ஜரூராகும் சசிகலா விடுதலை நடவடிக்கைகள்... ரூ10 கோடி அபராதத்தையும் செலுத்த மனு
பெங்களூரு: சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் இருக்கும் சசிகலா, ரூ10 கோடி அபராதத்தை செலுத்துவதற்காக பெங்களூரு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் 2017-ம் ஆண்டு முதல் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் சசிகலா. அவருடன் இளவரசி, சுதாகரன் ஆகியோரும் சிறைவாசம் அனுபவிக்கின்றனர்.

சசிகலா விடுதலை விவாதம்
சசிகலா எப்போது விடுதலையாவார்? சசிகலா விடுதலையானால் தமிழக அரசியலில் தலைகீழ் மாற்றங்கள் வருமா? என்பது தொடர்ந்து நடைபெற்று வரும் விவாதம். சசிகலா விடுதலை அவ்வப்போது யூகமான செய்திகள்தான் வெளியாகி வந்தன.

2021 ஜன.27-ல் விடுதலை?
இந்த நிலையில்தான் பெங்களூரைச் சேர்ந்த் நரசிம்மமூர்த்தி என்பவர் ஆர்.டி.ஐ. மூலம் சசிகலா விடுதலை குறித்து கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு பதிலளித்த பெங்களூரு சிறை நிர்வாகம், 2021-ம் ஆண்டு ஜனவரி 27-ந் தேதி சசிகலா விடுதலையாவார். தீர்ப்பின்படி ரூ10 கோடி அபராதம் செலுத்தாவிட்டால் மேலும் 1 ஆண்டு சிறைவாசம் அனுபவிப்பார் என எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

அபராதம் கட்ட மனு
இதனால் சசிகலா அடுத்த சில மாதங்களில் விடுதலையாவார் என்கிற பரபரப்பு மீண்டும் ஏற்பட்டது. ஆனால் சசிகலா ரூ10 கோடி செலுத்தாததால் அவரது விடுதலை கேள்விக்குறியாகவும் இருந்தது. இதனிடையே பெங்களூரு நீதிமன்றத்தில் சசிகலா செலுத்த வேண்டிய ரூ10 கோடி அபராதத்தை கட்டுவதற்கு அவரது தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சசிகலா விரைவில் வெளியே வருகிறார்?
அத்துடன், ஆர்.டி.ஐ. மூலமான கேள்வியில் சசிகலாவின் நன்னடத்தை காலம் குறித்து எதுவும் இடம்பெறவில்லை. இதனையும் ரூ10 கோடி அபராதத்தை செலுத்துவதையும் சேர்த்து கணக்கிட்டால் சசிகலா விரைவிலேயே விடுதலையாவது உறுதி என்கின்றனர் அவரது ஆதரவு வட்டாரங்கள்.












Click it and Unblock the Notifications