பெங்களூர் மருத்துவமனையில் இருந்து சசிகலா டிஸ்சார்ஜ்- தேவனஹள்ளி பண்ணை வீட்டில் ஒருவாரம் சசிகலா முகாம்
பெங்களூரு: கொரோனா பாதிப்பில் இருந்து பூரண குணமடைந்த சசிகலா இன்று மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு தேவனஹள்ளியில் உள்ள கோடாகுருக்கி பண்ணை வீட்டில் ஒரு வார காலத்திற்கு தங்குகிறார்.
Recommended Video
சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேருக்கும் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் விதித்த தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்ததால், அவர்க பேரும் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார்கள். சொத்துகுவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை நிறைவு பெற்றதால் கடந்த 27-ந் தேதி சசிகலா விடுதலை செய்யப்படுவார் என்று சிறை நிர்வாகம் அறிவித்திருந்தது. முன்னதாக சசிகலா தனக்கு விதிக்கப்பட்ட ரூ.10 கோடியே 10 ஆயிரம் அபராத தொகையை கோர்ட்டில் செலுத்தினார். இதையடுத்தே அவர் விடுதலை செய்யப்படுவார் என்று சிறை நிர்வாகம் அறிவித்தது.
இதனிடையே கடந்த 20-ந் தேதி சசிகலாவுக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக பெங்களூரு பவுரிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் சசிகலா விக்டோரியா ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று பாதித்து இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இதையடுத்து, கொரோனா பாதிப்பில் இருந்து சசிகலா மீளத்தொடங்கினார்.

சசிகலா விடுதலை
இதற்கிடையில், சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு விதிக்கப்பட்ட 4 ஆண்டுகால சிறை தண்டனை முடிவடைந்து. இதன் காரணமாக கடந்த 27-ந் தேதி மருத்துவமனையில் இருந்தபடியே சசிகலா விடுதலை செய்யப்பட்டார். கொரோனா பாதிப்பு காரணமாக பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சசிகலாவிடம் நேரில் சென்று, சிறை அதிகாரிகள், விடுதலை செய்யப்பட்டதற்கான ஆவணங்களை வழங்கி, அவரிடம் கையெழுத்து பெற்று சென்றனர்.

உடல் நிலை முன்னேற்றம்
சிறையில் இருந்து விடுதலை ஆனாலும் கொரோனா காரணமாக விக்டோரியா மருத்துவமனையில் சசிகலா தொடர்ந்து சிகிச்சை பெற்றார். அவர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளார். சசிகலா தற்போது உடல் நல பாதிப்பில் இருந்து முழுமையாக மீண்டு வந்திருப்பதுடன், அவரது உடல்நிலை இயல்பு நிலைக்கு திரும்பி இருப்பதை விக்டோரியா மருத்துவமனை நிர்வாகம் அண்மையில் உறுதி செய்தது. இதையடுத்து சசிகலாவை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்வது குறித்து டாக்டர்களுடன் ஆலோசித்து முடிவு செய்யப்படும் என்றும் விக்டோரியா மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரி முதல்வர் ஜெயந்தி கூறி இருந்தார்.

எப்போது டிஸ்சார்ஜ்
இதன்படி சசிகலாவை 'டிஸ்சார்ஜ்' செய்வது குறித்து நேற்று விக்டோரியா மருத்துவமனை டாக்டர்கள் ஆலோசனை நடத்தினார்கள். இந்த ஆலோசனையின் போது கொரோனா பாதிப்பு, மற்றும் உடல் நலக்குறைவில் இருந்து பூரணமாக குணமடைந்திருப்பதால், அவரை டிஸ்சார்ஜ் செய்வது என்று டாக்டர்கள் முடிவு செய்தார்கள். இதையடுத்து, மருத்துவமனையில் இருந்து சசிகலாவை இன்று டிஸ்சார்ஜ் செய்வதாக விக்டோரியா மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

சசிகலா டிஸ்சார்ஜ்
இதுகுறித்து விக்டோரியா மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரி முதல்வர் ஜெயந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில். பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் கொரோனா பாதிப்பு காரணமாக சசிகலா நடராஜன் அனுமதிக்கப்பட்டார். கடந்த 10 நாட்களா பெற்று வந்த சிகிச்சை இன்றுடன் (அதாவது நேற்று) நிறைவு பெற்றுள்ளது. அவருக்கு கொரோனா அறிகுறி இல்லை. கடந்த 3 நாட்களாக அவர், செயற்கை சுவாச கருவி இல்லாமல் தாமாகவே சுவாசிக்கிறார். கொரோனா விதிமுறைகளின்படி அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார். டாக்டர்கள், அவருக்கு நடத்திய பரிசோதனையில் உடல் ஆரோக்கியமாக இருப்பதாகவும், அவரை டிஸ்சார்ஜ் செய்யும்படியும் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, வருகிற 31-ந் தேதி (இன்று) மருத்துவமனையில் இருந்து சசிகலா டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளார். கொரோனாவில் இருந்து மீண்டு வந்துள்ளதால், வீட்டில் தனிமையில் இருக்க வேண்டும் என்று அவருக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது" இவ்வாறு கூறினார்.

10.30மணிக்கு
இததையடுத்து பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் இருந்து இன்று காலை சசிகலா டிஸ்சார்ஜ் ஆனார். மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த போது அதிமுக கொடியுடன் கூடிய காரில் வெளியே வந்தார். இதனால் அமமுகவினரே வாயடைத்து போயினர். கொரோனாவில் இருந்து மீண்டு வந்துள்ள சசிகலா வீட்டு தனிமையில் இருக்க வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளார்கள். இதனால் , அவர் உடனடியாக பெங்களூருவில் இருந்து சென்னைக்கு வர வாய்ப்பு இல்லை என்று தெரிகிறது. பெங்களூருவிலேயே சில நாட்கள் ஓய்வெடுப்பார் என்று கூறப்படுகிறது.

ஒரு வாரம் தங்குகிறார்
பெங்களூருவில் சசிகலா ஒருவாரம் தங்குவதற்காக பெங்களூர் புறநகர் பகுதியான தேவனஹள்ளி அருகே உள்ள கோடாகுருக்கி பண்ணை வீடு பார்க்கப்பட்டுள்ளது. அங்குதான் ஒரு வாரம் சசிகலா தங்குகிறார். அதன்பிறகு சென்னைக்கு சசிகலா திரும்புவார் என்று அமமுகவினர் தெரிவித்தனர். சசிகலா தங்க உள்ளதால் அந்த பகுதியில் அமமுகவினரின் வாகனங்களில் அதிக அளவில் முகாமிட்டுள்ளனர். சசிகலா இந்த ஒரு வாரத்தில் அரசியல் குறித்த முக்கிய முடிவுகளை எடுக்கலாம் என்பதுடன் அவரது தீவிர ஆதரவாளர்கள் மற்றும் நிர்வாகிகளை சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தவும் வாய்ப்பு உள்ளது. சென்னை வரும் போது சசிகலா முக்கிய முடிவுகளை எடுத்துதான் வருவார் என்று அமமுகவினர் நம்புகின்றனர்.












Click it and Unblock the Notifications