மாத காலமாகவே மிரட்டல் மின்னஞ்சல் வந்து கொண்டிருக்கிறது. சைபர் கிரைம் போலீசார் இது குறித்து விசாரித்து வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில் கடந்த வாரம் பெங்களூரில் உள்ள பிரபல உணவகமான ராமேஸ்வரம் கபே உணவகத்தில் குண்டு வெடித்தது பலர் படுகாயமடைந்தனர். குண்டு வைத்த மர்ம நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். வெடிகுண்டு வைத்த நபர் குறித்து துப்பு கொடுத்தால் ரூ.10லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்று பெங்களூர் காவல்துறை அறிவித்துள்ளது.
இந்த நிலையில் நேற்றைய தினம், கர்நாடகாவில் பேருந்துகள், வழிபாட்டு தலங்களில் குண்டு வெடிக்கும் என மின்னஞ்சலில் மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து காவல்துறையினர் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். இதனிடையே விரைவில் சென்னை கோவில்களில் குண்டு வெடிக்கும் என்று பெங்களூர் காவல்துறைக்கு மர்ம நபர்கள் மின்னஞ்சலில் மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து பெங்களூர் காவல்துறையினர் தமிழ்நாடு காவல்துறையை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு, சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் உள்ள தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக செய்திச் சேனலை தொடர்பு கொண்ட நபர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து தொலைக்காட்சி தரப்பில் இருந்து காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு இந்த வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக தகவல் அளிக்கப்பட்டது. பின்னர் காவல்துறை சார்பில் வெடிகுண்டு நிபுணர்கள் தலைமைச் செயலகம் முழுவதும் சோதனை செய்தனர்.
மோப்ப நாய் உதவியுடன் தலைமைச் செயலகத்தின் நுழைவு முதல், முக்கிய அறைகள், சட்டப்பேரவை அறைகள் என அனைத்திலும் சோதனை செய்யப்பட்டது. சுமார் 2 மணி நேரம் நடந்த சோதனையின் முடிவில் அந்த வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரிய வந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications