புஸ்ஸி ஆனந்த் உடன் சி விஜயபாஸ்கர் சந்திப்பு? தவெகவில் ஐக்கியம் ஆக திட்டம்? தேதி குறிச்சாச்சாம்!
சென்னை: சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் அமைச்சர் புஸ்சி ஆனந்தை முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பு அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், வரும் 29ஆம் தேதி தனது ஆதரவாளர்களுடன் சி விஜயபாஸ்கர் தவெகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டது. இதனால், அக்கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தேர்தல் தோல்வியால் அதிமுகவில் உள்கட்சி பூசலும் அதிகரித்துள்ளது. சி. விஜயபாஸ்கர் உள்பட அதிமுக எம்.எல்.ஏக்கள் 5 பேர் இதுவரை தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

புஸ்சி ஆனந்தை சந்தித்த விஜயபாஸ்கர்
மரகதம் குமரவேல் - மதுராந்தகம், ஜெயக்குமார் - பெருந்துறை, சத்யபாமா - தாராபுரம், இசக்கி சுப்பையா - அம்பாசமுத்திரம் ஆகியோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். ராஜினமா செய்த கையோடு தவெகவில் இணைந்தனர். இவர்கள் ராஜினாமா செய்த சில நாட்கள் கழித்து அதிமுக முன்னாள் அமைச்சர் சி விஜயபாஸ்கரும் விராலிமலை எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார். ஆனால் சி. விஜயபாஸ்கர் இதுவரை எந்த கட்சியிலும் இணையாமல் உள்ளார்.
அதிமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்த விஜயபாஸ்கர் தவெகவில் இணைவார் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டாலும், இதுபற்றி எந்த ஒரு கருத்தையும் தவெக தரப்பும் தெரிவிக்காமல் இருந்தது வந்தது. விஜயபாஸ்கர் மீதான ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக அவரை கட்சியில் சேர்க்க விஜய் தயக்கம் காட்டுவதாகவும் கூறப்பட்ட நிலையில், இன்று சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் வைத்து அமைச்சரும், தவெக பொதுச்செயலாளருமான புஸ்சி ஆனந்தை விஜயபாஸ்கர் சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திங்கட்கிழமை தவெகவில் இணைகிறார்?
வரும் 29 ஆம் தேதி திருவான்மியூரில் ஒரு மண்டபம் ஒன்றில் வைத்து தவெகவில் தனது ஆதரவாளர்களுடன் விஜயபாஸ்கர் இணைய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. விஜயபாஸ்கருக்கு டெல்டா மாவட்டங்களை உள்ளடக்கி முக்கிய பொறுப்பு வழங்கப்படலாம் என்றும் சொல்லப்படுகிறது. தனது ஆதரவாளர்கள், அதிமுகவ் நிர்வாகிகள் பலருடன் விஜயபாஸ்கர் தவெகவில் இணைய இருப்பதாக சொல்லப்படுகிறது.
எனினும், தவெக தலைவர் விஜய் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பாரா? இல்லையா? என்று தெரியவில்லை. ஊழலுக்கு எதிராக பேசி வரும் விஜய், தவெகவை தூய சக்தி என்றும் தொடர்ந்து பேசி வருகிறார். அதே நேரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சரான விஜயபாஸ்கர் மீது குட்கா ஊழல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் உள்ளன. சிபிஐ விசாரணையையும் சந்தித்து வரக்கூடிய சூழலில், விஜயபாஸ்கரை கட்சியில் சேர்த்தால் கடும் விமர்சனங்களை எதிர்க்கட்சிகள் முன்வைக்க தயராகி வருகின்றன. இதனை சமாளிக்க தவெக என்ன மாதிரியான வியூகம் வகுத்துள்ளது என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.
இடைத்தேர்தல்: களம் சூடு பறக்கும்
அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்த 5 தொகுதிகள் மற்றும் விஜய் ராஜினமா செய்த திருச்சி கிழக்கு என 6 தொகுதிகளுக்கும் விரைவில் இடைத்தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்று பெரும்பான்மையை நெருங்கி வர தவெக தீவிரம் காட்டி வருகிறது.
அதேநேரத்தில், இடைத்தேர்தலில் வெற்றி பெற்று தவெகவுக்கு கடும் நெருக்கடியை கொடுக்க திமுக, அதிமுகவும் வியூகம் வகுத்து வருகின்றன. இதனால், வரும் நாட்களில் தமிழக அரசியல் களம் இன்னும் சூடுபறக்கும் என்று தெரிகிறது. அதிமுகவில் இருந்து மேலும் சில எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்யலாம் என்ற பேச்சும் அரசியல் வட்டாரத்தில் எழுந்து வருவது அக்கட்சியினர் மத்தியில் பரபரப்பை கிளப்பி வருகிறது.















Click it and Unblock the Notifications